22 Nov 2020

அனைவரது மனங்களையும் கவர்ந்திருந்த ஊடகவியலாளரின் இறுதிப் பயணம் நாளை

SHARE

அனைவரது மனங்களையும் கவர்ந்திருந்த ஊடகவியலாளரின் இறுதிப் பயணம்  நாளை
நியூஸ் பெஸ்ட்டின் காலம்சென்ற ஊடகவியலாளர் குழந்தைவேல் சந்திரமதியின் இறுதிக்கிரிகைகள் கண்டி கந்தகடியவில் நாளை (23) இடம்பெறவுள்ளது.

அன்னாரின் பூதவுடல் புஞ்சி பொறல்லையில் உள்ள தனியார் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், நாளை பி. ப 1.00 மணிக்கு இறுதிக் கிரிகைகள் கண்டியில் இடம்பெறவுள்ளது.

கண்டி புசல்லாவையில் குழந்தைவேல் சாந்தா  தம்பதியினருக்கு முதலாவது பிள்ளையாக 1991 ஆம் ஆண்டு யூலை மாதம் ஏழாம் திகதி சந்திரமதி பிறந்தார், புப்புறசஷ தமிழ் வித்தியாலயத்தில் எட்டாம் தரம் வரை கல்வி பயின்ற சந்திரமதி புசல்லாவை இந்து தேசிய கல்லூரியில் உயர்தரம் வரை கல்வி கற்று பாடசாலை சமூகத்தின் மத்தியில் நன் மதிப்பை பெற்றிருந்தார். தமிழகத்தின் நாமக்கல் எஸ்.எஸ்இன் கல்லூரியில் தனது படப்படிப்பை பூர்த்தி செய்திருந்தார்.

தினக்குரல் பத்திரிகை மூலம் ஊடக துறைக்குள் பிரவேசித்த சந்திரமதி கடந்த 2016 ஆம் ஆண்டு நியூஸ் பெஸ்ட் ஊடகவியலாளராக இணைந்துகொண்ட இவர் அதே ஆண்டில் சுப்பிரமணியம் சரவணனை திருமணம் செய்துகொண்டு தனது இல்லற  வாழ்க்கையை ஆரம்பித்தார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக நியூஸ் பெஸ்ட் உடன் பயணித்த இவர் ஒரு செய்தியாளராக மற்றும் செய்தி தயாரிப்பாளராக மக்கள் பிரச்சனைகளை வெளிக்கொணர்வதில் மிகுந்த ஆர்வத்துடன் செயற்பட்டிருந்ததுடன், மக்கள் சக்தி திட்டத்துடன் மக்கள் பிரச்சனைகளை தேடிச்சென்றிருந்தார்.

சிறந்த பண்பினால் அனைவர் மனங்களையும் கவர்ந்த இவர் துன்பப்படும் மக்களின் பிரச்சனைகளுக்கு துயர் துடைக்கும் சக்தியின் நிவாரண யாத்திரைகளிலும் ஆர்வத்துடன் செயற்பட்டிருந்தார்.

இறுதிவரை ஊடகப்பணிக்காக தன்னை அர்ப்பணித்த சந்திரமதி திடீர் சுகயீனம் காரணமாக நேற்றைக்கு முன்தினம் நள்ளிரவில் இவ்வுலகை விட்டு பிரிந்திருந்தார்.

ஒரு போதும் யாராலும் மறக்கமுடியாத  ஒரு பேரிழப்பாகவே திகழ்ந்துகொண்டிருக்கும் இவரின் ஆத்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திப்போம்.



SHARE

Author: verified_user

0 Comments: