8 May 2016

போலி இசை நிகழ்ச்சிக்கென டிக்கற் விற்பனை செய்தவர்களுக்கு விளக்கமறியல்.

SHARE
மாபெரும் இசை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறி ஏமாற்று ரீதியில் டிக்கற்றுக்களை அச்சடித்து விற்பனை செய்து கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராசா உத்தரவிட்டுள்ளார்.
மட்டக்களப்பு  கல்லடியிலுள்ள பாடசாலையொன்றின் அரங்கில் இந்த மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெறவிருப்பதாகவும் அதனைக் கண்டு களிப்பதற்கு குறிப்பிட்ட தொகையினரே அனுமதிக்கப்படவிருப்பதாகவும் கூறி தலா நூறு ரூபா என பெறுமதி குறிக்கப்பட்ட டிக்கட்டை இந்தக் குழுவினர் விற்பனை செய்து பணம் திரட்டிய இருவரை காத்தான்குடிப் பொலிஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து நீதிமன்றில் நிறுத்தினர்.

இவர்கள் இருவரையும் மே 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராசா உத்தரவிட்டார்.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இருவரில் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்றும் மற்றையவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இசை நிகழ்ச்சிக்கு டிக்கட்டை வாங்கிக் கொண்ட ஆர்வமுள்ள ஒரு சிலர் இது குறித்து விசாரித்தறிந்ததில் அவ்வாறான ஒரு இசை நிகழ்ச்சி குறித்த அரங்கில் இடம்பெறுவதற்கு எந்த ஏற்பாடுகளும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இதன் பின்னர் இந்தப் போலி இசை நிகழ்ச்சிக்கான நிதி வசூல் பற்றி பொலிஸாருக்கு அறிவித்தததையடுத்து சம்பந்தப்பட்டவர்களில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அந்தக் குழுவிலுள்ள ஏனையவர்களைத் தேடி பொலிஸார் வலை விரித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து போலியான டிக்கட்டுக்கள் மூலம் வசூலிக்கப்பட்ட சுமார் 3 இலட்ச ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மட்டக்களப்பிலுள்ள ஒரு மாற்றுத் திறனாளிகள் நலனோம்பு நிலையத்திற்கு நிதி திரட்டும் நோக்கிலேயே இந்த நிகழ்ச்சி நடாத்தப்படுவதாக கூறி மோசடிக் கும்பல் அந்த நிறுவனத்தின் கடிதத் தலைப்புக்களைப் பாவித்திருப்பது விசாரணைகளில் இருந்து தெரிய வந்திருப்பதாகவும் பொலிஸார் மேலும் கூறினர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் விரிவான விசாரணைகள் இடம்பெறுகின்றன.

SHARE

Author: verified_user

0 Comments: