“ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தியை முதலமைச்சர் தடுத்தார்” என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைர் கூறித் திரிவது ஒரு அரசியல் வங்குரோத்தும்
வஞ்சகமும் கோமாளித்தனமுமாகும் என கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளரும் ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளருமான ஏ. அப்துல் நாசர் தெரிவித்துள்ளார்.
இது விடயமாக அவர் திங்களன்று (02.01.2017) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு தேவையான உபகரணங்களை வழங்குவதற்காக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஏறாவூர் ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டதாகவும், பின்பு வைத்திய அத்தியட்சகர் முதலமைச்சரிடம் இத்தகவலைச் சொன்னதும் அதனை பெற வேண்டாம் என்று முதலமைச்சர் கூறியதாகவும் மாகாண சபை உறுப்பினர் சுபைர் கூறித் திரிவது, அப்பட்டமான பொய்யாகும்.
இந்த ஊருக்கும், மட்டக்களப்பு மாவட்டத்துக்கும், கிழக்கு மாகாணத்துக்கும் எந்த வழியிலும் கிடைக்கும் அபிவிருத்தியைத் தேடிக் கொண்டு வந்து சேர்க்கும் ஒருவராக இருந்து கிழக்கு மாகாண முதலமைச்சர் செயற்பட்டு வருகின்றாரே தவிர, மாறாக வந்து சேரும் அபிவிருத்தித் திட்டங்களையோ உதவிகளையோ தடுத்து நிறுத்தும் ஒருவராக முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் ஒருபோதும் இருந்ததில்லை.
அவர் 2015.02.06 இல் முதலமைச்சராக பதவியேற்று மிகவும் வினைத்திறனாகவும் தமிழ், முஸ்லிம், சிங்களம் என்கின்ற இன வேறுபாடின்றியும் பிரதேச வேறுபாடுகளின்றியும் தன்னுடைய முதலமைச்சர் பொறுப்பை காத்திரமான முறையில் செய்து வருகின்றார்.
கடந்தகால மாகாணசபை ஆட்சி முறைமையை விட முற்றிலும் வேறுபட்டு இலங்கை அரசியல் அமைப்பின் 13 வது சீர்திருத்தத்தில் கூறப்பட்ட மாகாண சபைக்குரிய அதிகாரங்களை வெற்றுக் கடதாசியில் மாத்திரம் வைத்திராமல் அதனை செயற்பாட்டில் கொண்டுவந்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் நன்னோக்கில் அவர் செயற்பட்டு வருகின்றார்.
மேலும், பேச்சுவார்த்தைகள், கோரிக்கைகள், போராட்டங்கள், நட்பு ரீதியான செயற்பாடுகள் மற்றும் அரசியல் செல்வாக்கின் காரணமாக மத்திய அரசாங்கத்திடமிருந்தும் மற்றும் ஏனைய மாகாண முதலமைச்சர்களின் அனுசரணையுடன் மாகாணத்துக்கேயுரிய அதிகாரங்களைப் பெற்று செயற்பட்டுவருவதனை இம்மாகாணமும் மக்களும் நன்கு அறிவார்கள்.
அத்துடன் பிரதமர், ஜனாதிபதி ஆகியோருடன் தனக்குள்ள நட்பின் காரணமாகவும் இவ்வாறான அபிவிருத்திச் செயற்பாடுகளை தன்னுடைய பிரதேசத்துக்கும் கிழக்கு மாகாணத்தின் ஏனைய பிரதேசங்களுக்கும் அரசியல் வெட்டுக்குத்துக்களையும் தாண்டி கொண்டுவந்து சேர்க்கின்றார்.
முதலமைச்சரின் இவ்வாறான பன்முக ஆளுமை நிறைந்த மாகாணத்தின் செயற்பாடுகளை தாங்கிக்கொள்ள முடியாத காழ்ப்புணர்வின் வெளிப்பாடே மாகாண சபை உறுப்பினர் சுபைரின் ஊடக அறிக்கையாகும்.
அந்த வகையில் ஏறாவூரின் பழமை வாய்ந்த பொதுச்சந்தை மற்றும் பெண்சந்தை, ஏறாவூர் நகரசபையின் வளாகத்தில் கலாசார மண்டபமும் சகல வசதிகளையும் உடைய நவீன நூலகமும் நகரசபையின் வருமானத்தை அதிகரிக்கும் பொருட்டு கடைத்தொகுதிகளையும் பல பாடசாலைகளுக்கு நீண்டகாலத் தேவைகளாக இருந்த கட்டிட வசதிகளையும், ஏனைய வீதிகள், வடிகாலமைப்பு, மக்களின் வாழ்வாதாரம், கைத்தொழில் பேட்டைகள், அரச மற்றும் தனியார் துறைகளில் யாரும் வழங்கிடாத அதிகளவிலான வேலைவாய்ப்புக்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், எமது ஆதார வைத்தியசாலையின் நீண்டகாலத் தேவையாக இருந்த அவசர சிகிச்சைப் பிரிவு மகப்பேற்று மருத்துவமுனை அம்மருத்துவமனைக்கான மின்தூக்கி மற்றும் வைத்தியசாலையின் அறுவைச் சிகிச்சைப் பிரிவு, நோயாளர் விடுதிக் கட்டிடங்கள் அதற்குத் தேவையான வைத்திய உபகரணங்கள், வைத்தியசாலைக் கட்டிடங்களுக்கான கண்காணிப்புக் கமெரா கட்டமைப்புக்கள் போன்றவற்றுக்காக பல கோடி ரூபாய் நிதிகளை பெற்று செய்தும், செய்வதற்கான நடவடிக்கைகளிலும் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றார்.
கடந்த இரண்டு வருடங்களாக கிழக்கு மாகாணத்திலிருந்து கல்விக் கல்லூரி ஆசிரிய நியமனங்களை வெளி மாகாணத்துக்குப் பெற்றவர்களை அவர்களின் சொந்த மாகாணத்துக்கே கொண்டுவந்த சேர்த்த வரலாற்றுப் பெருமையும் முதலமைச்சரையே சாரும்.
சுபைர் மாகாண சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் எமது வைத்தியசாலையின் நீண்டகாலக் குறைபாடுகளைத் தீர்க்கமுடியாமல் போனது கவலையான விடயம்.
தன்னால் முடியாமற் போனதை வினைத்திறனுள்ள முதலமைச்சர் செய்து முடிக்கின்ற போது ஏற்படுகின்ற காழ்ப்புணர்ச்சி காரணமாகவே சுபைர் இவ்வாறான பொய்யான விவரங்களைக் கொண்ட அறிக்கைகளை ஊடகங்களுக்காக விட்டுக்கொண்டிருக்கின்றார்.
ஏ. அப்துல் நாசர்,
முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர்,
முதலமைச்சரின் பிராந்திய அலுவலகம்,
ஏறாவூர்.
0 Comments:
Post a Comment