மட்டக்களப்பு மாவட்டம் மகிழூர் கண்ணகிபுரம் கிராமத்தினைச் சேர்ந்த பொன்னம்பலம் யசோதரன்(பிரதிப்) வயது 31 எனும் இளைஞன் மீது புதன் கிழமை (19) இனம்தெரியாத நபர்களினால் கத்திக்குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இந்நிலையில் தனது
தம்பியை யாரோ தாக்குகின்றார்கள் என்பதை அவதானித்த அயோசரனின் அண்ணா அவதானித்தவுடன் தடுக்கச் சென்ற வேளையில் அவரும் இச்சம்பவத்தில் பலத்த அடிகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றார்.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது….
மகிழூர் கண்ணகிபுரத்தைச் சேர்ந்த பொன்னம்பலம் யசோதரன் புதன் கிழமை மாலை 7.00 மணியளவில் தனது வீட்டில் இருந்த வேளை வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வருகைதந்திருந்த இருவர் தாங்கள் ரகசிய விசாரணைப்பிரிவில் இருந்து வருகை தந்திருப்பதாகவும் யசோதரனை வெளியில் வரும்படியும் அழைத்துள்ளனர். வெளியில் செல்ல யசோதரன் மறுத்த வேளையில் வீட்டினுள் நுழைந்த இனந்தெரியாத இருவரும் யசோதரனை சரமாரியாக கூரிய ஆயுதங்களால் தாக்கியிருக்கின்றனர், இதனைத் தடுக்கச்சென்ற அவருடைய அண்ணாவான பொன்னம்பலம் உதயசங்கர் என்பவரும் ஆயுதங்களால் தாக்கப்பட்ட நிலையில் தற்பொழுது களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இந்நிலையில் வீட்டில் இருந்தவர்கள் கதறியழுகையில் பயந்து தப்பியோடிய இனந்தெரியாத நபர்களை கிராமத்து இளைஞர்கள் சிலர் அவர்களைப் பின்தொடர்ந்து விரட்டி செல்கையில், ஓந்தாச்சிமடம் எனும் இடத்தில் சந்தேக நபர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளான நிலையில், பின்தொடர்ந்த இளைஞர்களினால் வீதிப்போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசாருக்கு விடயம் அறிவிக்கப்பட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.
தற்போது களுவாஞ்சிகுடிப் பொலிஸ் நிலையத்தில் சந்தேக நபர்கள் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப் படுகின்றன.
யசோதரன் மத்தியகிழக்கு நாட்டிற்கு வேலைக்காக சென்று விடுமுறைக்காக நாடுதிரும்பியிருந்த நிலையில் விடுமுறை நிறைவுற்று மீண்டும், வியாழக்கிழமை (20) வெளிநாடு செல்லவிருந்த நிலையில் இவ்வாறான தாக்குதல் இடம்பெற்றிருக்கின்றது என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவத்தால், பொன்னம்பலம் யசோதரன் வயிற்றுப் பகுதி மற்றும் கைப் பகுதி போன்ற இடங்களில் காயங்களுக்குள்ளான நிலையிலும், அவரது அண்ணாவான பொன்னம்பலம் உதயசங்கர்; என்பவர் கைகளில் உபாதை ஏற்பட்ட நிலையிலும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையிலிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிசார் துரித விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment