30 Jul 2020

மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுத்தேர்தலுக்கான வாக்கெண்ணும் பணிகளில் ஈடுபடும் உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான பயிற்சிகள் இன்றுடன் நிறைவு.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுத்தேர்தலுக்கான வாக்கெண்ணும் பணிகளில் ஈடுபடும் உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான பயிற்சிகள் இன்றுடன் நிறைவு.பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2020 இற்காக வாக்கெண்ணும் பணிகளில் ஈடுபடும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான பயிற்சிகள் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமாகிய திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையில் புதன்கிழமை (29) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இரண்டு கட்டங்களாக இடம்பெற்றது.

இவ் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான பயிற்சியின்போது அரசாங்க அதிபர் கலாமதி மத்மராஜா கருத்து வெளியிடுகையில் கடந்த காலங்களில் வாக்கெண்ணும் பணிகளில் ஈடுபட்டுள்ள அனுபவம் இருந்தாலும் இம்முறை கொவிட்-19 சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி தேர்தல் நடைபெறவுள்ளது. அவ்வாறு சுகாதார முறைப்படி இத்தேர்தல் வாக்கெண்ணும் பணிகளில் உத்தியோகத்தர்கள் ஈடுபடுவதை உறுதிப்படுத்தி அமைதியானதும் நேர்மையானதும், சுமுகமாகவும் இப்பாராளுமன்ற பொதுத் தேர்தலை நடாத்தி முடிவுகளை  அறிவிக்க அனைவரும் ஒத்துளைப்பு நல்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும் 2 பிரதான வாக்கெண்ணும் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள 67 வாக்கெண்ணும் மண்டபங்களில் இவ்வாக்கெண்ணும் பணிகள் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு வாக்கெண்ணும் மண்டபங்களின் அளவுகளுக்கேற்ப 23 தொடக்கம் 29 வரையான உத்தியோகத்தர்கள் பிரதான வாக்கெண்ணும் அலுவலரின் தலைமையின் கீழ் இப்பணிகளை மேற்கொள்ளவுள்ளனர். இவ்வாக்கெண்ணும் மண்டபங்களுக்கு அவற்றின் அளவு மற்றும் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கைக்கேற்ப 06 ஆயிரம் தொடக்கம் 10 வரையான வாக்குகள் எண்ணுவதற்காக வகுக்கப்பட்டுள்ளது. இதனால் இம்முறை வாக்கெண்ணும் பணிகள் இலகுவாக அமையுமென எதிர்பார்க்கப்படுவதாக உதவித் தேர்தல் ஆணையாளர் ஆர். சசீலன் கருத்துத் தெரிவித்தார். 

மேலும் இவ் 67 வாக்கெண்ணும் மண்டபங்களில் கடமைபுரியும் 214 உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்குமான பயிற்சியினையும், தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஆர். சசீலன் வழங்கிவைத்தார்.

இம்முறை கல்குடா மற்றும் பட்டிருப்புத் தேர்தல் தொகுதிகளில் அளிக்கப்பட்ட வாக்குகள் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 27 வாக்கெண்ணும் மண்டபங்களிலும், மட்டக்களப்புத் தேர்தல் தொகுயில் அளிக்கப்பட்ட வாக்குகள் மகாஜனக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 33 வாக்கெண்ணும் மண்டபங்களிலும், தபால்மூலம் அளிக்கப்பட்ட வாக்குகள்  இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 7 வாக்கெண்ணும் மண்டபங்களிலும் எண்ணப்படவுள்ளது. 

இவ்வாக்கெண்ணும் பணிகள் 3 கட்டங்களாக இடம்பெறவுள்ளதுடன் முதலாம் கட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளும், இரண்டாம் கட்டத்தில் கட்சிகள், சுயேற்சைக் குழுக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குகளும், நிராகரிக்கப்பட்ட வாக்குகளும் கணக்கிடப்படும். மூன்றாம் கட்டத்தில் ஆசனங்கள் பெற்றுக் கொண்ட கட்சிகள், சுயேச்சைக் குழுக்களின் விருப்பு வாக்குகள் எண்ணப்படவுள்ளது. இப்பணிகள் தேர்தல் தினத்திற்கு மறுதினமாகிய ஆகஸ்ட் 06 ஆந்திகதி காலை 08 மணிக்கு ஆரம்பித்து அதேதினத்தில் முடிவுகளும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகள் நிறைவுறுத்தப்பட எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 







SHARE

Author: verified_user

0 Comments: