கல்முனை பொலிஸ் பிரிவிலுள்ள சாய்ந்தமருது ஸாஹிறா பாடசாலை வீதியைச் சேர்ந்த 29 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயொருவரை கடத்தியதாக செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் தாம் இரண்டு சந்தேக நபர்களை ஞாயிறன்று 08.05.2016 கைது செய்திருப்பதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புபட்டதாக பெண் கடத்தப்படும்போது கடத்தப்பட்ட பெண்ணின் இளைய சகோதரியால் கைப்பேசி மூலம் எடுக்கப்பட்ட படத்தை ஆதாரமாகக் கொண்டு ஞாயிறன்று 08.05.2016 இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த 23 வயதுடைய நபர் ஒருவரும், கல்முனைக்குடி 9 ஐச் சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோஷ்டியினரால் பெண் வீட்டில் வைத்து கடத்தப்படும்போது கடத்தப்பட்ட பெண்ணின் இளைய சகோதரி அந்த சந்தர்ப்பத்தை தனது கைப்பேசியைப் பாவித்து சமயோசிதமாகப் படம் பிடித்துள்ளார்.
கடந்த 5 ஆம் திகதி கடத்தப்பட்டு இன்னமும் கண்டு பிடிக்கப்படாத நிலையில் பெண்ணின் கடத்தலோடு சம்பந்தப்பட்ட சந்தேக நபராக பெண்ணின் முன்னாள் கணவரும் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் கூறினர்.
கணவனிடமிருந்து விவாகரத்துப் பெற்று பிள்ளைகளுடன் வாழ்ந்துவரும் நிலையிலேயே இந்தக் கடத்தல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment