தேர்தல்கால தெருச் செப்பனிடல்கள் பரவலாக இடம்பெறுவதைப் போன்று சமகால நிகழ்வுகளைச் சித்தரிக்கும் நிகழ்த்துகைக் கலைச் செயற்பாடு இலங்கை கிழக்குப் பல்கலைக் கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக முன்னரங்கில் ஞாயிறன்று 24.12.2017 இடம்பெற்றது.
கட்புலத்துறை இறுதிவருட மாணவி பெருமாள் சஹானாவின் நிகழ்த்துகைக் கலைச் செயற்பாட்டை கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி. ஜெய்சங்கர் தலைமையிலான குழுவினர் அவதானித்தனர்.
இது குறித்து அங்கு கருத்துத் தெரிவித்த சஹானா, தற்போது வீதி அபிவிருத்திப் பணிகள் நாட்டின் எல்லாப் பிரதேசங்களிலும் நடைபெறுவதை அவதானிக்க முடிகிறது.
குறிப்பாக தேர்தல் காலங்களிலும் வருட இறுதி நிதி திரும்பும் காலங்களிலும் இது வழமையான, துரிதகதி அபிவிருத்தி வேலைத் திட்டம் என மாறிவிட்டிருக்கின்றது,
இவ்வாறானான துரிதகதி தெருக்கள் செப்பனிடும் பணி வெறுமனே கட்டாயத்தின் அடிப்படையில் செய்யப்படுவதாக கருதவேண்டியுள்ளது.
வீதிகள் செப்பனிடப்படுவதும் பின்னர் குறுகிய காலத்தில் செப்பனிடப்பட்டதாக காட்டப்படும் தெருக்கள் பயணிக்க முடியாதபடி மீண்டும் பள்ளமும் படுகுழியுமாக மாறிவிடுவதையும் அவதானிக்க முடிகிறது.
வினைத்திறன் மற்றும் விளைதிறனற்ற பொறியியல் தொழினுட்பம், பொறுப்புக் கூறலற்ற நிருவாக முறைமை, சட்டம் சரிவர அமுல்படுத்தப்படாமை, அதிகாரிகளின் வினைத்திறனற்ற செயற்பாடு அரசியல் அதிகார துஷ்பிரயோகம் என்பவையே இந்த சீர்கேட்டுக்குக் காரணமாய் அமைந்து விடுகின்றன.
இந்த துஷ்பிரயோகப் போக்கை மாற்ற வேண்டும் தங்குதிறனும் பொறுப்புக் கூறலுமுள்ள அபிவிருத்திக்கு அடிகோல வேண்டும் என்ற சிந்தனையைத் தூண்டுவதற்காகவே இந்த நிகழ்த்துகை முயற்சி” என்றார்.
0 Comments:
Post a Comment