21 Jan 2021

வெள்ளத்தால் அள்ளுண்டுபோன ஆனைகட்டியவெளி வீதி புணரமைப்பு.

SHARE

வெள்ளத்தால் அள்ளுண்டுபோன ஆனைகட்டியவெளி வீதி புணரமைப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் பெய்த பலத்த மழையினால் பல வீதிகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் மாவட்டத்தின் படுவாங்கரைப் பகுதியின் மண்டூர் கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட ஆனைகட்டியவெளிமண்டூர் பிரதான வீதி கடந்த மழை வெள்ளத்தில் அள்ளுண்டு போயுள்ளது. தற்போது மழை ஓய்ந்துள்ள போதில் அவ்வீதியைப் பயன்படுத்திவரும் பொதுமக்களும், விவசாயிகளும், பல்வேறுபட்ட அசௌகரியங்களையும், சிரமங்களையும் எதிர்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அவ்வீதியை அப்பகுதி மக்களின் ஒத்துழைப்புடன் சிரமதானத்தின் மூலம் முதற்கட்டமாக செப்பநிட்டு தற்போதைய நிலைக்கு மக்கள் பாவனைக்கு விடலாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) போரதீவுப்பற்றுப் பிரதேச சபை தவிசாளரிடம் எடுத்துக் கூறியதற்கிணங்க மண்டூர் கமநல கேந்திர நிலையம், போரதீவுப்பற்று பிரதேச சபை, போரதீவுப்பற்று பிரதேச செயலகம், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் உள்ளிட்ட பலரின் பிரசன்னத்துடன், வியாழக்கிழமை (21) அவ்வீதி  அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள், உள்ளிட்ட பலரின் ஒத்துழைப்புடன் சிரமதானம் மூலம் செப்பனிடப்பட்டது.

அண்மையில் பெய்த பலத்த மழைவெள்ளத்தினால் முற்றாக அள்ளுண்டுபோன இக்குறித்த வீதியை மக்கள் போக்குவரத்துக் செய்யக்கூடிய அளவிற்கு தற்போதைய நிலையில் செப்பனிடப்பட்டுள்ளதானது வரவேற்கத்தக்கது, விவசாய வீதியாகக் காணப்படு இவ்வீதியில், முற்றாக நிரந்தரமாக சிறிய பாலங்கள் அமைத்து, கொங்றீட் வீதிகாக மாற்றப்படும் பட்சத்திலேயே இவ்வீதி எதிர்வரும் காலத்தில் வரும் வெள்ள அனர்த்தத்திற்கும் தாக்குப்பிடிக்கும் என அப்பகுதி விவசாயிகளும், பொது மக்களும் தெரிவிக்கின்றனர்.

எனினும் தற்போதைய நிலையில் வெள்ளத்தில் அள்ளுண்டுபோய் கவனிப்பாரற்குக் கிடந்த இவ்வீதியை சிரமதானத்தின் மூலம் செப்பனிடுவதற்கு முன்னின்ற நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் அவர்களுக்கு நன்றியைத் தெரிவிப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

































SHARE

Author: verified_user

0 Comments: