மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை முடக்கும் எந்தவொரு சூழ்ச்சிகளையும் எமது மாகாண சபை முறியடிக்கும் என கிழக்கு முதல்வர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
நெல்சிப் திட்டத்தின் கீழ் 18.57 மில்லியன் ரூபாய் செலவில் மட்டக்களப்பு-ஓட்டமாவடியில் ஓட்டமாவடி பாலத்தை அண்டியதாக நிருமாணிக்கப்பட்டுள்ள நவீன மீன் சந்தைக் கட்டிடத் தொகுதி புதன்கிழமை (ஜுன் 22, 2016) மாலை கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டினால் திறந்து வைக்கப்பட்டது.
மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்ட பின்னர் அங்கு தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர்,
கிழக்கு மாகாண சபை தனக்கிருக்கின்ற முழு அதிகார பலத்தையும் கிழக்கு மாகாணத்திலுள்ள சகல இன மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்கின்ற சேவைக்காக பயன்படுத்துமே தவிர அதனை ஒருபோதும் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்காக துஷ்பிரயோகம் செய்யாது.
அரசியல் சூழ்ச்சிகளைக் கண்டு மக்களுக்குச் சேவைகளை செய்யாது அஞ்சி ஒதுங்குகின்ற ஒரு மாகாண நிருவாகமாக எனது தலைமையிலான மாகாண சபை ஒரு போதும் இருக்காது என்பதை நாங்கள் பல இடங்களிலும் நிரூபித்து வந்திருக்கின்றோம்.
இந்த நிகழ்வும் அதுபோல ஒன்றுதான். இந்த மீன் சந்தைக் கட்டிடத் தொகுதியை மக்களுக்குக் கையளிப்பதில் பல்வேறு முட்டுக் கட்டைகள் போடப்பட்டன. எனினும், அவற்றை நாம் பிரதேச மக்களின் பலத்தோடு முறியடித்திருக்கிருக்கின்றோம்.
மாகாண சபைக்கு அரசியல் யாப்பின் மூலம் வழங்கப்பட்டிருக்கின்ற அதிகாரத்தை எவரும் கேள்விக்குட்படுத்த முடியாது.
தனது சொந்த நலன்களை கைவிட்டு விட்டு மக்களுக்காகவே அரசியல் செய்ய வேண்டும். மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை சேவைகளையும் நாம் அரசியல் பலத்தோடு இருக்கும் பொழுது முடிந்ததைச் செய்து விட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். இதில் மக்களைக் கேடயங்களாகவோ, பகடைக் காய்களாகவோ எவரும் பயன்படுத்தக் கூடாது.
அவ்வாறு செய்தால் நமக்கு அரசியல் பலத்தைத் தந்த மக்கள் பாதிக்கப்பட்டுப் போய் விடுவார்கள்.
கிழக்கின் முதலமைச்சரும், மாகாண அமைச்சர்களும், மாகாண நிருவாகமும் ஒரு போதும் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வதற்காக இயங்கிக் கொண்டிருக்கவில்லை.
அரசியல் யாப்பில் மாகாண சபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை வைத்துக் கொண்டு மக்களுக்கு தன்னாலான என்னென்ன சேவைகளை வழங்கலாமென சிந்தித்துக் கொண்டிருக்கின்றோமே தவிர பெருமையடித்துக் கொண்டு மக்களுக்கு உரிய காலத்தில் கிடைக்கக் கூடிய சேவைகளைப் பின்தள்ளிப் போடுவதற்காக நாம் இயங்கிக் கொண்டிருக்கவில்லை.
நேரான, சீரான, வெளிப்டைத் தன்மையான எங்களது கிழக்கு மாகாண சபையின் நல்லாட்சியை உள்ளிருந்தோ வெளியிலிருந்தோ குலைப்பதற்கும் குழப்புவதற்கும் ஒருபோதும் நாம் இடமளிக்கப் போவதில்லை” என்றார்.
நெல்சிப் திட்டத்தின் கீழ் 31 கடைத் தொகுதிகள் கொண்ட நவீன மீன் சந்தைக் கட்டிடத்தின் நிருமாணப் பணிகள் 2014 ஆம் ஆண்டு 18.57 மில்லியன் ரூபாய் செலவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே. சித்திரவேல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாகாண அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், பிரதேச சபைச் செயலாளர்கள், ஓட்டமாவடி பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஹமீட் உட்பட ஓட்டமாவடி, வாழைச்சேனைப் பிரதேச முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment