29 Aug 2017

அரசியலினால் மட்டும் எதனையும் சாதித்து விட முடியாது என்ற யதார்த்தத்தை இந்த நாட்டு முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்

SHARE

அரசியலினால் மட்டும் எதனையும் சாதித்து விட முடியாது என்ற யதார்த்தத்தை இந்த நாட்டு முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.
ஓட்டமாவடி மாவடிச்சேனையில் திங்கட்கிழமை பிற்பகல் 28.08.2017 இடம்பெற்ற முன்னோடிகளைப் பாராட்டும் நிகழ்வில் அவர் உரையாற்றினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது@
தற்போது நாட்டு நகர்வுகளை உற்று நோக்கும்பொழுது,  முஸ்லிம்களுடைய உரிமைகள் இந்த ஆட்சியாளர்களால் பாதுகாக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது

நல்லாட்சியை எதிர்பார்த்து அதனைக் கொண்டு வரத் துடித்தவர்கள் மீது முழு நம்பிக்கை வைத்து அனைத்து விதமான ஒத்துழைப்பையும் வழங்கி உருவாக்கிய நல்லாட்சியில் இப்பொழுது முஸ‪;லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவற்றுக்கான தீர்வுகள், முஸ்லிம்களது அபிலாஷைகள், எதிர்பார்ப்புக்கள், உரிமைகைள் என்பவை கரிசனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமா அல்லது கண்டு கொள்ளப்படாமல் விடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எனவே, கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் இந்த நாட்டு முஸ்லிம்கள் அரசியலில் மாத்திரம் நம்பிக்கை வைத்து தமது அந்தஸ்தை இழந்து விடாமல் கல்வியில் மாத்திரம் முதலீடு செய்து அதனூடாக அனைத்து உரிமைகளையும் அடைந்து கொள்ளப் பாடுபட வேண்டும்.

கல்வி அறிவின் மூலமாக ஒட்டு மொத்த இந்த நாட்டுக்கே உயிரோட்டத்தை வழங்க முடியும்.

இன மத பேதமற்று  முழுநாட்டுக்கும் சேவை செய்கின்ற மெச்சத்தக்க ஒரு சமூகமாக முஸ்லிம்கள் தங்களை வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.

கிழக்கு மாகாண சபை உட்பட வேறு எதுவாயினும் ஆட்சி அதிகாரம் மீண்டும் முஸ்லிம்களுக்குக் கிடைக்கலாம் அல்லது கிடைக்காமல் போகலாம், ஆனால் அதனை மாத்திரம் நம்பியிராது கல்வி மூலமாக நிருவாக அதிகாரத்தைத் தமதாக்கிக் கொள்ள முஸ்லிம்கள் திடசங்கற்பம் கொள்ள வேண்டும்.

அரசியல் அதிகாரம் கிடைக்காவிட்டாலும் அதனையிட்டு அலட்டிக் கொள்ளாமல் நிருவாக அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதில் இந்த சமூகம் அக்கறை காட்ட வேண்டும்.

அதுதான் எதிர் காலத்தில் இந்த சமூகத்தைப் பாதுகாக்கின்ற ஒரு மிகப் பெரும் கேடயமாக இருக்கும்.

சமகாலச் சூழல் இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு கந்ததாக இல்லை. அது மிகப் பயங்கரமானதாகத் தெரிகிறது.

இதனைக் கடந்த நாம் சென்றாக வேண்டும். அதற்கு எங்களையும் எங்களது எதிர்கால சந்ததிகளையும் நாம் இப்பொழுதிருந்தே தயார்படுத்த வேண்டும்.

முதலமைச்சர் நஸீர் அஹமட்  தலைமையிலான கிழக்கு மாகாண அரசாட்சியில் தமிழர்கள் என்றோ சிங்களவர்கள் என்றோ நாம் பாகுபாடு காட்டவில்லை, ஊழல் புரியவில்லை, உதாசீனம் செய்யவில்லை, புறக்கணிக்கவில்லை அவர்கள் மனம் நோகும்படியாக நாம் நடந்து கொள்ளவில்லை. இத்தகைய ஆட்சியையே நிருவாக அதிகாரிகளாக முஸ்லிம்கள் எங்கிருந்தாலும் மேற்கொள்ளகிறார்கள். இது இந்த நாட்டுக்கு ஒரு முன்னுதாரணமாகும்” என்றார்.


SHARE

Author: verified_user

0 Comments: