13 Feb 2017

மின்னொழுக்கினால் வீடும் பணமும் வீட்டுடமைகளும் எரிந்து நாசம் ஏழைக் குடும்பம் நிர்க்கதியில்

SHARE

ஏறாவூர், ஆயிஷா பள்ளி குறுக்கு வீதியிலுள்ள சிறிய வீடும், வீட்டுடமைகளும், ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணமும் எரிந்து
நாசமாகியுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சனிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் அவ்வீட்டிலிருந்த எவருக்கும் காயங்களோ உயிராபத்தோ ஏற்படவில்லை என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அப்துல் ஹஸன் பாத்திமா ஷகீலா (வயது 27) என்பவரின் வீடே இவ்வாறு மின்னொழுக்கினால் எரிந்து நாசமாகியுள்ளது.

இச்சம்பவம் இடம்பெற்ற போது தானும் தனது இரண்டு வயது மகனும் அயல் வீட்டுக்குச் சென்றிருந்ததாகவும் புகை மூளுவதைக் கண்டு ஓடி வந்து பார்த்தபோது வீடு எரிந்து கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
தனது தந்தை 1990ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட பின்னர் மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் தான் மத்திய கிழக்குக்கு சென்று வீட்டுப் பணிப்பெண் வேலை செய்து உழைத்த பணத்திலேயே இரண்டு அறைகள் கொண்ட இந்த வீட்டை கட்டி, திருமணம் முடித்ததாகவும் அவர் கூறினார்.

தீயினால் வீட்டிலிருந்த சகல உடமைகளும் எரிந்துள்ளதோடு வேறு ஒருவருக்கு வழங்குவதற்காக வைத்திருந்த சீட்டுப் பணம் 1 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா நோட்டுக்களும் எரிந்து அரைகுறையாகக் கிடப்பதாகவும் அவர் கூறினார்.
பொலிஸார் இச்சம்பவம் பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: