இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய வாவி மட்டக்களப்பு வாவியாகும். இதனை நம்பி சுமார் 13 ஆயிரம் மீனவ குடும்பங்கள் ஜீவனோபாயத்திற்காக காத்திருக்கின்றனர்.
இயற்கை எழில் நிறைந்த பாடும் மீன்கள் வாழும் வாவி என உலகப் புகழ்பெற்ற இவ்வாவியில் கடந்த இருமாதங்களாக படர்ந்து வரும் ஆற்று வாழை எனும் ஒரு வகை தாவரத்தினால் மீனவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
குறித்த தாவரங்கள் மிக அதிகமாக வாவியினுள் படர்வதால் வலைகளை பிய்த்து வருவதாகவும் மீனவர்கள் தோல் நோய்களுக்கு ஆளாவதாகவும் தோணிகளை வாவியினுள் செலுத்த முடியாதுள்ளதாகவும் குறிப்பிடும் மீனவர்கள் முதலைகளும் இங்குள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இந்த ஆற்று வாழை தொல்லையினால் தொழிலையே கைவிட்டு வேறு தொழில்களை நாடிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
எனவே குறித்த தாவரங்களை வாவியிலிருந்து அகற்றி தருமாறு கடற்றொழில் திணைக்களத்தை மீனவர்கள் கோரி நிற்கின்றனர்.

0 Comments:
Post a Comment