3 Dec 2014

13 வயதில் மட்டக்களப்பை விட்டு லண்டனுக்குச் சென்ற நான், மக்களுக்கு சேவை செய்வதற்காக 33 வயதில் சொந்த மாவட்டத்துக்கு திரும்பிவந்துள்ளேன்.

SHARE
தமிழர்கள் எப்போதுமே எதிரணி நிலைப்பாடு எடுத்துவந்ததால், இன்று அது பல பின்னடைவுகளுக்கு இட்டுச் சென்றிருக்கின்றது என்று மட்டக்களப்பு மாவட்டத்தின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.

நீலப்படை அணியை கல்குடாத்தொகுதியில் ஆரம்பித்துவைக்கும் நிகழ்வு  அங்கு திங்கட்கிழமை (01) நடைபெற்றது.  இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

';கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சித் தலைவர் சரத் பொன்சேகாவுக்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வாக்களித்தனர். இந்தமுறையும் எதிரணிக்கு அவ்வாறு மக்கள் வாக்களித்தாலும்,  ஜனாதிபதித் தேர்தல் முடிவில் ஒருபோதும் மாற்றம் வரப்போவதில்லை.

தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே,  அதிகளவான  வாக்குகளால் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுவார். மட்டக்களப்பு மாவட்ட மக்கள், இது  தொடர்பில் அறிவுடனும் தீர்க்கதரிசனத்துடனும் சிந்தித்து முடிவெடுக்கவேண்டும்.

30 வருடகாலமாக இடம்பெற்ற போர் அழிவுகளால், கிழக்கு மாகாணத் தமிழர்கள் உயிர், உடைமை, நிம்மதி ஆகியவற்றை இழந்தனர்.
தொடர்ந்து நாங்கள் அரசாங்க எதிரணி நிலைப்பாட்டில் இருப்போமானால், எமது எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கும்.

முஸ்லிம் சமூகம், அரசியல் விவகாரங்களில் எதிரணி நிலைப்பாடு எடுக்காமையால், இன்று அபிவிருத்தியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. அந்தச் சமூகத்திலிருந்து தெரிவுசெய்யப்படும் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் ஊடாக அபிவிருத்தி இலக்கை அவர்கள் அடைகின்றனர்.

அரசியலில் எவ்வாறு முடிவெடுப்பது என்பது பற்றிய முஸ்லிம் சமூகத்தின் முன்மாதிரிகளை தமிழ்ச் சமூகம் பின்பற்றவேண்டும்;.
தமிழ் மக்கள் கடந்த 60 வருடங்களாக வீட்டுக்கும் சூரியனுக்கும் வாக்களித்து, எதிரணி நிலைப்பாடு எடுத்து இன்று யுத்தத்தால் வீடுகளை இழந்து, வெறும் சூரிய வெளிச்சத்தில் காலம் கழிக்கவேண்டியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்னர் மட்;டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி இடம்பெறவேண்டும். இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவேண்டும். தொழில் பேட்டைகளும் தொழிற்சாலைகளும் உருவாக்கப்படவேண்டும். யாழ்ப்பாணத்தில் 17 தொழில் பேட்டைகளும் 60 தொழிற்சாலைகளும் உள்ளன. ஆனால், மட்டக்களப்பில்; ஒரு தொழில் பேட்டையோ, ஒரு தொழிற்சாலையோ இல்லை.

13 வயதில் மட்டக்களப்பை விட்டு லண்டனுக்குச் சென்ற நான்,   மக்களுக்கு சேவை செய்வதற்காக 33 வயதில்  சொந்த மாவட்டத்துக்கு  திரும்பிவந்துள்ளேன்.

நான் ஐக்கிய இராச்சியத்தில் பட்டம் பெற்ற பொருளாதாரவியல் பட்டதாரி என்ற வகையில், எனது கணிப்பில் மட்டக்களப்பு தமிழ்ச் சமூகத்தின் பொருளாதாரம் கேள்விக்குறியாகவுள்ளது. இந்த பொருளாதாரப் பின்னடைவிலிருந்து இந்த மாவட்ட தமிழ்ச் சமூகத்தை மீட்டெடுக்க வேண்டுமானால்,  குறிப்பாக, பெண்கள் தங்கள் கைகளில் பொருளாதாரத்தை பொறுப்பெடுக்கவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ்ச் சமூகத்திலுள்ள ஆண்கள், யுத்தத்தின் விளைவாக பலம் இழந்ததன் காரணமாக தமிழ்ச் சமூகத்தின் பொருளாதாரம் அதல பாதாளத்துக்கு சென்றது.

போர் முடிவடைந்து 5 வருடங்கள் கழிந்தபோதிலும், இலங்கையில் வறுமையில் முதல் மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமைக்கு முக்கிய காரணம் அதிகாரிகள் மக்களை அடிப்படையாகக் கொண்டு சரியான முடிவுகளை எடுக்கவில்லை.
உன்னிச்சைக்குளத்திலிருந்து 60 கிலோமீற்றர் தொலைவிலுள்ள மட்டக்களப்பு நகரப்பகுதிகளுக்கு குழாய்நீர் விநியோகம் இடம்பெறுகின்றது.

அதேவேளை, அந்தக் குளத்தைச் சூழவுள்ள பரம ஏழைகளான ஆயிரக்கணக்கான மக்களுக்கு குடிக்க நீரில்லை. இது அதிகாரிகளின் திட்டமிடலால் விளைந்த கோளாறு.

இதுபோன்று ஏழைகளைக் கவனத்தில் எடுக்காது மேற்கொள்ளப்பட்ட தவறான திட்டமிடல்களால்தான் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிரந்தரமாகவே வறுமை குடிகொண்டு விட்டது.

சிறுபான்மை மக்கள் தமது வாக்குகளை வீணாக்கக் கூடாது. தோற்கப் போகும் வேட்பாளருக்கு வாக்களிக்கக் கூடாது. தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான் மீண்டும் அதிகப்படியான வாக்குகளால் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார்' எனக் கூறினார்.
SHARE

Author: verified_user

0 Comments: