2 Jun 2022

இலங்கையின் பொருளாதார சமூக ஐக்கிய அரசியல் அபிவிருத்தியில் தோல்வியை ஏற்படுத்திய சிங்கள ஆட்சியாளர்கள் - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜி. ஸ்ரீநேசன்.

SHARE

இலங்கையின் பொருளாதார சமூக ஐக்கிய அரசியல் அபிவிருத்தியில் தோல்வியை ஏற்படுத்திய சிங்கள ஆட்சியாளர்கள் -  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜி. ஸ்ரீநேசன்.

இலங்கை சுதந்திரம் அடைந்த போது ஆசியாவில் எமது நாடு பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்தில் இருந்தது.யப்பான், மலேசியா போன்ற நாடுகள் முதலாம் இரண்டாம் நிலைகளில் பொருளாதாரத்தில் காணப்பட்டன. தற்போது இலங்கை வங்காளதேசம், தமிழ் நாட்டுமாநில அரசு போன்றவற்றில் கடன், உதவிகளை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

அவரால் நாட்டின் பொருளாதார நிலை தொடர்பில்  புதன்கிழமை (01)ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை சுதந்திரமடைந்த நாளில் இருந்து இன்றுவரை நாட்டை ஆட்சி செய்தவர்கள் செய்கின்றவர்கள் சிங்களத் தலைவர்களேயாவர். சோல்பரி யாப்பின் மூலமாக இந்த நாட்டுக்கான பொதுத்தேர்தல் முதன் முதலாக 1947 இல் நடைபெற்றது. அத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றது. அதன் தலைவர் டி.எஸ்.சேனநாயக்க பிரதமர் ஆனார். இந்த அமைச்சரவையில் பண்டாரநாயக்க அவர்களும் பொறுப்புள்ள அமைச்சராக இருந்தார். அக்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தோன்றவில்லை. இலங்கை சுதந்திரம் அடைந்த போது ஆசியாவில் எமது நாடு பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்தில் இருந்தது.யப்பான், மலேசியா போன்ற நாடுகள் முதலாம் இரண்டாம் நிலைகளில் பொருளாதாரத்தில் காணப்பட்டன. தற்போது இலங்கை வங்காளதேசம், தமிழ்நாட்டுமாநில அரசு போன்றவற்றில் கடன்,உதவிகளை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.பொருளாதாரத்தில் நமது நாடு மோசமாக நலிவடைந்துள்ளது.வங்காள தேசம் றிசேவ் வங்கியில் அந்நியச் செலாவணியான டொலர் கையிருப்பு 30 பில்லியன் டொலராக இருக்க, இலங்கையில் டொலர் கையிருப்பு 0.05 பில்லியன் டொலர்கள் மட்டுமே உள்ளது.இந்தப்புள்ளி விபரம் ஒன்றே போதும் நாட்டின் நலிவான பொருளாதாரத்தைக் எடுத்துக்காட்டுவதற்கு. 

பொருளாதா சமூக ஐக்கிய அரசியல் அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு பல்லினமக்கள் மத்தியில் பலமான ஒற்றுமை அவசியமாகும்.அந்த ஒற்றுமையைக் கட்டியெழுப்ப வேண்டியது தலைவர்களின் பாரிய பொறுப்பாகும்.சிங்கப்பூர் தலைவர் லீக்குவான்யூ பல்லின மனித வளங்களை ஐக்கியப்படுத்தி அந்நாட்டில் வியத்தகு அபிவிருத்தியை ஏற்படுத்தினார்.நமது சிங்களத் தலைவர்கள் பல்லிமைக்கள் மத்தியில் வேற்றுமைக்கான இலவாதம் மதமாதம் என்பவற்றை விதைத்து தேர்தலில் வென்று தமது சுயநலத் தேவைகளைப் பெற்றார்கள்.நாட்டை அழிவுப் பாதையில் கொண்டு சென்று குட்டிச்சுவர் ஆக்கியுள்ளனர்.முன்னாள் ஜனாதிபதி ஜெயவர்தனா,இந்நாள் ஜனாதிபதி கோத்தபாய போன்ற தலைவர்கள் ஸ்ரீலங்காவவை சிங்கப்பூர் ஆக்க விரும்பினார்கள்.ஆனால் இனவேற்றுமை மதவேற்றுமை மூலமாக அந்த இலக்கை எட்ட முடியாது என்பதை அறியாதிருந்ததுதான் வியப்பாகவுள்ளது. நல்லதோர் உதாரணம்,யூகோஸ்லாவிய ஜனாதிபதியாக இருந்த மாசல் டிட்டோ பல்லிமைக்கள் மத்தியில் ஒற்றுமையை விதைத்து பிளவு பாடாத ஐக்கிய நாடாக அதனை அபிவிருத்தி செய்தார்.பின்னாளில் ஆட்சிப் பீடம் ஏறிய ஸ்லபோடான் மிலோசபிக் நாட்டு மக்கள் மத்தியில் வேற்றுமையை விதைத்து தனது சேர்பியப் படைகள் மூலமாக அல்பேனியர்,குரேசியர்களை இனவழிப்புச் செய்தார்.விளைவு என்ன என்றால் நாடு மூன்று தேசங்களாக உடைந்தது.மிலோசபிக் உட்பட இராணுவத் தளபதிகள் பலர் மனிதவுரிமை மீறல்கள் குற்றச்சாட்டின் பேரில் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தால் பாரிய தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

 

இலங்கையிலும் யுத்தக்குற்றங்கள்,மனித உரிமை மீறல்கள் நடைபெற்றன.ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.ஆற்றல் ஆளுமை உள்ள தலைவர்கள் தேசிய ஒற்றுமை மூலமாக தத்தம் நாடுகளில் சமூக பொருளாதார அரசியல் அபிவிருத்திகளை ஏற்படுத்தி மறக்க முடியாத உலகத் தலைவர்களாக நிலைநிற்கின்றனர்.ஆனால் நமது நாட்டை ஆட்சிசெய்த சிங்களத் தலைவர்கள் வரலாற்றில் சாதித்தது தான் என்ன?  இந்தக் காலங்களில் இன்னார் இன்னார் ஆட்சி செய்தார்கள் என்ற வரலாற்றினை விட நமது தலைவர்கள் என்ன செய்தார்கள்.

இனப்பிரச்சினையை உருவாக்கினார்கள்,அதனை எண்ணெய் ஊற்றி வளர்த்தார்கள், இனவன் முறைகளைனத் தூண்டினார்கள்,உள்நாட்டு யுத்தத்திற்கு வழிகோலினார்கள்,அதில் வெற்றி கொள்வதற்காக பாரிய கடன்களைப் பெற்றார்கள், நாட்டுமக்களின் தலைகளில் பாரிய கடன் சுமைகளை ஏற்றினார்கள். நாட்டின் வளங்களை விற்றுக் கடன்களைத்தீர்க்க முயன்றார்கள் முடியவில்லை.பிழையான திட்டங்களை வகுத்ததால் நாடு அதல பாதாழத்தில் வீழ்ந்துள்ளது. இப்போது எரிபொருள் விலையேற்றம், விலைவாசியேற்றம், மின்சாரத்துண்டிப்பு,வரிசைக் கொள்வனவு,பொருட் தட்டுப்பாடுகள் காரணமாக மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடி வருகின்றனர். பிரதமர் உட்பட பல அமைச்சர்களை மக்கள் வீடுகளுக்கு அனுப்பி விட்டனர். ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்புவதற்காக மக்கள் 50 நாட்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். ஆயின் 20 மாதங்களில் மக்கள் மொட்டின் ஆட்சியில் நம்பிக்கை இழந்து விட்டனர். 

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் நாட்டை ஆண்ட சிங்களத் தலைவர்கள் நாட்டின் சமூக ஐக்கிய ,பொருளாதார, அரசியல் அபிவிருத்தியில் தோல்வி கண்டது மட்டுமே வரலாறாகவுள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்கு நிலையான தீர்வு காண்பதும், புலம்பெயர்மனித வளங்களையும், வல்லுனர்களையும்,அவர்களது முதலீடுகளையும் பயன்படுத்துவதுந்தான் இந்த நாட்டுக்குள்ள சாத்தியமான செயற்பாடுகளாகும்.மாறாக அந்நிய நாடுகளுக்கு நாட்டின் வளங்களை விற்பதன் மூலம் நாட்டை அடிமைத்துவ நிலைக்கே கொண்டு செல்ல முடியும். என தெரிவித்தார்.





SHARE

Author: verified_user

0 Comments: