27 Jun 2017

சந்திவெளியில் கடத்தப்பட்டு விபத்தில் சிக்கி மரணித்த யுவதியின் சம்பவம் தொடர்பாக இருவர் கைது

SHARE
சந்திவெளியில் கடத்தப்பட்டு விபத்தில் சிக்கி மரணித்த யுவதியின் சம்பவம் தொடர்பாக இருவர் கைது இருவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி
யுவதியின் உடற் கூற்றுப் பரிசோதனை குருநாகலில் இடம்பெற்றது.


சந்திவெளியில் கடத்தப்பட்டு விபத்தில் சிக்கி மரணித்த யுவதியின் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி சப் இன்ஸ்;பெக்டர் நிரோஷன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை இரவு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்திவெளி மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவமொன்றில் மட்டக்களப்பு ஏரிக்கரை வீதியைச் சேர்ந்த ஸ்ரீதரன் திவ்யசாகரி (வயது 19) எனும் யுவதி தலையில் படுகாயமேற்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயம் சிகிச்சை பயனின்றி சனிக்கிழமை காலை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம்பற்றி பற்றி பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்@ வெள்ளிக்கிழமை இரவு திருகோணமலை திருக்கோணேஸ்வரம் கோயிலுக்குச் சென்றுவிட்டு காரில் திரும்பிக் கொண்டிருக்கையில் இரவு 10 மணியளவில் தேநீர் அருந்துவதற்காக சந்திவெளியில் கார் நிறுத்தப்பட்டுள்ளது.

அந்தக் காரில் மேற்படி அசம்பாவிதத்தில் பலியான யுவதி, அவரின் தாய் ஷோபனா ஸ்ரீதரன் (வயது 52), யுவதியின் பெரியப்பா தவராஜா வசந்தராசபிள்ளை (வயது 66), கார்ச் சாரதியான மாணிக்கவாசகர் பகிதரன் (வயது 35) ஆகியோர் இருந்துள்ளனர்.

அந்நேரம் அங்கு திடீரென மோட்டார் சைக்கிளில் வந்திறங்கிய இரண்டு இளைஞர்கள் யுவதியைக் கைப்பற்றி மோட்டார் சைக்கிள் ஆசனத்தின் நடுவில் ஏற்றிக் கொண்டு அதிவேகமாகப் பயணித்துள்ளனர்.

அவ்வேளையில் யுவதியின் தாய் மற்றும் பெரிய தந்தை ஆகியோர் தாம் வந்த காரில், யுவதியைக் கடத்திக் கொண்டு அதிவேகமாகச் செல்லும் மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்துள்ளனர்.

இவ்வேளையில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதால் விபத்துச் சம்பவித்துள்ளது.

அச்சம்பவத்தில் கடத்தப்பட்ட யுவதியும், கடத்திச் சென்றதாகக் கூறப்படும் இரண்டு இளைஞர்களும் பலத்த காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த மூவரும் உடனடியாக அருகிலுள்ள சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவ்வேளையிலேயே சிகிச்சை பெற்றுவந்த யுவதி சிகிச்சை பயனின்றி சனிக்கிழமை மரணமாகியுள்ளார்.

யுவதியைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படும் காயங்களுக்குள்ளான இளைஞர்களான பாலசிங்கம் சஞ்ஜீவன் (வயது 20) பிரதீபன் திவ்வியகேஷன் (வயது 20) ஆகியோர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை யுவதியையும் தங்கள் இருவரையும் காரில் வந்தவர்கள் காரால் மோதியும் அதன் பின்னர் கடுமையாகத் தாக்கியதின் காரணமாகவும் தாங்கள் படுகாயங்களுக்குள்ளானதாக மோட்டார் சைக்களில் பயணித்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த வாக்குமூலத்தின்படி காரில் வந்த யுவதியின் பெரியப்பாவான வசந்தராசபிள்ளை மற்றும் கார்ச் சாரதியான பகிதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் வினோபா இந்திரன் முன்னிலையில் சனிக்கிழமை (24.06.2017) ஆஜர் செ;யயப்பட்டபோது சந்தேக நபர்களை ஜுலை மாதம் 07ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இதேவேளை யுவதியின் உடற் கூற்றுப் பரிசோதனை ஞாயிற்றுக்கிழமை 25.06.2017 குருநாகல் பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி இலங்கரத்னவினால் குருநாகலில் மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே குறித்த யுவதிக்கும் இளைஞனுக்கும் ஏற்கெனவே பல வருடங்களுக்க முன்னர் பராயமடையாத வயதில் இருந்து வந்த காதல் தொடர்பு காரணமாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்து வழக்கு தொடரப்பட்டு சமரசமாகத் தீர்த்து வைக்கப்பட்ட நிலையில் குறித்த யுவதியை உயர் கல்விக்காக அவரது தாய் இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார் என்கின்ற விவரமும் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
குறித்த யுவதி சமீப சில நாட்களுக்கு முன்னர் இலங்கை திரும்பியிருந்த நிலையிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அந்த யுவதி இந்தியாவிலிருக்கும் போதும் தொடர்ந்தும் தனது காதலனுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார் என்பதும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸின் வழிநடத்தலில் குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி  சப் இன்ஸ்;பெக்டர் நிரோஷன் பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் சார்ஜன்ற் ஈ.எல். பதூர்தீன் ஆகியோர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


SHARE

Author: verified_user

0 Comments: