1 Jan 2017

பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படாதிருப்பது நல்லாட்சிக்கு நல்லதல்ல.

SHARE
கிழக்கிலே யுத்தம் முடிந்து சுமார் 10 வருடங்களாகின்ற போதிலும் பொதுமக்களின் குடியிருப்பு மற்றும் வாழ்வாதாரத் தேவையைப் பூர்த்தி செய்கின்ற காணிகள் பொலிஸ், மற்றும் படையினரால் இன்னமும் விடுவிக்கப்படாமலிருப்பது
நல்லாட்சி மீதான சந்தேகத்தை வலுக்கச் செய்கிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுமக்களின் குடியிருப்புக் காணிகள் மற்றும் வாழ்வாதாரத் தேவைக்கான காணிகள் இன்னமும் விடுவிக்கப்படாதிருப்பது பற்றிய விவரங்களைத் தெரிவிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது விடயமாக ஞாயிறன்று (01.01.2017) கருத்துத் தெரிவித்த அவர், இந்த 2017 ஆம் ஆண்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்களும் நாமும் அவாவுறுகின்றோம்.

யுத்தம் முடிந்து சுமார் 10 ஆண்டுகளாகிவிட்ட போதும் மக்கள் நலத் திட்டங்களினூடாக மக்களின் வாழ்வாதாரத் தேவைகளைக் கூட நிறைவு செய்து கொடுக்க முடியாதவுக்கு காணிகள் விடுவிக்கப்படாமை போன்ற தடைகள் இருப்பது கவலைக்குரிய விடயம்.

இந்த நல்லாட்சியிலே மக்களின் குடியிருப்பு மற்றும் வாழ்வாதாரக்  காணிகளும் மக்கள் நலனோம்புத் திட்டங்களை அமுல்படுத்தும் நிறுவனங்களுக்குச் சொந்தமான காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளியில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் கிழக்கிலே இந்து மக்களின் பிரபலமான ஸ்ரீகாமாக்ஷி  வழிபாட்டிடத்திற்குச் சொந்தமான காணியில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் காவல் அரண் விடுவிக்கப்படாததால் விதவைக் குடும்பங்களுக்கான வாழ்வாதாரத் திட்டங்களை வழங்க முடியாதுள்ளது.

வறுமைக் கோட்டுக் கீழ் வாழ்கின்ற 72 விதவைக் குடும்பங்களுக்கு வீடுகளும், 500 இற்கு மேற்பட்ட வசதி குறைந்த சிறுவர்களுக்கு கல்விக்கான வசதிகளையும் சுவாமி ராமதாஸ் நிறுவனத்தின் கருணாலய நிருவாகம் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கின்றார்கள்.

ஆனால், தற்போது பொலிஸ் காவல் அரண் அமைக்கப்பட்டுள்ள 3 ஏக்கர் பரப்பளவிலான இந்தக் காணியிலே வாழ்வாதாரத் தொழில்களை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளைச் செய்வதற்கு இந்தக் காவல் அரண் தொடர்ந்து அங்கிருப்பது தடையாகவுள்ளது.

இந்த பொலிஸ் காவலரண் அமைக்கப்பட்டிருக்கும் காணி விடுவிக்கப்பட வேண்டும்.

மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்களிலே, பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலே பேசப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டபோது சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட மற்ற பொறுப்புவாய்ந்த அனைத்து அதிகாரிகளும் காணிகள் 3 மாதங்களில் விடுவிக்கப்படும் என வாக்குறுதியளித்தார்கள்.
ஆனால், அது இன்றளவும் அமுல்படுத்தப்படாததால் மக்கள் தமது உரிமையைக் கேட்டு தெருவுக்கு வந்திருக்கிறார்கள்.

எனவே, இது போன்று மட்டக்களப்பு மாவட்டத்திலே இன்னமும் பொலிஸ் மற்றும் படையினர் வசமுள்ள பொது மக்களின் குடியிருப்புக் காணிகள், வாழ்வாதாரக் காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

SHARE

Author: verified_user

0 Comments: