இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை சீர்குலைக்கும் இனவாத அமைப்புக்களின் ஆதாரமற்ற கருத்துக்களுக்கு துணை போகும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க போன்றவர்களை அரசாங்கம் கடுந்தொனியில் எச்சரித்து வெளியேற்ற வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் அஹமட் தெரிவித்தார்.
தற்போதைய நாட்டு நிலைமை தொடர்பில் அவர் ஞாயிற்றுக்கிழமை 25.06.2017 வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியிலும் பொதுபலசேனாவுக்கு மிகப்பெரும் பலமாக இருந்தவர் சம்பிக்க ரணவக்க என்பதை நாடே அறியும்.
மஹிந்தவின் ஆட்சி வீழ்வதற்கு அதுவும் ஒரு காரணம் என்பதை தற்போதைய நல்லாட்சியின் ஜனாதிபதியும் பிரதமரும் கவனத்திற் கொள்ள வேண்டும்
இதற்கு முன்னர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஹலால் தொடர்பில் பிரச்சினையொன்றை உருவாக்கி முஸ்லிம்களை சிக்க வைத்த தருணத்தில் அமைச்சுப் பொறுப்பினை வகித்த சம்பிக்க ரணவக்க எவ்வாறு நடந்து கொண்டார் என்பதை மக்கள் இன்றும் மறந்து விடவில்லை,
மேலும் அந்தப் பிரச்சினையை பூதாகாரமாக்கும் வகையிலேயே அவரது ஊடக சந்திப்புக்கள் மற்றும் நாடாளுமன்ற உரைகள் அமைந்தன என்பதை நாம் அறிவோம்,
அது மாத்திரமன்றி அளுத்கம சம்பவத்தின் போது முஸ்லிம்களின் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டு வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்ட நிகழ்விற்கு யார் முழுமையான காரணம் என்பது தெளிவாகத் தெரிந்திருந்தும் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் சிறிதளவேனும் அக்கறையின்றி அவர் இனவாதிகளை நியாயப்படுத்த முயற்சித்தார் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
அத்துடன் கடந்த வருடம் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் இனவாதத்தை கக்கும் பௌத்த தேரர்கள் கைது செய்யப்பட்ட போது தேரர்களானால் அவர்கள் எந்தக் குற்றம் செய்தாலும் சட்டத்தில் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் கைது செய்யப்படக் கூடாது என்ற கோணத்தில் கருத்துக்களை தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்ட வேண்டும்,
ஞானசார தேரரின் இன்றைய செயற்பாடுகளுக்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்கவே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் என கடந்த ஜூன் மாதம் 16 ஆம் திகதி நடத்திய ஊடக சந்திப்பில் அந்த அமைப்பின் தலைவர் டிலந்த விதானகே பகிரங்கமாக அறிவித்திருந்தார்,
ஆகவே இன்று நாளுக்கு நாள் முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது வெறுப்பு கோஷங்களை முன்வைத்து தோற்றம் பெற்றுவரும் இனவாத அமைப்புக்களுக்கு தூண்டுகோலாயுள்ளவர்கள் யார் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது,
சம்பிக்க ரணவக்க வெளியிட்ட ஜிஹாத் எனும் புத்தகத்தில் கிழக்கு முதலமைச்சர் கிழக்கில் தனி முஸ்லிம் நாடொன்றை உருவாக்குவதற்கான சூழலை உருவாக்குவதாக முட்டாள்தனமாக பெரும்பான்மை மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் விதமாக எழுதியிருந்தார்,
முஸ்லிம்கள் எப்போதும் சமாதானத்தையும் அமைதியையும் பேணி எல்லோருடனும் இணைந்து வாழவே விரும்புகின்றவர்கள்.
இந்த நாட்டின் நலனுக்காக முஸ்லிம்கள் முன்னிற்கும் அதேவேளை நாட்டின் அமைதியையும் குழப்பும் அமைச்சர் சம்பிக்க போன்றவர்களை எதிர்த்து குரல் கொடுக்க நாம் தயங்கப்போவதில்லை.
தமது குறுகிய அரசியல் இலாபங்களை நிறைவேற்றிக் கொள்ள பாரிய திட்டமிடல்களுடன் இனவாதத்தை தூண்டி அதனூடாக குளிர்காயும் சம்பிக்க போன்றவர்கள் நல்லாட்சி அரசாங்கத்துக்கு மிகவும் ஆபத்தானவர்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
எனவே ஜனாதிபதியும் பிரதமரும் இதனைக் கவனத்திற் கொண்டு இனவாதத்தை தூண்டும் அமைச்சர்களை உடன் அரசாங்கத்திலிருந்து வெளியேற்றுவது அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் மேலும் நம்பிக்கையை ஏற்படுத்தும்”
0 Comments:
Post a Comment