கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு இடம்பெற்றுள்ள அநீதிக்கு மாகாண ஆளுநர் பதில் சொல்லியாக வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.கிழக்கின் பட்டதாரிகள் நியமனத்தின் போது அநீதியிழைக்கப்பட்ட பட்டதாரிகள் முன்னாள் முதலமைச்சரிடம் செவ்வாய்க்கிழமை 28.11.2017 முறையிட்ட அவர் இதனைக் கூறினார்.
இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்து தெரிவித்த முன்னாள் முதலமைச்சர்,
நாம் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் போராடி 1700 பட்டதாரிகளுக்கான நியமனங்களை கொண்டு வந்தமை பட்டதாரிகள் மீண்டும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்காகவல்ல.
கிழக்கு மாகாணத்தில் திங்களன்று 27.11.2017 வழங்கப்பட்ட நியமனங்களின் போது 1119 பட்டதாரிகளுக்கான நியமனங்கள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளன,
ஆனால் நியாயமாக 1441 பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்,
நூறு நாட்களுக்கும் மேலாக மழையிலும் வெயிலிலும் போராடிய பட்டதாரிகளை மனதில் வைத்து ஜனாதிபதி பிரதமர், கல்வியமைச்சர் மற்றும் அதிகாரிகள் என பல இடங்களிலும் போராடி நாம் பெற்றதில் அநீதியழைக்கப்பட்டுள்ளது.
ஏனைய 322 பட்டதாரிகளுக்கான நியமனங்களையும் ஆளுநர் அதே மேடையில் வழங்கி இருக்க வேண்டும்.
அவ்வாறு இடம்பெறாததன் மூலம் ஏற்கெனவே மன வேதனைகளுக்கு உள்ளாகியுள்ள பட்டதாரிகள் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டி ஏற்படும் என்பதை புரிந்த கொள்ள வேண்டும்.
அது மாத்திரமன்றி ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் 40 புள்ளிகளுக்கு மேல் பெற்றுக் கொண்ட அனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்கப்பட வேண்டும்.
அவர்கள் தமது தகுதியை நிரூபித்துள்ளார்கள் என்பதை நினைவிலிருத்திக் கொள்ள வேண்டும்,
மாகாண சபை இருந்திருந்தால் இன்றும் நாம் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் தொடர்பில் தீர்மானங்களை எடுத்து அவற்றை நடைமுறைப்படுத்தியிருப்போம்,
ஆகவே தற்போது அதிகாரமுள்ள சபையாக பாராளுமன்றங்களே உள்ளன,ஆகவே எமது பட்டதாரிகளின் உரிமைகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்ப வேண்டும்.
ஏனெனில் நாம் ஏற்கனவே மாகாணத்தின் வெற்றிடங்கள் தொடர்பான தரவுகளை தேசிய முகாமைத்துவத் திணைக்களத்திற்கு வழங்கிய போது வெற்றிடங்களை நிரப்ப முழு ஒத்துழைப்புக்களையும் வழங்குவதாக அவர்கள் உறுதியளித்துள்ளார்கள்,
எனவே ஆளுநர் ஜனாதிபதியுடன் கதைத்து குறித்த வெற்றிடங்களுக்கான நிதியைப் பெற்று பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்க வேண்டும்” என்றார்.
0 Comments:
Post a Comment