13 Dec 2014

மைத்திரி வெற்றிபெற்றால் அது சர்வதேசத்தின் வெற்றி

SHARE
யுத்தத்தையும், பயங்கரவாதத்தையும் அழித்து துடைத்தெறிந்த ஜனாதிபதியை சர்வதேசம் இன்று குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவதற்கு முட்பட்டு வருகின்றது. நாடு அபிவிருத்தி பாதையில் செல்லும் இத்தருணத்தில் பல சதிமுயற்சிகளும் நாட்டை சர்வதேசத்துக்கு தாரைவார்க்கும் செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன' என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

'எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றால் அது அவருக்கான அல்லது நாட்டுக்கான வெற்றியாக அமையாது. அது சர்வதேசத்;தின் வெற்றியாகவே அமையும்' என்றும் அவர் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கான வரட்சி நிவாரண காசோலைகளை வழங்குமு; நிகழ்வு அட்டாளைச்சேனையில் வியாழக்கிழமை(11) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

'நாட்டிலே சிறுபான்மை சமூகங்களுக்கு பிரச்சினைகள் இல்லாமலில்லை. பிரச்சினைகள் இருக்கின்றன. இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் தோன்றியது அல்ல. ஒவ்வொரு ஆட்சியாளர்களின் காலத்திலும்; பிரச்சினைகள் இருந்து வந்துள்ளன.

இவ்வாறான பிரச்சினைகள் தோன்றும்போது நாங்கள் ஆளும் கட்சி என்பதற்காக கண்டு கொள்ளாமல் இருந்ததில்லை. கிழக்கு மாகாண சபையில் நாடு,நகர சட்ட மூலத்தை அரசாங்கம் கொண்டு வந்தபோது அது சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றுகூறி அன்றிருந்த முதலமைச்சர் சந்திரகாந்தன் உட்பட நாங்கள் வன்மையாக கண்டித்தோம். 

யுத்தத்தை முடித்த கையோடு நாட்டில் இருக்கும் பிரச்சினைகள் அனைத்தையும்  இரவோடு இரவாக தீர்த்துவிட முடியாது. எல்லா இனங்களிலும் இனவாதம் பேசுபவர்கள் உள்ளனர்.

ஜனாதிபதி, பிரச்சினைகளை தீர்த்து வைக்கவில்லை என்பதற்காக எதிரணிக்கு செல்வது, சட்டியிலிருந்து அடுப்புக்குள் விழுந்த கதையாகும்.  எதிரணியிலுள்ளவர்களின் பின்புலங்களையும் அவர்களது அரசியல் பின்னணிகளையும் குறிப்பாக சிறுபான்மை சமூகத்தினர் உற்று நோக்க வேண்டும்.

அம்பாறை கரையோர மாவட்டம் வழங்கப்படுமா?, மாகாண சபைகளுக்கான காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுமா?, வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றப்படுமா?, தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கான பாதுகாப்பு, காணிப்பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படுமா? என்பதனை எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவினால் கூறமுடியுமா? என்று கேள்வி கேட்கிறேன். இவ்விடயங்கள் தொடர்பில் வாய்திறக்கக் கூடாதென்று அங்குள்ள இனவாதக் கட்சிகள் தடைபோட்டுள்ளன.

சிறுபான்மை சமூகத்தினரின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கக் கூடிய துணிவும், தைரியமும், சந்தர்ப்பமும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே உள்ளது. எனவே, கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை சிறுபான்மை சமூகத்தினர் தட்டிக்கழித்துவிடக்கூடாது.

குறிப்பாக விவசாயிகள் இந்த அரசாங்கத்தை மறந்துவிட மாட்டார்கள். விவசாயத்துறைக்கு எந்தவொரு அரசாங்கமும் செய்திராத பல நன்மைகளை துணிச்சலுடன் எமது ஜனாதிபதி செய்துள்ளார்.

கடந்தகால யுத்தத்தின் போது கைவிடப்பட்டுக் கிடந்த பல்லாயிரக்கணக்கான விவசாயக் காணிகள் இன்று மீட்டெடுக்கப்பட்டு அதில் எமது ஏழை விவசாயிகள் விவசாயம் மேற்கொண்டு தமது ஜீவனோபாயத்தைப் பெற்று வருகின்றனர்' என அவர் மேலும் தெரிவித்தார்.(tm)
SHARE

Author: verified_user

0 Comments: