25 Jul 2016

வட்டார பிரிப்பின்போது எல்லைகள் துல்லியமாக நிர்ணயம் செய்யப்பட வேண்டும் ஆணைக்குழுவிடம் மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக்

SHARE
வட்டார பிரிப்பின்போது எல்லைகள் துல்லியமாக நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என எல்லை நிர்ணய ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் முன்வைத்துள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.

எல்லை நிர்ணய ஆணைக்குழுவினுடைய தலைவர் அதன் அங்கத்தவர்கள் மற்றும் கிழக்கு மாகாண சபையின் உள்ளுராட்சி அமைச்சினுடைய பிரதிநிதிகள் உட்பட பல உயர் அதிகாரிகள் ஞாயிறன்று (ஜுலை 24,  2016)  மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இதன்போது 21.08.2015 ஆந்திகதியன்று வெளியான 1928ஃ28 இலக்கம்  கொண்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளிலுள்ள பிரச்சனைகள் சம்மந்தமாக ஆராயப்பட்டது.

இதன்போது காத்தான்குடி வட்டார பிரிப்புக்கு முன்பாக அதனுடைய எல்லைகள் சரியாக பிரிக்கப்பட வேண்டுமென்றும் காத்தான்குடியினுடைய எல்லைகள் தொடர்பாக 1987.05.12 அன்று வெளியான வர்த்தமானி இலக்கம் 453ஃ18, 1997.07.04 அன்று வெளியான வர்த்தமானி இலக்கம் 58ஃ1092 மற்றும் 1998.12.11 அன்று வெளியான வர்த்தமானி இலக்கம் 1057ஃ16 ஆகியவற்றின் பிரகாரம் அமையப்பெற வேண்டிய எல்லைகளையும் அதன் பரப்பிணையும் பற்றி தெளிவாகவும் விரிவாகவும் வந்திருந்த எல்லை நிர்ணய ஆணைக்குழுவினருக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெளிவுபடுத்தியதுடன் அதற்கான சிறந்த தீர்வினை பெற்றுத்தருமாறு வேண்டுகோள் விடுத்தார்.

அத்தோடு, காத்தான்குடியினுடைய சனத்தொகைக்கு ஏற்ப காத்தான்குடியினுடைய வட்டாரப் பிரிப்பு 2015.08.21 அன்று வெளியான இலக்கம் 1928ஃ28 வர்த்தமானி பிரகாரம் எல்லை வரையறுக்கப்பட்டிருப்பது போதாது என்றும் அதனை 18 வட்டாரங்களாக அதிகரிக்க வேண்டும் என்ற நியாயங்களை முன்வைத்ததுடன் ஏற்கனவே உள்ளூராட்சி மாகாண சபைகளினுடைய செயலாளருக்கு 2015.11.18 திகதியன்று அனுப்பிவைக்கப்பட்ட முன்மொழிவினுடைய பிரதி ஒன்றினை எல்லை நிர்ணய ஆணைக்குழுவினரிடம் கையளித்து அதற்கான  சிறந்த தீர்வினை பெற்றுத்தருமாறும் கோரினார்.

மேலும், மண்முனை வடக்கு மஞ்சந்தொடுவாய் வட்டாரம் இரட்டை அங்கத்துவ வட்டாரமாக மாற்றப்பட (ஆக்கப்பட) வேண்டும் என்றும் இல்லாவிடின் அங்கிருக்கின்ற மட்டக்களப்பு மாநகர சபையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்யப்படுகின்ற ஓர் துர்ப்பாக்கிய நிலை ஏற்படும் என்பதனை தெளிவுபடுத்தியதுடன், புளியந்தீவு வட்டாரம் இரட்டை அங்கத்துவ வட்டாரமாக 2015.08.21 திகதியன்று வெளியான வர்த்தமானியின் பிரகாரம் ஆக்கப்பட்டிருப்பது நியாயமற்றது என்பதை தெளிவுபடுத்தி மஞ்சந்தொடுவாய் வட்டாரம் இரட்டை அங்கத்துவ வட்டார தொகுதியாக மாற்றி முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தி தருமாறும் கேட்டுக் கொண்டார்.

மண்முனைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட வட்டாரத்திற்கு முஸ்லிம்களினுடைய பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படுகின்ற விதத்தில் அதனுடைய வட்டார எல்லைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் இவ் ஆணைக்குழுவினரிடம் ஷிப்லி பாறுக் கேட்டுக் கொண்டார்.

இந்த சந்திப்பில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ். அமீர் அலி, மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே. துரைராஜசிங்கம், மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.








SHARE

Author: verified_user

0 Comments: