கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னர் ஏற்பட்ட வெள்ளத்தின்போது மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுப் போயிருந்த மட்டக்களப்பு வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புளியடிமடுப் பாலத்தை புனர்நிருமாணம் செய்யும் வேலைகள் திங்கட்கிழமை 26.06.2017 ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவில் கிராமிய பாலங்களையமைத்தலும், மக்களின் போக்குவரத்துக்களைச் சீர்ப்படுத்தலும் எனும் செயற்திட்டத்தின் கீழ் புளியடிமடு, மணிபுரம், பத்தர்குளம், கரடிப்பூவல் ஆகிய பகுதிகளின் போக்குவரத்து நிலைமைகளை அவர், ஏற்கெனவே கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அதிகாரிகளுடன் நேரில் சென்று அறிந்து போக்குவரத்தைச் சீர் செய்யும் வேலைகளை உடனடியாகத் துவங்குமாறு கேட்டிருந்தார்.
அதன்படி வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியடிமடு பாலத்திற்கு மேலாக தற்காலிமாக அமைக்கப்பட்டுள்ள கடவை பொது மக்களின் பயணத்திற்கு மிகவும் ஆபத்தானதாக இருந்து வந்த நிலையில் தற்போது திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
“கிராம மக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தல்” எனும் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்திற்காக கடந்த வருடம் முன்மொழியப்பட்ட 32 கிராமியப் பாலங்களை அமைக்கின்ற செயற்பாடுகள் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சினூடாக நடைபெற்று வருகின்றன.
0 Comments:
Post a Comment