20 Sept 2015

வடமாகாண விவசாய அமைச்சர் கிழக்கில்

SHARE
கிழக்கின் விவசாய எழுச்சிக் கண்காட்சி மற்றும், விற்பனை இறுதி நாளான சனிக்கிழமை நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண விவசாய, கால்நடை, நீர்ப்பாசன, நீர் வழங்கல் மற்றும் கூட்டுறவு அமைச்சர் பி. ஐங்கரநேசன், கலந்து கொண்டுள்ளார்.
மட்டக்களப்பு சித்தாண்டி வந்தாறுமூலை மகா வித்தியாலயத்தில் இந்த விவசாயக் கண் காட்சியின் மூன்றாவதும் மற்றும் இறுதி நிகழ்வும் இன்று  இடம்பெற்றது.
கிழக்கு மாகாண விவசாயிகள், கைப்பணியாளர்கள், மீன் வளர்ப்போர், கால்நடை மற்றும் கோழி வளர்ப்போர்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தும் நோக்கில் இந்தக் கண்காட்சியும் முற்றிலும் இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக மட்டக்களப்பு விவசாயத் திணைக்கள விரிவாக்கற் பணிப்பாளர் ஆர். கோகுலதாஸன் தெரிவித்தார்.
புதிய நெல் இனங்கள் மற்றும் ஏனைய உப உணவுப் பயிர்கள். விவசாய இரசாயன மற்றும் பசளை வகை, விவசாய உபகரணங்கள் மற்றும் இயந்திர வகை, உயிர்வாயு உற்பத்தி, பாற்பண்ணை முகாமைத்துவம், கால்நடைத் தீவனம் மற்றும் புல் உற்பத்தி, கோழி வளர்ப்பும் முட்டை உற்பத்தியும், மீன்பிடி உபகரணங்களும் செயற்பாடுகளும், அலங்கார மீன் வளர்ப்பு முறைகள், கூட்டுறவுத்துறைச் செயற்பாடுகள், நவீன விவசாய நீர்ப்பாசனத் தொழினுட்பங்கள் என்பன இந்தக் கண்காட்சியில் இடம்பிடித்திருந்தன.இறுதி நாள் நிகழ்வில் வடமாகாண விவசாய, கால்நடை, நீர்ப்பாசன, நீர் வழங்கல் மற்றும் கூட்டுறவு அமைச்சர் பி. ஐங்கரநேசனுடன் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. சிறிநேசன், கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரக்குமார், மாகாண சபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம்,எம்.எஸ். சுபைர், ஜி; கிருஷ்ணபிள்ளை, ஆகியோருட்பட அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

SHARE

Author: verified_user

0 Comments: