கிழக்கு மாகாண சபையின் ஆட்சியைக் கைப்பற்றிய ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் அக்கட்சியினால் நியமிக்கப்பட்ட முதலமைச்சரினாலும் மாகாண ஆட்சியை முன்கொண்டு செல்ல முடியாமல் தடுமாறிக் கொண்டிருப்பதனையிட்டு கவலையடைவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
ஏறாவூர் மாக்கான் மகா வித்தியாலயத்தின் அதிபராகவிருந்து ஓய்வு பெற்றுச் சென்ற முன்னாள் அதிபர் கே.கால்தீனை பாராட்டும் நிகழ்வில் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், எமது பிரதேசத்தின் கல்விக்காக சுமார் முப்பத்து ஏழு வருடங்கள் தன்னை அர்ப்பணித்து சுமார் 25 வருடகாலமாக அதிபராகவிருந்து இம்மண்ணுக்கு சேவையாற்றிய முன்னாள் அதிபர் கால்தீனை பாராட்டுவதில் பெருமிதமடைகின்றேன். இன்று இப்பிரதேசத்தின் கல்வித் துறையை மேலும் அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது. இதற்கு இப்பிரதேசத்திலுள்ள அரசியல்வாதிகளும், கல்விமான்களும் பல அர்ப்பணிப்புகளைச் செய்ய வேண்டியுள்ளது.
அன்று மாகாண அமைச்சராக நான் இருந்த போது இப்பிரதேசத்தின் கல்விக்கு என்னாலான பணிகளை முடியுமானளவிற்கு செய்துள்ளேன். ஆனால் இன்று எமது பிரதேசத்தவர்கள் முதலமைச்சராக இருந்தும் ஒன்றுமே செய்ய முடியாத நிலமைகளே காணப்படுகிறது.
தற்போது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பலத்துடன் ஆளுகின்ற கிழக்கு மாகாண சபை இன்று பலவீனமடைந்து செல்வதனை இன்றைய நிகழ்விலே பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருக்கின்ற அக்கட்சியின் தவிசாளராகிய நீங்கள் ஏற்றுக் கொண்டாக வேண்டும். குறிப்பாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சு ஆர்ப்பாட்டங்களுக்கும் போராட்டங்களுக்கும் மத்தியில் புடை சூழப்பட்டுள்ளது. அதேபோன்று கிழக்கு மாகாணத்தினுடைய சுகாதாரத்துறையின் கீழ் இருக்கும் மூதூர் வைத்தியசாலையின் நிலமையை பார்க்கும் போது கவலையளிக்கின்றது.
கிழக்கு மாகாண முதலமைச்சரே தன்னால் ஒன்றுமே செய்ய முடியாது என வெட்கமில்லாமல் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் அதிகாரிகளின் தலையிலே பழியை போட்டுவிட்டு ஒதுங்கிக் கொள்ளும் வகையில் நொன்டிக் குற்றச் சாட்டுக்கள் கூறுவதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த மாகாண சபை ஆட்சியில் நான் சுகாதார அமைச்சராக இருந்தபோது மூதூர் வைத்தியசாலைக்கு வைத்திய அத்தியட்சகரை கொண்டு வந்தவனும் நானே.
அத்தோடு அவ்வைத்தியசாலைக்கு பௌதீக வளங்களையும் கொண்டு வந்தவர்களும் நாங்கள் புல்மோட்டை வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாகவும் தரமுயர்த்தியவர்களும் நாங்கள் தோப்பூர், கிண்ணியா போன்ற வைத்தியசாலைகளுக்கும் அதிகமான நிதிகளை ஒதுக்கி அபிவிருத்தி செய்தவர்களும் நாங்கள் இவைகளெல்லாம் ஒரு கடற்படை அதிகாரியாகவிருந்த முன்னால் கிழக்கு மாகாண ஆளுநரின் பல கெடுபிடிகளுக்கு மத்தியில் அச்சமின்றி பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தவர்கள் நாங்கள்.
ஆனால் அன்றிருந்த நிலைமைகள் இன்றில்லை தற்போது முதலமைச்சர் சமகாலத்தில் கூறிவரும் நொண்டிக் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ளவும் முடியாது இன்று இந்த மாகாணத்திலே முதலமைச்சரினால் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் பழிவாங்குகின்ற நிலைமையே காணப்படுகின்றது. இதற்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளராகிய நீங்கள் என்ன சொல்லப் போகின்றீர்கள் என நான் இந்தச் சபையிலே கேட்கின்றேன்.
தற்போதைய காலகட்டத்தில் நல்லாட்சிக்கு பங்களிப்புச் செய்த முஸ்லிம் சமூகம் தங்களது நியாய பூர்வமான உரிமைகளுக்காக இன்று ஆர்ப்பாட்டத்திலும் போராட்டத்திலும் குதிக்க வேண்டியுள்ளது. இன்று வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்திற்காக நியாயம் வேண்டி ஆர்ப்பாட்டங்களும் கையெழுத்துக்களும் பெறவேண்டிய ஒரு சூழ்நிலையிலே எமது முஸ்லிம் சமூகம் இருந்து வருகின்றது.
அதுமாத்திரம் அல்லாமல் எமது நாட்டில் முஸ்லிம் சமூகம் கல்வி, பொருளாதார மற்றும் மத ரீதியாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் முஸ்லிம் மக்களின் பெரும் ஆதரவினைப் பெற்று ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, முஸ்லிம்களுக்காக ஒரு ஆறுதல் வார்த்தையைக் கூட தெரிவிக்காமையையிட்டு கவலையடைவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment