17 Feb 2017

அநீதியைச் சுட்டிக்காட்டிய ஆசிரியர்கள் பழிதீர்க்கும் விதமாக பணி நீக்கம் கண்டிக்கிறது கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கம்

SHARE
இடமாற்றத்தின் போது இழைக்கப்பட்ட அநீதியைச் சுட்டிக் காட்டிய வடமாகாணத்தைச் சேர்ந்த 03 ஆசிரியர்கள் பழிதீர்க்கும் விதமாக பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். ஜெயராஜா தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தைச் சேர்ந்த 3 ஆசிரியர்கள் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளரினால் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பதைக் கண்டித்து கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கம் புதன்கிழமை (15.02.2017) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது@

இடமாற்றங்களின் போது தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் தட்டிக் கேட்ட ஆசிரியர்கள், தன்னைத் தாக்க வந்தார்கள் எனக்கூறி, வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின்  செயலாளரினால் கடந்த ஜனவரி 11ஆம் திகதி 03 ஆசிரியர்கள் பழிவாங்கப்பட்ட சம்பவம்  மிகவும் துரதிருஷ்ட வசமானது.

அந்த ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டது நாகரிகமற்ற செயலாகும். இதனை அரச உத்தியேகத்தர் மீது அரச அதிகாரிகள் மேற்கொள்ளும் அராஜக செயற்பாடாகவே நாம் கருதுகின்றோம்.

யுத்தகாலத்தில்  கூட  கல்வியில் முன்னணியில் இருந்த வடமாகாணம் தற்பொழுது, கல்வித் தரப்படுத்தலில் எட்டாவது  மாகாணமாகக் கணிக்கப்பட்டுள்ளது.

வடமாகாணக் கல்வி அமைச்சரே இதற்குப் பொறுப்புக் கூறவேண்டியவராகும்.
இடமாற்றங்களின் போது இவ்வளவு குளறுபடியானால், நியமன அதிகாரங்கள் வழங்கப்பட்டால், நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டியுள்ளது.

எவ்வாறிருப்பினும், வட மாகாண ஆசிரிய சமூகமும் வடமாகாணத்தில் இயங்கும் ஆசிரியத் தொழிற் சங்கங்களும் பலமுள்ளதாக மாற வேண்டும்.
தங்களுக்கு இழைக்கப்படும் அநியாயங்களை ஆசிரிய சமூகம் ஜனநாயக நீதியில் வன்முறையற்ற முன்மாதிரியான வழிமுறையில் தட்டிக் கேட்க வேண்டும்.” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: