“கடந்த 11 வருடங்களுக்கு மேலாக வீட்டுப் பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவுக்குச் சென்ற எனது மகள் திரும்பி வரவே இல்லை. எதுவித தொடர்புகளும் இல்லை. எப்படியாவது எனது மகளை மீட்டுத் தாருங்கள்”
என யுவதியின் தாய் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏறாவூருக்கு வருகை தந்திருந்த சமயம் இந்த உருக்கமான வேண்டுகோள் ஜனாதிபதியிடம் முன் வைக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் காயர் வீதியைச் சேர்ந்த முஹம்மது ஹனீபா பிர்தௌஸியா (தற்போது வயது 33) என்ற யுவதி கடந்த 2006 ஆம் ஆண்டு நெவெம்பெர் மாதம் 02ஆம் திகதி கொழும்பிலுள்ள ஹஸ்னா மேன்பவர் முகவரினூடாக வீட்டுப் பணிப்பெண்ணாகத் தொழில்வாய்ப்புப் பெற்று சவூதி அரேபியா சென்றுள்ளார்.
ஆனால், இன்றுவரை அவர் நாட்டை விட்டுச் சென்று 11 வருடங்களாகியுள்ள போதிலும் தனது மகள் ஒரு முறையேனும் நாடு திரும்பவே இல்லை என்று யுவதியின் தாயான சின்னலெப்பை ஆஷியா உம்மா (வயது 73) தெரிவித்தார்.
அதேவேளை கடந்த 6 வருடங்களாக தனது மகளிடமிருந்து பணம் கிடைப்பது நின்று விட்டது என்றும் கடந்த 4 வருடகாலமாக அவர் காணாமல் போயிருப்பதாகவும் தாய் ஜனாதிபதியிடம் கையளித்த தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இது விடயமாக கொழும்பில் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் நல்லிணக்கப் பிரிவுக்கு 2013 ஜனவரி 16 ஆம் திகதியன்று முறைப்பாடு செய்தபோது “அடுத்த வினாடியிலிருந்தே தமது பணியகம் நடவடிக்கை எடுக்கும்” என்று பத்திரம் ஒன்று தரப்பட்டது. ஆனால் இந்த உத்தரவாதம் அளிக்கப்பட்டு நான்கரை வருடங்கள் கழிந்து விட்ட போதிலும் தனது மகளின் விடயமாக எதுவித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை என்றும் யுவதியின் தாய் கூறினார்.
தனது மகளின் நிலைமை தொடர்பாகக் கண்டறியுமாறும் தனது மகளை மீட்டுத் தருமாறும் கோரி தான் ஏறாவூர் நகர பிரதேச செயலக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பிரிவு தொடக்கம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் நல்லிணக்கப் பிரிவு, மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழு, மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா உள்ளிட்ட பல இடங்களில் முறையிட்டுள்ள போதும் சாதகமான எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.
இப்பொழுது நாட்டின் அதியுயர் அதிகாரத்திலிருக்கின்ற ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளேன். இதன் மூலமாகவாவது எனது மகள் பற்றிய தகவல் எனக்குக் கிடைத்தால் போதும்” என்று கவலை ததும்ப அவர் தனது துயரத்தை வெளியிட்டார்.
0 Comments:
Post a Comment