தமிழர்களின் வாக்குகள் சிதறடிக்கப்படுமானால் தமிழர்களின் பிரதிநிதித்துவம் குறையும் ஆபத்து ஏற்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கொல்லன் உலை நரசிங்க வைரவர் ஆலயத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தமது வேட்பாளர்கள் மீது அதிருப்தி இருக்குமானால் கட்சிக்கு மட்டும் வாக்களியுங்கள் எனக் குறிப்பிட்ட அவர்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 500 வாக்குகளை குறைவாகப் பெற்றிருந்தால் ஒரு தமிழரும் நான்கு முஸ்லிம்களும் தெரிவு செய்யப்பட்டிருப்பார்கள் எனக் கூறியுள்ளார்.
மாறாக 10 ஆயிரம் வாக்குகளை தாம் இன்னும் பெற்றிருந்தால் நான்கு நாடாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருப்போம். எனவே தமிழ் மக்கள் இதனை நன்கு சிந்தித்து எதிர்வரும் தேர்தலில் தமது வாக்குகளை அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 75 வீதம் தமிழர்களும் 24.1 வீதம் முஸ்லிம்களும் உள்ளதாகவும் இந்த விகிதாசாரத்தின் படி நான்கு தமிழ் பிரதிநிதிகளும் ஒரு முஸ்லிம் பிரதிநிதியும் தெரிவாக வேண்டும் எனக் கூறியுள்ளார்.
2004 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் இந்த அடிப்படையிலேயே தாங்கள் தெரிவு செய்யப்பட்டதாகக் கூறிய அவர்,
ஆனால், 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் எமது பிரதிநிதித்துவம் மூன்றாகக் குறைந்தது எனவும் அந்த வாக்குகள் பேரினவாதிகளுக்கு சென்றுள்ளது என்பதை ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டும் என பா. அரியநேத்திரன் வலியுறுத்தியுள்ளார்.
0 Comments:
Post a Comment