20 Aug 2015

தேர்தல் சட்டத்தினை மீறிய 899 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்

SHARE
தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச் சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள 899 பேருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.

 தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து இதுவரை 899 பேர் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்புக்கள் மற்றும் தேர்தல் சட்ட விரோத செயற்பாடுகள் காரணமாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
பொதுத் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் சட்டமா அதிபரின் 
அறிவுறுத்தல்களுக்கமைய இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் புதன்கிழமை கிடைக்கப்பெற்ற 10 முறைப்பாடுகளுக்கமைய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், கைது செய்யப்பட்டவர்களுக்கெதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மாத்தறை கம்புறுபிட்டிய பிரதேசத்தில் 250,000 ரூபாய் பெறுமதியுடைய உள்நாட்டு வெளிநாட்டு மதுபான போத்தல்கள் 150 வைத்திருந்த நபர் ஒருவர், மதுவரி அதிகாரி காரியாலயத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பெண்களை வைத்துக் கொண்டு தேர்தல் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மதுபான வியாபாரி ஒருவரே இவ்வாறு செவ்வாய்கிழமை(18) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கு முன்னரும் இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக இவர் கைதுசெய்யப்பட்டு தண்டணை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் காலங்களில் மதுபானக் கடைகள் மூடுப்பட்டு இருப்பதனால் ஒரு போத்தல் 1500 ரூபாவுக்கு விற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது  
SHARE

Author: verified_user

0 Comments: