முகநூல் மூலம் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஏறாவூர் பிராந்திய அலுவலகம் புதன்கிழமை (21.12.2016) தெரிவித்தது.
இது குறித்து கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஏறாவூர் அலுவலக இணைப்புச் செயலாளர் செய்னுலாப்தீன் ஹிதாயத்துல்லாஹ் தெரிவிக்கும்போது ஏறாவூரைச் சேர்ந்த நபர் ஒருவரால் நிருவகிக்கப்படும் முகநூலொன்றின் மூலமாக முதலமைச்சருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
“ஏறாவூர் மக்களை பிழையாக வழி நடாத்திய அந்த இடத்திற்கு முதலமைச்சர் வருவதாக இருந்தது” என்று அந்த முகநூல் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது குறித்தே ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதாக இணைப்புச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
இந்த முகநூல் யாரால் இயக்கப்படுகின்றது என்பது பற்றிய விவரத்தையும் முதலமைச்சரின் அலுவலகம் ஏறாவூர் பொலிஸாருக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த முறைப்பாட்டை தீவிரமாக விசாரித்து சம்பந்தப்பட்ட நபருக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் பொலிஸ் உயரதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு கேட்டுள்ளதாகவும் ஹிதயாத்துல்லாஹ் மேலும் தெரிவித்தார்.
மக்களைக் தவறாக வழிநடத்தி குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிக்கும் இத்தகைய பொறுப்புணர்ச்சியற்ற முகநூல் நபர்கள் குறித்து உரிய விசாரணைகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் பொலிஸாரைக் கேட்டுள்ளார்.
இதேவேளை, அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் முகநூல் நபர்கள் குறித்து எச்சரிக்கையாய் இருக்குமாறும் முதலமைச்சர் பொதுமக்களைக் கேட்டுள்ளார்.
முதலமைச்சர் குறித்து வெளியிடப்பட்டிருந்த அந்த முகநூல் செய்தியில் ஏறாவூரிலுள்ள கிராமம் ஒன்றில் முதலமைச்சரின் பெயரால் ஆட்கள் அழைக்கப்பட்டு அடாவடித்தனம் புரிந்ததாகவும், குடிசைக்குத் தீவைத்து, அங்கிருந்த தென்னை மரங்கள் பிடுங்கி எறியப்பட்டதாகவும், வேலிகள் நாசம் செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், இவ்வாறானதொரு சம்பவம் அந்தப் பகுதியில் நிகழ்ந்திருக்கவே இல்லை என்று முதலமைச்சரின் ஏறாவூர் பிராந்திய அலுவலகம் தெரிவித்தது.
முதலமைச்சர் சார்பாக பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாடு குறித்து தாம் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment