25 Aug 2015

கிழக்கு மாகாண சபையில் இருந்து பாராளுமன்றம் சென்றோருக்கு வாழ்த்து- 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்து

SHARE

கிழக்கு மாகாண சபை அமர்வு இன்று காலை 9.30 மணிக்கு பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா தலைமையில் ஆரம்பமானது.
இன்றைய சபை அமர்வின்போது கிழக்கு மாகாண சபையில் அமைச்சர்களாவும், உறுப்பினர்களாகவும் இருந்தவர்கள் ஐந்து பேர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று சென்றுள்ளமைக்காக அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து சபை நடவடிக்கைகாளை பிரதித் தவிசாளர் இந்திரகுமார் ஆரம்பித்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கிழக்கு மாகாண சபையில் இருந்து பாராளுமன்றம் சென்றவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து உரை நிகழ்த்தினார்.
அவரது உரையில்:
கிழக்கு மாகாண சபயில் இருந்து இலங்கையின் உயர்ந்த சபையான பாராளுமன்றத்திற்குச் சென்றுள்ள எமது உறுப்பினர்களை மக்கள் விருப்பத்துடன் அவர்களின் வாக்குப்பலத்துடன் அனுப்பி வைத்துள்ளமையானது, மக்களின் தேவைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதற்கான சான்றே தவிர வேறொன்றுமில்லை.
எனவே மக்கள் பிரதிநிதிகளான அனைவரும் மக்களுக்காற்ற வேண்டிய பாரிய பணிகள் ஏராளம் உள்ளது அவைகளுக்கு முன்னுரிமை வழங்கி மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றி போற்றப்படும் ஒரு பிரதிநிதியாகத் திகழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று தனது வாழ்த்துரையில் கூறினார்.
அதன்பின்னர் அமைச்சர்களான துரைராஜசிங்கம், ஆரியபதி கலபதி, தண்டாயுதபாணி மற்றும் சகல உறுப்பினர்களும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து உரையாற்றினர்.
இன்றைய சபை அமர்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான ஆர்.எம்.அன்வர், ஏ.எம்.ஜெமீல் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
இதேவேனை, இங்கு வாழ்த்துத் தெரிவித்து உரையாற்றிய, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர்,
மக்கள் பிரதிநிதிகள் என்பவர்கள் எம்மை நம்பி வாக்களித்துள்ளனர். அவர்களின் அபிலாசைகளை நிறைவேற்றி அவர்களுக்கு முன்னுரிமை வழங்கிய ஒரு பிரதிநிதியாகத் திகழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார் அவர்.
13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்து
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் அரசியல் அமைப்பில் கொண்டுவரப்பட்ட13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இன்று மாகாண சபை அமர்வின்போது வலியுறுத்தி உரையாற்றினார். 
கிழக்கு மாகாணசபையின் அமர்வு இன்று காலை பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா தலைமையில் இடம்பெற்றபோது முதலமைச்சர் மேற்கண்டவாறு உரையாற்றினார்.
அவர் மேலும் கூறுகையில்,
நீண்ட காலம் புரையோடிப்போயிருந்த இனப்பிரச்சினைக்கு ஓரளவேனும் தீர்வைக்காணும் வகையில் கொண்டுவரப்பட்ட இந்தத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கடந்த கால அரசுகள் பின்னிற்கின்றன.
 அத்துடன் இது சம்மந்தமாக சிறுபான்மைச் சமூகங்களும் அவர்களைப் பிரதிநித்துவப்படுத்தும் கட்சிகளும் பல்வேறு கோரிக்கைகளை விடுத்திருந்தபோது அவற்றை செவிமடுக்காது இழுத்தடிப்புச் செய்தனர்.
அதிகார பரவலாக்கல் என்ற அம்சத்தை கொண்டுவரும் நோக்கிலேயே இந்த திருத்தம் கொண்டுவரப்பட்டது.
இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை ஜனாதிபதி ஜேஆர் ஜெயவர்தனவுக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்ட பின்னரே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இதன்மூலம் சிறுபான்மைச் சமூகங்களுக்கு விமோசனம் கிடைக்குமென பல்வேறு மட்டங்களிலும் எதிர்பார்க்கப்பட்ட போதும் அது சரிவர நிறைவேற்றப்படாமையானது வேதனையான ஒன்றே.
இன்று வடக்கு கிழக்கில் சமூகங்களுக்கிடையில் முறன்பாடுகளைத் தோற்றுவித்துள்ள காணிப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர இலங்கை இந்திய ஒப்பந்தம் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தையும் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் வலியுறுத்தினார். 
அத்துடன் கிழக்கு மாகாண சபை நல்லாட்சிக்கு எடுத்துக்காட்டாக விழங்குவதை ஞாபகப்படுத்திய அவர் மாகாணசபை ஆட்சி அதிகாரங்கள் மூவினங்களுக்கிடையே முறையாகப் பகிரப்பட்டுள்ளாதாக சுட்டிக்காட்டினார்.
அமைச்சரவையில் உள்ள தமிழ் சகோதரர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் இதனை ஏற்றிருப்பதையும் அவர் நினைவு படுத்தினார்.
கடந்தகால மாகாண அரசு போலன்றி தற்போது பதவியில் இருக்கும் மாகாண அரசு நேரினையையும் வெளிப்படைத் தன்மையையும் இதய சுத்தியையும் கொண்டு இயங்குவதை ஒவ்வொருவரின் மனச்சாட்சியைத் தொட்டுப்பார்த்தால் விளங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்
SHARE

Author: verified_user

0 Comments: