23 Feb 2017

வீட்டு வாசலில் தொலை பேசி கதைத்துக் கொண்டிருந்த போதே விமல்ராஜ் மீது துப்பாக்கிச் சூடு –மாமி ஞானம்மா தெரிவிப்பு.

SHARE
புதன்கிழமை (22.02.2017) இரவு 7 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணத்தின் பிரதிப் பணிப்பாளர் ஒரு பிள்ளையின் தந்தையான நேசகுமாரன் விமல்ராஜ் (வயது 31) உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

களுதாவளை 4 ஆம் பிரிவில் அமைந்துள்ள சோமசுந்தரம் வீதியிலுள்ள அவரது வீட்டுக்கு வந்த இனம் தெரியாத நபர்கள் அவரை வெளியே அழைப்பித்து அவருடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது துப்பாக்கியால் அவர் மீது சுட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

பலத்த காயங்களுக்குள்ளான அவர் உடனயாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிக்குடிப்  பொலிஸார் விசாணைகளில் ஈடுபட்டுள்ளனர. 

எமது வீட்டில் இத்துப்பாக்கிச் சூடடுச் சம்பவம் இடம்பெற்றவேளையில் நான் வீட்டில் இருக்கவில்லை அப்போது நான் என தங்கையின் வீட்டில் நின்றேன். 7.30 மணியளவில் தான் எமக்குத் தெரியவந்தது. வலது கையிலும், விலா பகுதியிலும் துப்பாக்கிச் சூடு இடம் பெற்றுள்ளது.  என துப்பாக்கிச் சூட்டுக்கிலக்கான கிழக்கு மாகாணத்தின் பிரதிப் பணிப்பாளர் நேசகுமாரன் விமல்ராஜின் மாமியாரான ஓய்வு பெற்ற ஆசிரியை ஞானம்மா குழந்தைவடிவேல் தெரிவித்தார்.

ஞானம்மா  மேலும் தெரிவிக்கையில்…..

எமது வீட்டில் திருத்த வேலைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற காணத்தினால் மகளின் மாமியாரின் வீட்டிற்குச் ( கிரான்குளத்திற்கு) செல்வதற்கு ஆயத்தாம் செய்து கொண்டிருந்த சமயமே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டு வாசலில் நின்று எனது மருமகள் தொலைபேசியில் உரையாடிக் கொண்டு நின்றுள்ளார் அப்போது வீட்டிற்குள் இருந்த எனது மகளிற்கு டப், டப், என சத்தம் கேட்டுள்ளது. வெளியில் வந்து பார்த்த போது மருமகன் விழுந்து கிடந்துள்ளார், அப்போது ஒருவர் குனிந்து சுட்டுக் கொண்டு நின்றுள்ளார். அப்போது மருமகன் தவழ்ந்து, தவழ்ந்து வீட்டிற்குள் சென்றுன்ளார். இந்நிலையில் மகள் வீட்டிற்குள்ளிருந்து வெளி வருவதைக் கண்ட துப்பாக்கிச் சூடு நடாத்திய நபர் ஓடியுள்ளார்.

மகள் சத்தமிட்டு கத்தியவுடன் அயலிலுள்ளவர்கள் அனைவரும் வந்து விட்டனர். இதன்போது இனம் தொரியாத நபர்கள், இரண்டு பேர் ஜக்கட் அணிந்து தலைக்கவசம் அணிந்து வந்தவர்கள், வீட்டு வாசலில் நின்று தொலைபேசி கதைத்துக் கொண்டிருந்த எனது மருமகனிடம் நீங்களா விமல் என கேட்டுள்ளனர். மருமகன் ஆம் என தெரிவிக்கையில் அவர்மீது துப்பாக்கிச் சூடு நடாத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டுக்கிலக்கான  இடத்திற்கு மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த பொலிஸ் பொறுப்பதிகாரிகள், குற்றத்தடுப்புப் பிரிவினர், புலனாய்வாளர்கள் என பலரும் வருகைதந்த ஆய்வுகளையும், விசாரணைகளையும், முன்னெடுத்து வருகின்றனர். 

சம்பவ இடத்திற்கு வருகைதந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை உறவினர்களிடம் விபரங்களைக் கேட்டறிந்து கொண்டதுடன் இச்சம்பவத்துடன் தொடர்புடைய சூத்திரதாரிகளை பொலிசார் உடன் கைது செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

































SHARE

Author: verified_user

0 Comments: