12 Mar 2020

மட்டக்களப்பு மாநகர சபையின் 31ஆவது சபையின் அமர்வினை 24 மணித்தியாலத்திற்கு ஒத்திவைப்பு.

SHARE
மட்டக்களப்பு மாநகர சபையின் 31ஆவது சபையின் அமர்வினை 24 மணித்தியாலத்திற்கு ஒத்திவைப்பு.
மட்டக்களப்பு மாநகர சபையின் 31 ஆவது பொது அமர்வானது வியாழக்கிழமை  (12.03.2020) மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. இவ்வமர்வில் மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் மாநகர ஆணையாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

மேற்படி அமர்வானது ஆரம்பித்தவேளை குறிக்கிட்டு பேசிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் துரைசிங்கம் மதன், கொரோனா வைரஸ் உலகை ஆக்கிரமித்து வரும் நிலையில், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களும் சில வெளிநாட்டு நபர்களும் அந்த நோய் தொற்று இருக்கலாம் எனும் சந்தேகத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் அழைத்துவரப்படுவதை எதிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் வியாழக்கிழமை பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. எனவே எமது மக்களின் உணர்வுகளுக்கு மதிக்களிக்கும் வகையில் இந்தக் பொதுக் கூட்டத்தினை ஒத்திவைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இவ்வேளை எழுந்த சுயேற்சைக் குழுவின் உறுப்பினர்களாக கிளனி வசந்தகுமார் மற்றும் நவரெட்ணராஜா திலிப்குமார் ஆகியோர் இந்த ஹர்த்தால் நடவடிக்கையானது கட்சி சார்ந்த நடவடிக்கை என்றும் இதனை கட்சி சார்பான நடவடிக்கையாகவே தாம் பார்ப்பதாகவும், இந்த ஹர்த்தால் அனுஸ்டிக்கப்புக்கு பின்புலமாக இருப்பவர்கள் யார் என்பது தொடர்பிலும் தெளிவுறுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் எழுந்து இந்த மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், இந்த மாவட்டம் தனிமைப்படுத்தப்படும் நிலையேற்படும் என்றும் இந்த அனர்த்ததில் இருந்து தமது மாவட்டத்தினை பாதுகாக்க வேண்டும் என்றும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்திவரும் மட்டக்களப்பு மக்களினதும், இளைஞர்களினதும் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் விவாதத்தில் ஈடுபட்டதனைத் தொடர்ந்து முதல்வர் குறித்த 31ஆவது சபையின் அமர்வினை 24 மணித்தியாலத்திற்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார்.







SHARE

Author: verified_user

0 Comments: