7 Sept 2020

தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டிய பொறுப்பில் புத்திஜீவிகளும் புலம்பெயர் அமைப்புக்களும்.

SHARE

(ராஜ்)

தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டிய பொறுப்பில் புத்திஜீவிகளும் புலம்பெயர் அமைப்புக்களும்.

தமிழ் மக்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் முகமாக தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கிடையே ஏற்பட்டு வருகின்ற பிளவினை தடுத்து தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைக்கும் நடவடிக்கைகளில் புலம்பெயர் அமைப்புக்களும், புத்திஜீவிகளும் ஈடுபட வேண்டும் என மூதூர் பிரதேச சபை உப தவிசாளர் சி.துரைநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்... தமிழ் மக்களை அரசியல், பொருளாதார ரீதியாக பலப்படுத்தி அவர்களுக்கான நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டிய தமிழ்க் கட்சிகள் பிரிந்து செயற்படுவது தற்போதைய சூழலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இன்றைய நிலையில் நாம் பேரம்பேச முடியாத சக்தியாக மாறியுள்ளோம். இது எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத, சகித்துக் கொள்ள முடியாத பல்வேறுவகையான பின் விளைவுகளை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. காலங்காலமாக எமக்குள் ஏற்பட்டு வருகின்ற பிளவே இன்றுவரை எமக்கான ஒரு தீர்வை எட்டுவதற்கு பாதகமாக அமைந்து வருகின்றமையை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அத்துடன் தமிழ் மக்கள் அரசியல் விடையத்திலாவது ஓரணியாக ஒன்றுபட்டு இயங்க வேண்டியது காலத்தின் தேவையாகும். இக்கட்சிகளை ஒன்றாக்கி ஓரணியில் பயணிக்க வைக்க வேண்டிய பொறுப்பு தற்போது புத்திஜீவிகளினதும், புலம்பெயர் அமைப்புகளினதும் கைகளிலேயே தங்கியுள்ளது.

இன்றைய நிலையில் தீர்வோடு சேர்த்து அபிவிருத்தியையும் பெற்றுக் கொள்ளவேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருந்தாலும் அபிவிருத்தியை சுதந்திரமாக அனுபவிப்பதற்கான சூழலும் எமக்கு இருக்க வேண்டும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இதற்காக தமிழ் மக்களாகிய நாம் அரசியல் ரீதியாக ஓரணியாக இயங்கி அரசுடன் பேரம்பேசி உடன்பாட்டு அரசியலையும், எமக்கு அநீதி இழைக்கப்படுகின்ற விடையங்களில் எதிர்ப்பையும் வெளிப்படுத்தி எம்மை பலப்படுத்த வேண்டும். இதன் மூலமே எமக்கான நீதியானதும், சுதந்திரமானதும் சாத்தியமானதுமான நிரந்தர தீர்வை பெற்றுக் கொள்ள முடியும். எனவே தமிழ் கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான அழுத்தங்களை புலம்பெயர் அமைப்புக்களும் புத்திஜீவிகளும் வழங்கி தமிழ் மக்களுக்கான அரசியல் கட்சிகளை வழிநடத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.








SHARE

Author: verified_user

0 Comments: