மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பில் 17 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு 27 வது ஆண்டு பூர்த்தியாவதை முன்னிட்டு விசேட நிகழ்வு வியாழக்கிழமை (21) மாலை நடைபெற்றது.
1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நள்ளிரவு மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கடற்கரையினை அண்டியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் நுழைந்த ஊர்காவல் படையினர் விசாரணை என கூறி பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள், இளைஞர்கள் என 44 பேரை கூட்டிச்சென்று கடற்கரையில் வைத்து வாள், கத்தியால் வெட்டியதுடன் துப்பாக்கிசூடு நடத்தியும் தமது கொலைவெறி தாக்குதல்களை மேற்கொண்டனர்.
இதில் ஐந்து மாணவர்கள் உட்பட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன் 27 பேர் படுகாயமடைந்ததுடன். ஒரு இரவில் மேற்கொள்ளப்பட்ட இந்த இன அழிப்பினை புதுக்குடியிருப்பு மக்கள் நினைவுத்தூபி அமைத்து படுகொலை தினமாக அனுஸ்டித்து வருகின்றனர்.
வியாழக்கிழமை (21) 27 வது புதுக்குடியிருப்பு படுகொலை நினைவேந்தல் நிகழ்வு வடகிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் அனுசரணையுடன் புதுக்குடியிருப்பு கிராம மக்களினால் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபையின் பிரதிதவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாணசபை உறுப்பினர், மா.நடராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், புதுக்குடியிருப்பு புதுவை அமைப்பின் தலைவர் சதாசிவம் மற்றும் புதுக்குடியிருப்பு ஆலய தலைவர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது நினைத்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டதுடன் உயிரிழந்தவர்களின் உறவினர்களும் அஞ்சலி செலுத்தினர்.
அத்துடன் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி ஒரு நிமிட மௌன இறைவணக்கமும் செலுத்தப்பட்டதுடன் நினைவுரைகளும் இடம்பெற்றன.
0 Comments:
Post a Comment