19 Mar 2021

உலக உணவு நிகழ்ச்சித் திட்டத்தினூடாக மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய திட்டங்கள் தொடர்பாக ஆராயும் விசேட செயலமர்வு.

SHARE

உலக உணவு நிகழ்ச்சித் திட்டத்தினூடாக மட்டக்களப்பில்  முன்னெடுக்கப்படவுள்ள புதிய திட்டங்கள் தொடர்பாக ஆராயும் விசேட செயலமர்வு.

மட்டக்களப்பில் உலக உணவுத் திட்டத்தினூடாக மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாக ஆராயும் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில்   வெள்ளிக்கிழமை (19)மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. 

இதன்போது எதிர்வரும் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் நடைறைப்படுத்தப்படவுள்ள  திட்டங்கள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்தும் போது எதிர் நோக்கும் சவால்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

இதன் போது இங்கு கலந்துரையாடப்பட்ட திட்டங்களின் ஊடாக வறுமைக் கோட்டின்கீழ் வாழும் மக்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்த வேண்டும் என்பதுடன் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது. இதுதவிர கடந்த ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட பிரதேசமாகிய வவுனதீவு பிரதேச செயலாளர் பிரிவில் திட்டத்தை அமுள்படுத்துவதற்காக உள்வாங்கப்பட்ட பத்து கிராமங்களிலும் முன்னெடுக்கப்பட்ட கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு மற்றும் கிராமிய சிறு குளங்கள் புணரமைப்பு தொடர்பாகவும் நடைமுறைப்படுத்திய ஏனைய திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்களும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது. 

அதேபோன்று எதிர்வரும் காலங்களில்  வறுமைக் கோட்டின்கீழ் வாழும் ஆடு, மாடு, கோழி வளர்பாளர்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்த அவற்றுக்கான கூடாரங்கள் அமைத்துக்கொடுத்தல் மேலும் நீர் பாசனத்திட்டம், விவசாய உற்பத்திகளுக்கான பெறுமதி சேர் வசதிகள் மற்றும் நன்னீர் மீனவர்களுக்கான மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட வேண்டியதன்  அவசியம்  தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது அரசாங்கத்திற்கும் உலக உணவுத் திட்டத்திற்குமான இணைப்பாளர் முஸ்தபா நிஹ்மத், நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் துசாரா கீர்த்திரெட்ண, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணிமூர்த்தி, மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜதீஸ்குமார், கமநலசேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் கே.ஜெகன்நாத்,உலக உணவு நிகழ்ச்சித்திட்ட மட்டக்களப்பு மாவட்ட நிகழ்ச்சி இணைப்பாளர் பத்மரஜினி கேதீஸ்வரன்  உள்ளிட்ட பலரும் பிரசன்னமாயிருந்தனர்.





SHARE

Author: verified_user

0 Comments: