மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேசத்தில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட ஒரு தொகுதி தேக்கு மரக்குற்றிகளை ஏறாவூர்ப் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை 14.01.2018 அதிகாலை கைப்பற்றியுள்ளனர்.
மரக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரைக் கண்டதும் மரக்குற்றிகளையும் துவிச்சக்கர வண்டிகளையும் கைவிட்டு தப்பிபோடியதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
6 அடி மற்றும் 11 அடி நீளமாக அறுக்கப்பட்ட நாற்பது தேக்கு மரக்கட்டிகளும் இரண்டு துவிச்சக்கர வண்டிகளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
வந்தாறுமூலை - உப்போடை வயற்பிரதேச வீதியில் பதுங்கியிருந்த ஏறாவூர்ப் பொலிஸ் குழுவினர் இம்மரக்கடத்தலை முறியடித்துள்ளனர்.
மட்டக்களப்பு பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவரவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் பிராந்திய ஊழல் மோசடி தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி டப்ளியுஎம்ஜே. மதுசங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
தப்பியோடிய சந்தேக நபர்களைத் தேடும் நடவடிக்கை தொடர்ந்தும் நடைபெறுவதாக பொலிஸார் கூறினர்.
0 Comments:
Post a Comment