ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தைரியசாலி திகாமடுல்ல
மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி
எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
மு.கா தலைமைக்கு எனது மரியாதை என தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள
அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் அவர்
மேலும் தெரிவிக்கையில்,
கட்சியின் உயர்பீடக் கூட்டம் நேற்று நள்ளிரவு வரை நடைபெற்றது.
இதில் ஜனாதிபதித் தேர்தலில் கட்சி யாருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக
உயர்பீட உறுப்பினர்களின் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இதில் அநேகமான
உறுப்பினர்கள் மக்களின் விருப்பத்தோடு சேர்ந்து முடிவெடுக்கப்பட வேண்டும்
என வலியுறுத்தினார்கள்.
இதில் குறிப்பாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சகோதரர் கே.எம்.ஏ.
ஜவாத், பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் ஆகியோர் கட்சியினை
சூழ்ச்சிக்காரர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என மிகவும் உணர்வுபூர்வமாக
பேசினார்கள். அவர்களுக்கு நான் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இதே நேரம் நானும் மக்களின் உணர்வுக்கும், அபிலாஷைகளுக்கும் மதிப்பளித்து கட்சி தனது தீர்மானத்தை எடுக்க வேண்டும என வலியுறுத்தினேன்.
குறிப்பாக கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் மிக நிதானமாக
எல்லோரினதும் கருத்துக்களையும் செவிமடுத்தார். அவர் யாரின்
நிர்ப்பந்தத்திற்கும் சூழ்ச்சிக்கும் அகப்படாமல் தைரியமாக முடிவெடுக்கின்ற
ஒரு தலைமையாக நான் நேற்றிரவு அவரைக் கண்ணுற்றேன்.
தலைவர் ஹக்கீம் மிக தைரியசாலி என்பதை இந்ந நாட்டு முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை குறிப்பிட்டுக் கூற விரும்புகின்றேன்.
மேலும் இத்தருணத்தில் அரசுக்கு ஆதரவளிக்குமாறு கட்சிக்கு நாங்கள் அழுத்தம்
கொடுத்திருந்தால், நாங்கள் அமைச்சுப் பதவிகளையும், பண ரீதியான
வரப்பிரசாதங்களையும் பெற்றிருக்க முடியும். ஆனால் இவை அனைத்தையும்
உதரித்தள்ளிவிட்டு மக்கள் வழங்கிய இந்த அமானிதத்தை பாதுகாத்துள்ளேன்
என்றார்.
0 Comments:
Post a Comment