21 Sept 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விட்டுச்சென்ற நிகழ்ச்சி நிரலையே தற்போதைய ஆட்சியாளர்கள் தொடர்ந்து செல்கின்றனர்

SHARE
வடக்கு மாகாணத்துக்கு சர்வதேச இராஜதந்திரிகள் வந்து செல்கின்றனர். ஆனால், கிழக்கு மாகாணத்துக்கு இராஜதந்திரிகள் வருகின்றமை குறைவாக உள்ளது. இதன் காரணமாக இம்மாகாணம் புறக்கணிக்கப்படுகின்றது என அம்மாகாண சபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் மூவின மக்கள் வாழ்வதாக அரசியல் தலைமைகள் கூறுவதன் காரணமாக இம்மாகாணத்தில்; எந்தக் குறையும் இல்லை என்று அவர்கள் கருதுகின்றனர் எனவும் அவர் கூறினார். மட்டக்களப்பு, புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் நேற்றுப் புதன்கிழமை அனுஷ்டிக்கப்பட்டபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். 


இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விட்டுச்;சென்ற நிகழ்ச்சி நிரலையே தற்போதைய ஆட்சியாளர்கள் தொடர்ந்து செல்கின்றனர். மேலும், இந்த நல்லாட்சியில்  நீதி கிடைக்கும் என்று நம்பினோம்.

ஆனால், அது பொய் என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து வருகின்றனர். இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காத காரணத்தால், நாங்கள் சர்வதேசம் நோக்கி ஒரு தீர்வை  எதிர்பார்க்க வேண்டிய நிலையில் உள்ளோம்' என்றார்.
SHARE

Author: verified_user

0 Comments: