17 Feb 2017

பழைய முறைப்படியாவது உள்ளூராட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்; பிரிட்டனிடம் நிஸாம் காரியப்பர் வேண்டுகோள்!

SHARE
(அஸ்லம் எஸ்.மௌலானா)

மாகாண சபைகளின் அதிகாரங்கள் அர்த்தமற்றுப் போயிருக்கின்ற சூழ்நிலையில் உள்ளூராட்சித் தேர்தல் இழுத்தடிக்கப்பட்டு- தொடர்ந்தும் உள்ளூராட்சி சபைகள் முடக்கப்பட்டிருக்குமானால்,
அது சிறுபான்மைச் சமூகத்தினரை ஒட்டுமொத்தமாக விரக்தியடையச் செய்யும் சூழ்நிலையை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளரும் கல்முனை மாநகர முன்னாள் முதல்வருமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர், பிரித்தானிய உயர்மட்டத் தூதுக்குழுவினரிடம் தெரிவித்துள்ளார். 

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய நாடுகளுக்கான பணிப்பாளர் லௌரா கிளார்க், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டவுரிஸ் மற்றும் இணைப்பதிகாரி நட்டாலி கோவேர்ஸ் ஆகியோர் நேற்று புதன்கிழமை மாலை திருகோணமலையில் தன்னை சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது இலங்கையின் சமகால அரசியல் விவகாரங்கள், நல்லாட்சியில் சிறுபான்மைச் சமூகங்களின் நிலைப்பாடு, அரசியல் யாப்பு சீர்திருத்த முன்னெடுப்பில் சிறுபான்மையினரின் வகிபாகம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து சட்டத்தரணி நிஸாம் காரியப்பரிடம் அவர்கள் கேட்டறிந்து கொண்டனர். 

அரசியல் யாப்பு சீர்திருத்தத்தில் சிறுபான்மையினர் ஏமாற்றப்படலாம் என்கின்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் 13ஆவது திருத்தச் சட்டத்தைக் கூட முழுமையாயாக அமுல்படுத்துவதற்கான எவ்வித திட்டமும் அரசாங்கத்திடம் கிடையாது எனவும் சுட்டிக்காட்டிய சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், இச்சூழ்நிலையில் தேர்தல் முறை மாற்றமாவது சிறுபான்மை சமூகங்களுக்கு பாதிப்புகள் ஏற்படாதவாறு முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எமது அழுத்தமான கோரிக்கையாகும் என்று வலியுறுத்தினார்.

உத்தேச உள்ளூராட்சித் தேர்தல் முறையினால் வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே சிதறி வாழ்கின்ற முஸ்லிம்களுக்கும் இந்திய வம்சாவழி மலையகத் தமிழர்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதையும் அவர் விபரித்துக் கூறினார்.   

அதேவேளை புதிய தேர்தல் முறையின் கீழ், எல்லை நிர்ணய இழுபறியை காரணம் காட்டிக்கொண்டு உள்ளூராட்சித் தேர்தல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றமையானது ஜனநாயக விரோதம் என்பதுடன் மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயலுமாகும் என்று நிஸாம் காரியப்பர் மிகவும் அழுத்தமாக எடுத்துரைத்தார். 

இதனைக் கருத்தில் கொண்டு நடைமுறையிலுள்ள பழைய தேர்தல் முறையின் கீழ் உடனடியாக உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தாம் வலியுறுத்துவதாக குறிப்பிட்ட அவர், இந்த நிலைப்பாட்டை எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட அனைத்து சிறுபான்மை கட்சிகளும் ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சியின் மஹிந்த அணி மற்றும் ஜே.வி.பி. போன்ற கட்சிகளும் வெளியிட்டுள்ளன என்று சுட்டிக்காட்டினார்..

ஒரு கட்சியின் நலனை மாத்திரம் முன்னிறுத்தி நாட்டில் ஒட்டுமொத்தமாக உள்ளூராட்சித் தேர்தல் இழுத்தடிக்கப்படுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது விடயத்தில் பிரித்தானியா அரசாங்கம், இலங்கை மீது பாரிய அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்று தூதுக்குழுவினரிடம் நிஸாம் காரியப்பர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்..

இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலில், மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் அர்த்தமற்றதாக மாறியிருக்கின்றது. இது சிறுபான்மையினர் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் உள்ளூராட்சித் தேர்தல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு  உள்ளூராட்சி சபைகளும் மக்கள் பிரதிநிதிகளின் பங்கேற்பில்லாமல் முடக்கி வைக்கப்பட்டிருப்பதானது வடக்கு, கிழக்கு மக்கள் மத்தியில் பாரிய விரக்தியை ஏற்படுத்தி, நாட்டில் ஒட்டுமொத்தமாக பாரதூரமான விளைவுகள் ஏற்பட வழிவகுக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.

இது தவிர முஸ்லிம்கள் மீதான அத்துமீறல்கள் இந்த நல்லாட்சியிலும் முழுமையாக முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய அவர், முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், காணிப்பிரச்சினை என்பவற்றுக்கும் தீர்வுகள் கிடைக்கவில்லை என்று பிரித்தானிய தூதுக் குழுவினரிடம் கவலை வெளியிட்டார்.
SHARE

Author: verified_user

0 Comments: