மட்டக்களப்பு வாகரையில் கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவ சபைப் பிரிவுகளைப் பின்பற்றுவோரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு மயானம் இல்லாத பிரச்சினையால் அங்கு சமூகக் குழப்பங்கள் ஏற்படுவதைத் தடுத்து பொருத்தமான தீர்வைப் பெற்றுத் தருமாறு மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவை அரசாங்க அதிபரைக் கேட்டுள்ளது.
இது தொடர்பாக தொடராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த மகஜரொன்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரிடம் செவ்வாய்க்கிழமை 23.01.2018 கையளிக்கப்பட்டது.
தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் இராசையா மனோகரன் தலைமையில் மாவட்ட சர்வமத அமைப்பின் பிரதிநிதிகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சந்தித்தபோது வாகரையில் ஏற்பட்டுள்ள சமூக அமைதிக்குக் கேடான நிலைமைகளை விளக்கினர்.
இதுதொடர்பாக மாவட்ட சர்வமத அமைப்பினர் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் குறிப்பாக மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் கத்தோலிக்கரல்லாத (ழேnசுஊ) கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த பிரிவினருக்கென தனியான மயானம் இல்லாததால் அவர்கள் மரணிக்கும் தமது உறவினர்களின் சடலங்களை அடக்கம் செய்வதில் பல்வேறு மனித உரிமை மீறல் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகத் தெரிவித்து இந்த விடயத்தை மாவட்ட சர்வமதப் பேரவையின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தனர்.
இது தமக்கு மானசீகமான பல்வேறு உடல் உள ரீதியான தாக்கங்களையும், பொருளாதார இழப்புக்களையும் மனித உரிமைகள் பற்றிய கேள்விகளையும் எழுப்பியுள்ளதனால் இப்பிரச்சினைக்கு நீதி பெற்றுத் தரவேண்டும் என்று பாதிக்கப்படுவோர் மாவட்ட சர்வமதப் பேரவையிடம் கேட்டிருந்தனர்;.
கடந்த 17ஆம் திகதி வாகரையில் மரணித்த கத்தோலிக்கரல்லாத கிறிஸ்தவ மதப் பிரிவைப் பின்பற்றும் ஒருவரின் சடலத்தை அடக்கம் செய்வதில் அங்கு சமூகக் குழப்பமொன்று உருவாகி பின்னர் வாகரையில் அடக்கம் செய்ய முடியாது மாங்கேணியில் அடக்கம் செய்ய வேண்டியேற்பட்டது.
மட்டக்களப்பில் முனைப்புப் பெற்றுள்ள இந்த மதவாத முரண்பாட்டை மேலும் வேறு பிரதேசங்களுக்கும் விஸ்வரூபம் எடுக்க விடாது சமூக அமைதியைப் பாதுகாக்குமாறு நாம் அரசாங்க அதிபரிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்” என்றனர்.
இது குறித்து உடனடியாக வாகரை பதில் பிரதேச செயலாளரைத் தொடர்பு கொண்ட அரசாங்க அதிபர் பெப்ரவரி முதலாம் திகதி அங்கு உடனடியாக பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைக் கூட்டி அந்தக் கூட்டத்தில் சகல தரப்பினரின் இணக்கப்பாட்டுடனும் குறித்த பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.
0 Comments:
Post a Comment