(தீரன்)
ஊடகதர்மத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உண்மையை உலகிற்கு கொண்டு சென்ற சுகிர்தராஜனை ஊடகத்துறையால் காப்பாற்ற முடியாமல் போனது என்பது கசப்பான உண்மையே.
மட்டக்களப்பு குருமண்வெளியில் பிறந்த சுப்பிரமணியம் சுகிர்தராஜன் என்ற ஊடகவியலாளர் தனது தொழில் நிமிர்த்தமாக திருமலையில் தங்கியிருந்த நேரத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ம் திகதி இனம் தெரியாத நபர்களினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
திருகோணமலையில் இருந்து சுடரொளி, உதயன் ஆகிய பத்திரிகைகளின் திருகோணமலை நிருபராகக் கடமையாற்றிய சுகிர்தராஜன் வீரகேசரி, மெற்ரோ நியூஸ் ஆகியவற்றில் அரசியல் கட்டுரைகள் எழுதிவந்தார்.
வீரகேசரியில் எஸ்.எஸ்.ஆர், மனோ, ரஹ்மான் ஆகிய பெயர்களிலும் மெற்ரோ நியூஸ் பத்திரிகையில் ஈழவன் என்ற பெயரிலும் அரசியல் விடயங்களை எழுதி வந்தார்.
இன்நிலையில் கடந்த 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் திருகோணமலையில் வைத்து பல்கலைகழகத்திற்கு தெரிவாகியிருந்த ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை உலகிற்கு வெளிச்சம்போட்டுக் காட்டியிருந்தார் ஊடகவியலாளர் சுகிர்தராஜன் இதன் காரணமாக அவர் குறிவைக்கப்பட்டிருந்தார்.
அன்று இருந்த பொலீஸ் அதிகாரிகள் குறித்த ஐந்து மாணவர்களின் இறப்புக்கு கைக்குண்டு தாக்குதலே காரணம் எனக் கூறி விசாரணையை திசைதிருப்ப முயற்சிசெய்த நேரத்தில் ஊடகவியலாளர் சுகிர்தராஜன் மிகவும் துணிச்சலுடன் செயற்பட்டு சுட்டுகொல்லப்பட்ட மாணவர்களின் சூட்டுக்காயங்களை நுட்பமாக படமெடுத்து குறித்த மாணவர்கள் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டே இறந்துள்ளனர்.
அவர்களின் தலையில் உள்ள காயங்கள் கைக்குண்டு தாக்குதலாள் ஏற்பட்டவை அல்ல அது துப்பாக்கி குண்டுகளால் ஏற்படுத்தப்பட்டவை என்பதை உலகிற்கு வெளிக்காட்டியிருந்தார்.
சுகிர்தராஜனின் குறித்த செய்தி அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியில் பாரிய அழுத்தத்தை கொடுத்ததுடன் அது ஐக்கியநாடுகள் சபையின் விசாரணைக்கும் உள்வாங்கப்பட்டிருந்தது.
இந்த செய்தியே அன்று சுகிர்தராஜன் சுட்டுக்கொல்லப்படக் காரணமாக அமைந்திருந்தது என கூறப்படுகிறது.
ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜன் கெல்லப்பட்டு பத்து ஆண்டுகள் கழித்து அவரது சோந்த ஊரான கல்முனையில் உள்ள அவரது தாயின் வீட்டுக்கு கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்தை சேர்ந்தவர்கள் சென்றபோது அங்கு மிகுந்த வேதனைகளுடன் ஊடகவியலாளர்களைப் பார்த்து கண்ணீர் சிந்தியபடி சுகிர்தராஜனின் தாயார் கேட்ட முதல் கேள்வி,
பத்து ஆண்டகளாய் நீங்கள் எங்கு சென்றிருந்தீர்கள் இன்றுதான் உங்களுக்கு இவர்களைப்பற்றி ஞாபகம் வந்ததா? என்று தங்களது நியாயமான ஆதங்கங்களை எங்களிடம் தெரிவித்திருந்தனர். நாங்களும் அவர்களின் கேள்விகளுக்கு பதில் இன்றி வாய் மூடி மௌனியாகவே நிற்கவேண்டி நிலையில் இருந்தோம்.
உண்மையில் சுகிர்தராஜனின் இறப்பிற்கு பின்னர் அவரது குடும்பம் தொடர்பாக யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை குறிப்பாக ஊடகத்துறைசார்ந்தவர்கள் அன்றிருந்த சூழ்நிலைகள் காரணமாகவும் பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாகவும் சுகிர்தராஜனின் குடும்பத்தினருடனான தொடர்வுகளை பேணுவதை தவிர்த்திருந்தனர்.
இந்த இடைவெளி பத்துவருடங்களாக நீடித்துள்ளது என்பதை நாங்கள் அங்கு சென்றபோதுதான் அறிந்தோம் உண்மையில் பத்துவருட இடைவெளி என்பது மிகப்பெரியதே இதனை யாராளும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ் சமூகத்தின் ஊடகப்போராளியாக செயற்பட்ட சுகிர்தராஜனின் இழப்புக் குறித்த செய்திகள் அப்போது ஏற்பட்ட கடுமையான யுத்த சூழ்நிலைகாரணமாக பெரிதாக கவனம்செலுத்தப்படவில்லை என்பதோடு பின்நாட்களில் அதுகுறித்து கவனம் செலுத்தப்படாமல் போனமையானது வேதனையானதே.
குறிப்பாக யுத்த சூழ்நிலை காரணமாக நாட்டைவிட்டு பல தமிழ் ஊடகவியலாளர்கள் வெளியேறி பாதுகாப்பாக இருந்தாலும் அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறியதோடு நாட்டில் உள்ள ஊடகவியலாளர்கள் குறித்து கவனம்செலுத்த தவறிவிடுகின்றனர்.
மிகமுக்கியமாக ஊடகத்துறைக்காக தங்களது உயிரை அர்ப்பணித்த ஊடகவியலாளர்களின் குடும்பங்கள் குறித்து கவனம் செலுத்த தவறிவிடுகின்றனர்.
சுகிர்தராஜன் போன்ற ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு இலங்கையில் உள்ள ஊடகநண்பர்களை விட புலம்பெயர் தேசத்தில் உள்ள ஊடகநண்பர்களினாலே இப்போதைக்கு உதவி செய்யமுடியும்.
மிதுசா(14), சதுர்சன்(12) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையான சுகிர்தராஜன் தனது குடும்பத்தின் எதிர்காலத்திற்காக எதையுமே சேர்த்துவைக்கவில்லை.
சுகிர்தராஜனின் தாயாரின் அரவனைப்பில் வாழ்ந்துவரும் தனது குடும்பம் குறித்த தனது மனக்கவலைகளையும் ஆதங்கங்களையும் சுகிர்தராஜனின் மனைவி எங்களிடம் தெரிவிக்கும்போது.
“என்னைப் பொறுத்தவரையில் தமிழ் ஊடகத்துறையில் பணியாற்றுவதே தேவையில்லாது தமிழ் ஊடகத்துறையில் பணியாற்றி உயிரிழந்த எனது கணவரை புதைக்கும் வரை பலர் இருந்தார்கள் அவரை புதைத்ததற்கு பிறகு தமிழ் ஊடகத்துறை சார்ந்த யாருமே எங்களை திரும்பிப்பார்க்கவில்லை இன்று நானும் எனது குழந்தைகளுமே தனியாக தத்தளிக்கின்றோம்” எனக் கூறினார்.
சுகிர்தராஜனின் தாயார் கூறும்போது “நாம் பல வருடங்களாக தைப்பொங்கள் கொண்டடியதில்லை தைப்பொங்கள் தினம் வந்தாலே எனது மகனின் நினைவுதான் வரும் எனது மகனை நான் இங்கிருந்து திருகோணமலைக்கு போகவேண்டமென்றே கூறினேன் எப்படியாவது எல்லாத்தையும் விட்டுத்து வா என்றேன்
அவன் கேட்கவில்லை கடைசியாக பெட்டியிலதான் வந்தான் இன்று அவன் இறந்து பத்துவருடமாகிறது இன்றுவரை யாரும் வரவில்லை நீங்கள் இன்று வந்துள்ளீர்கள் இவ்வளவு காலமும் ஒருதரும் வரவில்லை. எங்களுக்கு அதுதான் கோபமாகவுள்ளது எங்களுக்கு எந்த உதவியும் தேவையில்லை தயவு செய்து விடுங்கள்” என கதரியழுதார்.
ஊடகத்துறையில் பணியாற்றி உயிர்நீர்த்த பல ஊடகவியலாளர்கள் குடும்பங்கள் இன்றும் பல்வேறு துன்பங்களை சுமந்துகொண்டே வாழ்கின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.
அந்தவகையில் தனது 36 வயதில் இன்னும் பல சாதனைகளை புரியவேண்டிய தருனத்தில் தனது சின்னஞ்சிறு குழந்தைகள் இரண்டையும் இளவயது மனைவியையும் விட்டு சுகிர்தராஜன் இந்த மண்ணைவிட்டு பிரிந்து சென்ற துயரம் அந்தக் குடும்பத்தை இன்னும் வாட்டிவதைத்துக்கொண்டே இருக்கின்றது.
சுகிர்தராஜனின் இழப்பு தமிழ் ஊடகசமூகத்திற்கு மட்டுமல்ல அவரின் குடும்பத்திற்கே பேரிழப்பு என்பதை உணர்ந்து சுகிர்தராஜனின் குடும்பத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து உதவுமாறு கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
0 Comments:
Post a Comment