1 Jun 2025

அரசியலில் சாதிக்க முடியும் என்பனை நிரூபித்த கௌரி, மட்டு மாநகர சபையில் வட்டாரத்தினை வென்ற முதல் பெண்.

SHARE

அரசியலில் சாதிக்க முடியும் என்பனை நிரூபித்த கௌரி, மட்டு மாநகர சபையில் வட்டாரத்தினை வென்ற முதல் பெண்.

(.புருஷோத்மன்)

காலங்கள் கடந்து செல்லும் கணப் பொழுதில் நாளுக்கு நாள் பாமரமக்கள் முதல் படித்தவர்கள்வரை ஒவ்வொருவருடைய வாழ்வும் பல்வேறு மாற்றங்களுடனேயே பயணித்துக் கொண்டிருக்கிறது. உள்நாட்டிலும்சரி சர்வதேச ரீதியிலும் சமூக, அரசியல், பொருளாதார சூழ்நிலைகளில் பல்வேறு விதமான மாற்றங்களை காணக் கூடியதாகவுள்ளது. அந்த அடிப்படையில் இலங்கையில் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலானது மக்களிடத்திலும், மக்கள் பிரதிநிதிகளிடத்திலும், பல்வேறு விதமான பல படிப்பினைகளை தோற்றுவித்துள்ளதனை காணமுடிகிறது. இலங்கையில் உள்ளுராட்சி மன்றங்களில் பெண்களினதும், இளைஞர்களினதும், பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக பல சட்ட ஏற்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன் பெண்களுக்கான வாய்ப்புகள் வட்டார முறை மூலமாகவும், பட்டியல்முறை மூலமாகவும், உறுதிப்படுத்தப்படக்கூடிய நிலை காணப்பட்டாலும் கூட இளைஞர்களுக்கான நிலையான வாய்ப்பு என்பது சற்று மறைமுகமானதாகவே காணப்படுகின்றது.

இலங்கையின் அரசியல் செயற்பாடுகளில் பெண்களின் வகிபாகமானது உலகளாவிய ரீதியில் பார்க்கும் போது குறைவானதொரு நிலையிலேயே காணப்படுகிறது. பெண்களுக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் 1931 ஆம் ஆண்டு கிடைக்கப் பெற்றாலும் இன்று வரை அரசியலில் பெண்களின் பங்களிப்பு என்பது தாழ்நிலையிலேயே காணப்படுகின்றது. முதல் முறையாக 1990 ஆம் ஆண்டு உள்ளுர் அதிகார சபைத் தேர்தல் சட்ட திருத்தத்துக்கமைய 18 வயது தொடக்கம் 35 வயதுக்கிடைப்பட்ட இளைஞர்களின் பிரதிநிதித்துவத்துக்காக 40 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது. எனினும், பெண்களுக்கான இடஒதுக்கீட்டுக் கோரிக்கை ஆணைக்குழுவினால் அக்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கவில்லை. பின்னர் 1997 ஆண்டில் பொதுஜன முன்னணியினால் அரசியல் வரைவு முன்வைக்கப்பட்டு அதில் உள்ளுராட்சி நியமனங்களில் பெண்களுக்காக 25 சதவீத ஒதுக்கீட்டினை உறுதிப்படுத்த கோரப்பட்டது. இது பல தடைகளை கொண்டிருந்தாலும் ஆரம்ப அடித்தளமாக அமைந்திருந்தது. பின்னர் அது நிறைவேறாமலேயே போனது. தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி 25 சதவீத ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்தும் நோக்கில் பெண்களுக்கான தனியான தேர்தல் விஞ்ஞாபன பிரசாரத்தினை முன்னெடுத்திருந்ததுடன் இந்த கட்சியும் அதிகாரத்துக்கு வந்து மூன்று வருடங்களுக்குள் கலைக்கப்பட்டமையினால் இது தொடர்பிலான முன்னேற்றங்கள் ஏற்பட வழிகோலவேயில்லை.

பின்னர் 2017 இல் புதிய கலப்பு உறுப்பினர் விகிதாசார முறைமையின் கீழ் பெண்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்தும் வகையில் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டு சில ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 25 வீத பெண் பிரதிநிதித்துவம் எதிர்பார்க்கப்பட்ட போதிலும், 23 சதவீதம் வரையே பெண்களது உள்ளுர் மட்ட பிரதிநிதித்துவம் கிடைக்கப் பெற்றது.  206142 - 9 வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருந்த தரவுகளுக்கமைய தெரிவு செய்யப்பட்ட 8,325 உறுப்பினர்களுள் 1,919 பெண் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இது மொத்த உறுப்பினர் தொகையில் 23 வீதமாக அமைந்திருந்தது. இதனை தொடர்ந்து இந்த வருடம் 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை வட்டார முறை மூலமாக பத்து வீதமாகவும் பட்டியல் மூலமாக ஐம்பது வீதமாவும் ஒட்டு மொத்த உறுப்பினர்களில் இருபத்தைந்து வீதம் கொண்டதாக அமையக் கூடிய வகையில் தேர்தல் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டமையானது மேலும் உள்ளுராட்சி மன்றங்களில் பெண்களின் வகிபாகத்தினை அதிகரிப்பதற்கான ஓர் வாய்ப்பாக அமைந்ததனை காண முடிகிறது.

அதனடிப்படையில் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் பெண்கள் வேட்பாளர்களாக தேர்தலில் களம்; கண்டாலும் வட்டாரத்தினை வெற்றி பெற்றது என்பது கடிளமானதாக அமைந்துள்ளதை காணமுடிகிறது. இருப்பினும் சில பெண் வேட்பாளர்கள் தங்கள் கடின முயற்சியின் பயனாக வெற்றி பெற்றுள்ளதை காணமுடிகிறது. அதில் ஒருவராக இலங்கை தமிழரசு கட்சியின் சார்ப்பில் மட்டக்களப்பு மாநகரசபையின் திராய்மடு வட்டாரத்தில் போட்டியிட்ட தயாளகுமார் கௌரி வட்டார விகிதாசார கலப்பு முறை தேர்தலில் வட்டாரத்தில் முதன் முறையாக வெற்றி பெற்ற ஓர் பெண் வேட்பாளராக காணப்படுவதுடன் அவர் கடந்து வந்த கடினமான பாதை தொடர்பில் அவருடைய அனுபவ பகிர்வினுடாக அறிய முடிகிறது.

அரசியல் பிரவேசம்.

இந்நிலையில் கௌரி தனது அரசியல் பயணம் தொடர்பில் விபரிக்கையில்…. நான் மட்டக்களப்பு மாநகரசபையில் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரேயொரு பெண் வேட்பாளராக உள்ளேன். வடக்கு கிழக்கினை பொறுத்த வரைக்கும் கடந்த காலங்களில் பார்த்தோமானால் இலங்கையினை பொறுத்த வரைக்கும் அரசியல் பின்னணியில் உள்ள குடும்பங்கள் அதாவது பெண்களுடைய அரசியலை எடுத்து பாத்தால் கடந்த காலத்திலிருந்த ஜனாதிபதி சந்திரிக்காக பண்டாரநாயக்க குமாரதுங்க, சிறிமாவோ பண்டாரநாயக்கா, ஹிருணிகா பிறேமசந்திர உள்ளிட்ட பல பெண்கள் அரசியலுக்குள் வந்தும் தங்களுடைய குடும்ப பின்னணியில் இருந்து அல்லது ஆண்களால வளக்கப்பட்டதாக அல்லது பரம்பரை ரீதியாக பார்த்து வளர்ந்ததாகத்தான் இருந்து வந்தது.

அந்த வகையில் 2018 ஆம் ஆண்டு பெண்களுக்கான 25 வீத உள்வாங்கல் பெண்கள் அரசியல்ல பிரவேசிக்க வேண்டும். அதேவேளை சமத்துவமான உரிமை சார்ந்த பெண்களுக்கு தேவையான கருத்துக்களை உள்வாங்கி சட்டங்கள் ஊடாக அபிவிருத்திகள மேற்கொள்ள வேண்டுமென்று 25 வீத உள்வாங்கல் 2018 இல் கிடைத்தது. அந்த வகையில் பல பெண்கள் அரசியலில் போட்டியிட்டனர். நானும் போட்டியிட்டு பட்டியல் மூலமாக மட்டக்களப்பு மாநகர சபைக்கு போனேன். இந்த 25 வீத உள்வாங்கல் இலங்கையினை பொறுத்த வரையில் பல மாற்றங்களை ஏற்படுத்தினாலும் சிங்கள பகுதியில் பெண்களுக்கு வழமையாகவே ஓர் ஆர்வம் கூடுதலாக இருந்தது. ஆனால் வடகிழக்கைப் பொறுத்த வரையில், குறிப்பாக தமிழ் பெண்களைப் பொறுத்த வரையில், தமிழ் பெண்களுக்கு கலாசார ரீதியான, சமூக ரீதியான தடைகள், கூடுதலான அழுத்தங்கள், எங்கள் சமூகத்திலிருந்து தாக்கப்பட்டது. பெண்கள் அரசியலுக்கு போகக்கூடாது, அரசியல் என்றால் அது ஒரு சாக்கடை, அரசியலில் ஈடுபடுகின்ற பெண்கள் ஒழுக்கமில்லாத ஆட்கள் என்ற ஒரு பார்வையும் பாக்கப்பட்டது. அந்த வகையில் 25 வீத உள்வாங்கலில் பல பெண்கள் பல சேவைகளை வெளிப்படுத்தியதால் மட்டக்களப்பில் நானும்  2025 இல் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் அதேவேளை அதில் வெற்றி பெற்று மற்ற பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக முன்மாதிரியாக இருக்க வேண்டுமென்று இந்த தேர்தலுக்கு முற்பட்ட காலங்களிலிலுந்து நான் பல பயிற்சிநெறிகளில் நான் ஈடுபட்டேன். அத்தோடு சமூக செயற்பாடுகள் கூடுதலாக மனித உரிமைகள் சார்ந்த விடயங்களில், குரலாக இருந்த நான் தமிழ் மக்களுடைய உரிமைகள் மீறப்படுகிற இடங்களில் எனது கடமைகளை சமூக ரீதியான செயற்பாடுகளையும் ஆர்வதுடன் செய்து வந்தேன்.

நான் ஓர் எல்லைக் கிராமத்தில் பிறந்தவள் என்ற அடிப்படையில் என்னுடைய மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று கூடுதலான ஆர்வத்துடன் செயற்பட்டுக் கொண்டிருந்தேன். அதனால் மக்கள் மத்தியில் எனக்கு ஒரு வரவேற்பு இருந்தது. நான் ஏதாவது கட்டாயம் செய்வேன் ஒரு பிரச்சனை என்றால் என்னிடம் போகலாம் பொதுவான பிரச்சனைகளை தீர்த்து வைப்பேன் என்பது தொடர்பில் மக்கள் மத்தியில ஒரு நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையோடு பெண்கள் அரசியலில் இந்த ஆணாதிக்க சமூகத்தில் செயற்பட்டு முன்னேறுவதென்பது சாதாரண ஒரு விடையமல்ல. எனக்கு அது ஒரு பெரிய பாரதூரமானதாக இருந்தது. பல முயற்சிகள் ஊடாக இலங்கை தமிழரசு கட்சி ஊடாக மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்பட்ட இருபது வட்டாரங்களில் இரண்டாம் வட்டாரமான திராய்மடு வட்டாரத்தில் போட்டியிட ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. மாநகர சபையில் போட்டியிட மூன்று பெண்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தது அதில் இந்த மாநகர சபைக்குள் 1224 வாக்குகளை பெற்று எந்த கட்சி ரீதியான பெண்களும் வெற்றி பெறாத இடத்தில் நான் மட்டும்தான் வென்றிருக்கிறேன். அதற்கு என்னுடைய கடந்தகால செயற்பாடுகள், அர்ப்பணிப்புக்கள், காரணமாக இருந்ததுன. அந்தவகையில் இது ஒரு பாரிய பெண்களுக்கு கிடைத்த வெற்றியாகதான் இதனை பலர் பாக்கிறார்கள். 

எழுபத்தி ஐந்து வீதமான ஆண்களின் மனோநிலை.

இந்த அரசியல் பிரவேசத்தில் மக்கள் மத்தியில் செயற்பாட்டு ரீதியில் துணிந்து செயற்பட்டத்தால்தான் இந்த அங்கீகாரம் எனக்கு கிடைத்தது. இந்த தேர்தல் களத்தில் நின்று பிடிப்பதற்கு கடந்தகால எனது செயற்பாடுதான் எனக்கு அனுபவத்தை தந்தது. வடகிழக்கைப் பொறுத்தவரை மட்டக்களப்பில் பெண்கள் அரசியலுக்குவர வேண்டும் என வார்த்தை அளவில் பல ஆண்கள் சமூகங்கள் கூறினாலும் முடிந்த வரைக்கும் எந்த பெண்ணும் வெற்றிபெறக் கூடாது என 75 வீதமான ஆண்கள் தங்களுடைய பிரசாரத்தை மிகமோசமாக மேற்கொள்வார்கள். கலாசார ரீதியாக மதரீதியாக வட்டாரங்களில் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டும், பெண்கள் போய் மண்டியிடுவதா? பெண்கள் ஒரு உரிமை சார்ந்து வேலைய செய்வதா? என ஆண்களால் பாரதுரமாக விமர்சிக்கப்படக்கூடிய சூழல் காணப்பட்டன. என்னால் செய்யப்படாத விடயங்கள்கூட தேர்தலில் அவதூறாக பரப்பப்பட்டன. என்னை பொறுத்தவரை இந்த ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் வென்று வருவதென்பது சாதாரண விடயமல்ல அப்படி இருந்தும் இந்த சந்தர்ப்பத்தை விட்டுக் கொடுக்ககூடாது மட்டக்களப்பில் இருக்ககூடிய பல பெண்களுக்கு நாங்கள் முயற்சி எடுத்து சரியான பாதையில் சென்றோமாக இருந்தால் தேவையான அபிருத்தி செய்வதுடன் அடுத்தடுத்த கட்டமாக மாகாணசபை,; பாராளுமன்ற தேர்தல்களிலும் போட்டியிடுவதற்கு பெண்கள் வளர வேண்டும் என்பதற்கு இது ஒரு வெற்றி இலக்காக இருக்கிறது.

இந்த அரசியல் பிரவேசமென்பது சாதாரணமாக ஒரு அலுவலக ரீதியாகவோ துறைசார்ந்து வேலை செய்வது போன்றோ ஒரு சம்பளம் பெறுகின்ற ஒரு துறையோ இல்லை. அரசியலென்பது ஒரு அடிப்படையில் சமூக ரீதியான அக்கறை சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று உள ரீதியாக சிந்திக்கும், ஒரவராக இருந்தால்தான் ஒரு தூய்மையான அரசியலை எமது மாவட்டத்தில் கொண்டு செல்வதற்;கு ஒரு அடித்தளமாக இருக்கும். என்பதை நான் எதிர்பார்க்கிறேன். கடந்த பாராளுமன்ற தேர்தலில் பல பெண்கள் பாராளுமன்றத்துக்கு சென்றிருக்கிறார்கள் ஆனால் அங்கு எத்தனை பெண்கள் கதைக்கிறார்கள் என்பது கேள்விக் குறியாகத்தான் இருக்கிறது. ஒரு சிலர் கதைக்கிறார்கள் நிறைய சமூக செயற்பாட்டாளர்களாக செயற்பட்ட பெண்கள் வெளியே நிற்கிறார்கள். ஒரு ஆணுக்கு இருக்கும் பிரச்சார உத்திகளைவிட ஒரு பெண்ணுக்கு நூற்றுக்கு இருநூறு வீதம் இருகிறது. அவளை வெல்ல விடக்கூடாது என்ற எதிர்பிரசாரம். வருகின்ற விமர்சனங்களை எந்த பெண் ஏற்றுக் கொண்டு தன்னுடைய குடும்பம் சமூகத்துக்கு புரிய வைத்து தடைகளை தாண்டி சரியான பாதையில் பயணிக்கிறாளோ அந்த பெண்ணால் இந்த அரசியலில் வெற்றி பெற முடியும் என்பதனை என்னுடைய அனுபவத்தில் தெளிவாக சொல்ல முடியும்.

சமூக மாற்றம்.

சில வேளைகளில் கட்சிகளுக்குள்ளும் சமூகத்திலும், பிடிக்காமல் இருக்கலாம். காலாகாலமாக ஆண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் பெண்ணென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், ஆண் பிறந்தால் கற்கண்டு கொடுக்க வேண்டும், பெண் பிறந்தால் சக்கரை கொடுக்க வேண்டுமென்று ஊட்டி வளர்த்த சமூகத்திலிலுந்து நாங்கள் வந்ததால் இந்த மாற்றத்தை கொண்டு வருவதென்பது வடகிழக்கைப் பொறுத்தவரை பாரிய சவால். ஆனால், இதனையும் கடந்து பெண்கள் ஒற்றுமையோடு முயற்சியோடு இருந்தால் மட்டும்தான் அடுத்த கட்ட தலைமுறைக்கு நாங்கள் கொடுக்க முடியும். தேர்தல்கள் என்று வரும்போது இனிவரும் காலங்களில் பெண்களுக்கான ஒதுக்கீடுகள் கொஞ்சம் கூடுதலாக வழங்கப்பட வேண்டும். ஒரு கட்சி என்ற ரீதியில் மாநகர சபையில் மூன்று வேட்பாளர்கள் வட்டாரத்தில் போட்டியிட்டனர். கட்சிகளில் பெண்கள் இணைந்து தொடர்ச்சியாக பயணிக்காததால் சில இடஒதுக்கீடுகள் வழங்கப்படாமல் இருக்கிறன. இன்னுமொன்று உள்ளது அதிகளவான பெண்கள் வட்டாரத்தில் போட்டியிடக் கூடிய வகையில் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். அதற்கேற்ப பெண்களும் தயாராக வேண்டும். தேர்தல் காலங்களினுள் மட்டும் பெண்கள் அரசியலுக்குள் நுழையாமல் செயற்பாட்டு ரீதியான அரசியலில் ஈடுபட்டால்தான் இந்த நிலமை மாற்றமடையும். என்னை பொறுத்தவரை என்னுடைய ஏழு வருட பயணம் இது. நான் வட்டாரத்தில் வென்றுவர வேண்டும் என்ற ஓட்டத்தில் இரவு பகலாக பல நாட்கள் நித்திரை இன்றி பல விமர்சனங்களைத் தாண்டி கண்ணீருடன் பயணித்த நாட்களை கடந்து தடைகளை கடந்து வந்திருக்கிறேன்.

எமது மாநகரசபை ஆட்சியில் கடந்த காலங்களைவிட பால் நிலை சமத்துவத்துடன், வீதி, கட்டிடம், பொது நோக்கு சார்ந்த விடயம், சமூக ரீதியாக சமத்துவத்துடன் திட்டங்கள் பயனுடையதாக இருக்குமா என்ற சிந்தனையினை பேணுவதற்கு என்னால் முடிந்த பங்களிப்பினை மேற்கொள்வேன் என்பதுதான் நான் இந்த அரசியலில் வைத்திருக்கும் திட்டமாக இருக்கிறது. நான் பிறந்து வளர்ந்தது மட்டக்களப்பு மாநகரசபைக்குட்ட பகுதியில் உள்ள ஓர் எல்லை கிராமத்தில், நான் இந்த பகுதியில் கூடுதலான அபிவிருத்திகள் தேவைப்படுவதனை பார்த்து வளர்ந்த நான் எமது பகுதியை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்பது எனது சிறிய வயதில் இருந்தே இருந்தது. அந்த நோக்கத்தினை அடைவதற்கு என்றும் முழு மூச்சுடன் செயற்படுவேன். என்பதனை மக்களுக்கு கூறிக் கொள்வதோடு பெண்கள் நாம் தைரியமாக எமது சமூகத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முன்வர வேண்டியது காலத்தின் தேவையாகும் என தனது அரசியல் பயணத்தை விபரித்தார் தயாளகுமார் கௌரி.

 

 

இது இவ்வாறு இருக்கும் இந்நிலையில் பார்க்கும்போது பெண்களுக்கான அரசியல் வாய்ப்புகள் பல்வேறு போராட்ட வடிவங்களின் விளைவுகளால் உருவாக்கப்பட்டதாகவும் குடும்ப, சமூக மட்டத்தில் பெண் அரசியல் செயற்பாட்டாளர்கள் மீதான அவதூறுகள் மற்றும் எதிர் பிரசாரம் அவர்களின் அரசியல் முயற்சிகளை கட்டுப்படுத்துவதற்கான ஆயுதமாக தற்காலத்தில் பயன்படுத்தப்படுகிறது. பெண் வேட்பாளர்களை தேர்தல் களத்திலிருந்து நீக்குவதற்காக தேர்தல் காலங்களில் அவதூறு கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. இவை தேர்தல் மேடைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் வெவ்வேறு விதமாக பகிரப்படுகின்றன. குறிப்பாக பொதுக்கருத்துகள், கொள்கைகள் மீதான விமர்சனங்களைக் கடந்து பெண் வேட்பாளர்களின் தனிப்பட்ட விடயங்கள் பேசப்பட்டன. இந்த படிகளைக் கடந்து தேர்தலில் போட்டியிட்டாலும், சக போட்டியாளர்களின் தரம் தாழ்த்துதல், அவதூறுகள் பெண் வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பைப் பறிப்பதற்கான ஆயுதமாக பயன்படுத்தப்படமையானது பெண்கள் தேர்தல்களில் எதிர் கொண்ட சவாலை எடுத்துக்காட்டுகிறது.

உலகளாவிய ரீதியில் ஒரு நாடு அபிவிருத்தியினை அடைய வேண்டுமாக இருந்தால் அந்த நாடு சமத்துவம், மனித உரிமை, ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து ஆண், பெண் வேறுபாடுகளின்றி பெண்களின் அரசியல் வகிபாகத்தை சர்வதேச நியமங்கள் அடிப்படையில் அபிவிருத்தி அடைந்த நாடுகளின் எண்ணக்கருக்களோடு ஒத்திசையச் செய்து பெண்களுக்கான வாய்ப்புக்களை அதிகரிக்க செய்ய வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளதுடன் இலங்கையும் பெண்களுக்கான அரசியல் வாய்ப்புக்களை மேலும் அதிகரிக்க புதிய சட்ட திருத்தங்களை கொண்டு வரவேண்டியது காலத்தின் அவசியமாகக் கருத்தப்படுகின்றது.



SHARE

Author: verified_user

0 Comments: