2 Jan 2017

சொறி முட்டைகளால் (ஜெலி பிஸ்) வாவி மீன்பிடியில் பாதிப்பு

SHARE
இம்முறை பருவ மழை பெய்யாததால் மட்டக்களப்பு வாவியில் சொறி முட்டைகள் பல்கிப் பெருகியுள்ளதாக வாவி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால்
தமது மீன்பிடி அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக ஏறாவூர் தொடங்கம் துறைநீலாவணை வரை பரந்து விரிந்து கிடக்கும் மட்டக்களப்பு வாவியில் சொறி முட்டைகள் எப்போதுமில்லாத வகையில் பெருகியுள்ளதால் மீன்பிடிக்காக வாவியில் இடப்படும் அல்லது வீசப்படும் வலைகளை சொறி முட்டைகள் சேதப்படுத்தி விடுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சொறி முட்டைகள் மீன்பிடி வலைகளைச் சுருட்டி கயிறு போன்று முறுக்கி விடுவதால் தாங்கள் மீனுக்காக இடும் வலைகளில் மீன்கள் எதுவும் அகப்படுவதில்லை என்றும் பதிலாக மீன் வலைகள் நாசமாகி விடுவதாகவும் மீனவர்கள் கூறுகின்றனர்.

வழமையாக சொறி முட்டைகள் (ஜெலஜ பஜஸ்கள்) வாவி உவர் நீரில் காலத்துக்கு காலம் உற்பத்தியாகின்ற போதும் அவை மாரிகாலத்தில் நன்னீர் வெள்ளத்தோடு அழிந்து விடுவதுண்டு.

ஆனால், இம்முறை பருவ மழை பெய்யாததால் சொறி முட்டைகள் இயற்கையாக அழிவடையாமல் பல்கிப் பெருகியுள்ளன என்று மீனவர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் ஏ.ஏ. பரீட் தெரிவிக்கும் போது “ஜெலி பிஸ்” எனப்படும் உவர்நீரில் உற்பத்தியாகும் உயிரிகள் வழமையாக வாவிகளில் நன்னீர் வெள்ளம் கலக்கும்போது அதில் இறந்து விடக் கூடியவை.

ஆனால், இம்முறை நன்னீர் வெள்ளம் கடலுக்குள் செல்வதற்குப் பதிலாக கடல் பெருக்கு வாவிகளில் ஊடுருவியதால் இன்னும் அதிகமாக கடலில் காணப்படும் ஜெலி பிஸ் களும் வாவிக்குள் வந்து சேர்ந்து விட்டன. அதனாலேயே மீனவர்கள் தற்போது பாதிப்பைச் சந்தித்து வருகின்றார்கள்.

இயற்கையாக ஏற்படும் பெருமழை வெள்ளத்தினாலேயே இந்த ஜெலி பிஸ்கள் அழிய வாய்ப்புண்டு” என்று தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: