மட்டக்களப்பு ஏறாவூரிலிருந்து தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பிரதேச இளைஞர் சம்மேளன உறுப்பினர்களில் ஒருவரான யூசுப் நவாஸ் பங்களாதேஷில் நடக்கும் சர்வதேச இளைஞர் பரிமாற்று நிகழ்ச்சித் திட்ட நிகழ்வுகளில் பங்குபெறுவற்காக புதன்கிழமை (நொவெம்பெர் 16, 2016) டாக்கா சென்றுள்ளார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் அம்மன்றத்தின் சர்வதேச இளைஞர் தொடர்புப் பிரிவு ஆகியவை இணைந்து பங்களாதேஷ் நாட்டில் ஏற்பாடு செய்துள்ள 4 வது இளைஞர் பரிமாற்றுத் திட்ட நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இலங்கையிலிருந்து 15 இளைஞர் யுவதிகள் புதன்கிழமை பங்களாதேஷ் சென்றடைந்துள்ளனர்.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நொவெம்பெர் 16 தொடக்கம் 24 ஆம் திகதி வரை இடம்பெறும் இளைஞர் பரிமாற்றுத் திட்ட வெளிக்கள மற்றும் உட்கள நிகழ்வுகளில் உலகின் பல்வேறு நாடுகளிலுமிருந்தும் இளைஞர் யுவதிகள் பங்குபற்றுகின்றனர்.
பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கு இடையிலான இந்த இளைஞர் பரிமாற்று வேலைத் திட்டம் இளைஞர்கள் மத்தியில் ஒருங்கிணைந்த நடைமுறைச் சாத்தியமான பயிற்சிகளையும், சிந்தனை மற்றும் கலாசாரப் பரிமாற்றத்தையும் வளர்த்துக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பை வழங்கும் என்று ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment