13 Nov 2023

மட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிவனுக்கு விசேஷ அபிஷேக பூஜை.

SHARE


மட்டக்களப்பு
கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிவனுக்கு விசேஷ அபிஷேக பூஜை.

இந்துக்களின் மிக முக்கிய விரதங்களில் ஒன்றான கேதார கௌரி விரத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சில இந்து ஆலயங்களில் விசேட கேதார கௌரி விரத பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.

16 செல்வங்களை தரக்கூடிய அம்பாளுக்கு அடியார்கள் 21 நாள் உபவாசம் இருந்து விரதம் அனுஸ்டித்து ஆலய பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் .

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பழமை வாய்ந்த அம்மன் ஆலயமான மட்டக்களப்பு கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் 20 ஆம் நாள் கேதார கௌரி விரத பூஜை மிக சிறப்பாக சிறப்பிக்கப்பட்டன.

ஆலய பிரதம  குரு பூஜா துரந்தகர்  சிவா ஸ்ரீ குக ஆனந்தக் குருக்களின் தலைமையில் விநாயர் வழிபாடுகளுடன் ஆரம்பமாகி சிவனுக்கு உகந்த அபிஷேக பொருட்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு வேத, மேள வாத்தியங்கள், நாதங்கள் முழங்க அடியார்களின் அரோகரா கோசத்துடன் சிவனுக்கு விசேட அபிசேகம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து சிவனுக்கும் அம்மாளுக்கு தீபாராதனை பூஜை இடம்பெற்று பூ போடும் நிகழ்வும் இடம்பெற்றது.

சிவபெருமானுடைய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. இந்த விரதத்தை அம்மை கௌரியே அனுஷ்டித்தார் என்றால் அதன் பெருமைக்கு நிகர் எதுவுமில்லை. அம்மை ஐயனின் இடப்பாகம் பெற்று அர்தநாரீசுவரராக ஆனது இந்த விரத மகிமையால். கேதார கௌரி விரதம் புரட்டாதி மாதம் சுக்ல பக்ஷ விஜயதசமி திதியில் தொடங்கி ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்று முடிய மொத்தம் இருபத்தொரு நாட்கள் இந்த விரதம் கடைப்பிடிக்க வேண்டும் என புராணம் கூறுகிறது.

மணமாகிய பெண்கள் தங்கள் மாங்கல்யம் தொடர்ந்தும் மங்கலகரமாக இருக்க வேண்டியும், மணமாகாத கன்னிப் பெண்கள் நல்ல மாங்கல்ய வாழ்வை வேண்டியும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். மங்களகரமான வாழ்க்கையை வேண்டி ஆண்களும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

மாங்கல்ய பாக்கியமும், கணவன், மனைவி இணை பிரியாது அன்போடு சுகவாழ்வு வாழும் வரமும், சகல சௌபாக்கியங்களும் நல்கும் விரதம் இந்த கேதார கௌரி விரதம். தம்பதியர் இருவரும் ஓருயிர் ஈருடலாக வரம் பெற இவ்விரதத்தினை விரும்பி அனுஷ்டிக்க வேண்டும். ஆயுள் முழுவதும் மகிழ்ச்சியான தம்பதிகளாய் வாழ உதவும் விரதம் இது. குடும்பப் பிரச்சனை உள்ளவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் குடும்ப ஒற்றுமையும் சுபீட்சமான வாழ்க்கையும் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

திருமூலரால் சிவ பூமி என அழைக்கப்பட இலங்கையில் இந்துக்கள் பலர் கேதார கௌரி விரதத்தினை அனுட்டிக்கின்றனர்.

அந்தவகையில் மட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் சுமார் 2000 க்கு அதிகமான அடியவர்கள் நோன்பு நோற்கின்றனர்.

நோன்பு நோற்க்கும் அடியார்களுக்கு திங்கட்கிழமை(13.11.2023)  விசேட பூஜைகள் இடம்பெற்று கௌரி விரதத்தின் காப்புக்கட்டும் நிகழ்வு ஆலயத்தில் இடம்பெற்ற்றமை குறிப்பிடத்தக்கது.










SHARE

Author: verified_user

0 Comments: