அகில இலங்கை மக்கள் காங்கிரஸை அமோகமாக ஆதரித்த வாக்காளப் பெருமக்களுக்கு எனது உளம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து அவர் இன்று (19) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 'இறைவனின் உதவியால் எமது இலக்கை நெருங்கியிருப்பதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சியடைவதுடன், அதற்காக எம்முடன் கைகோர்த்து, தொண்டர்களாக மாறிய வாக்காளர்களுக்கு எனது நன்றிப் பூக்களை காணிக்கையாக செலுத்துகின்றேன்.
மக்களின் விருட்சமான ஆதரவினால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டவர்களுள் ஐந்து மாவட்டங்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கூடிய விருப்பு வாக்குகளுடன் வெற்றியடைந்துள்ளதன் மூலம் எமது கட்சிக்கு ஐந்து பிரதிநிதித்துவங்கள் கிடைத்துள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் இம்முறை முதன்முறையாக அதுவும் தனித்துப் போட்டியிட்ட எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை, அலை அலையாகத் திரண்டு மக்கள் ஆதரிக்க முன்வந்த போதிலும் இறுதி நேரத்தில் முஸ்லிம் காங்கிரஸ் பல்வேறு பித்தலாட்டங்களை நடத்தி, பணத்தையும் வாரி இரைத்து வாக்குகளை சூறையாடியதன் காரணமாகவே சுமார் இரண்டாயிரம் வாக்கு வித்தியாசத்தில் எமக்கான ஒரு ஆசனம் கைநழுவிப் போயுள்ளது. இருந்தபோதிலும் இத்தகைய ஏமாற்று வித்தைகளுக்கு மத்தியிலும் 33122 வாக்குகளை அளித்து எமது கொள்கையை ஏற்று, சமூக விடுதலைக்கான மாற்றுத் தலைமைத்துவத்தின் கரங்களைப் பலப்படுத்த முன்வந்துள்ள நெஞ்சங்களுக்கு மிகவும் உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அதேவேளை தேர்தல் தினத்தன்று அம்பாறை மாவட்டத்தில் வாக்குப்பதிவு 65 வீதம் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் வெளியிடப்படுள்ள பெறுபேறுகள் 75 வீத வாக்குப் பதிவைக் காட்டுகிறது. இந்த மர்மம் குறித்து எமது கட்சி சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஆலோசித்து வருகிறது என்பதையும் இதன் மூலம் எமது கட்சி ஆதரவாளர்களின் வாக்குகள் வீணாகாமல் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துக் கொள்வதுடன் இந்த முயற்சி வெற்றியடைய பிரார்த்திக்குமாறு எமது வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
பொதுவாக இத்தேர்தல் முடிவகள் எமது கிழக்கு மாகாணத்திலும் தேசிய ரீதியிலும் அமைச்சர் ரிஷாட்; பதியுதீனின் தலைமைத்துவத்துக்கு அங்கிகாரம் கிடைத்திருப்பதை பறைசாற்றுகிறது. எதிர்வரும் காலங்களில் எமது கட்சியின் பலம் இன்னும் பன்மடங்கு அதிகரிப்பதற்கான சமிக்ஜையை இத்தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன' என்றார்.
0 Comments:
Post a Comment