10 Nov 2019

மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்க மாட்டேன் - மட்டக்களப்பு களுதாவளையில் சஜித் தெரிவிப்பு.

SHARE
மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்க மாட்டேன் - மட்டக்களப்பு களுதாவளையில் சஜித் தெரிவிப்பு.
இந்தநாட்டை இனவாதம், மதவாதம் இல்லாமல் சிறந்த சமுதாயகட்டமைப்பாக நான் மாற்றியமைப்பேன். நாட்டிலே மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்க மாட்டேன். கொலை, கொள்ளை, கடத்தல்கள் முற்றாக ஒழிக்கப்பட்டும் மற்றும் போதைப்பொருள் கடத்தல்கள், சிறுவர் துஸ்பிரயோகங்கள் நாட்டிலே தலைதூக்கி ஆடுவதை நிறுத்தியும், ஒழித்தும் நாட்டை சுபீட்சமிக்க, ஊழற்ற, ஜனநாயகத்துடன் அனைவரும் சமத்துவமாக வாழும் உரிமையை வழங்குவேன்.நாட்டிலே இனவாதம்,மதவாதம் இல்லாத சிறந்த சமூககட்டமைப்புடன் அனைவரும் இந்த நாட்டுப்பிரஜை என்னும் தூரநோக்குடைய தூயதொரு கலை,கலாச்சார, பண்பாடுமிக்க நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு தாருங்கள் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் பிரசாரக் கூட்டமானம் களுதாவளை பொது விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (09) ஐக்கிய தேசியகட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளருமான சோ.கணேசமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்திலே இவ்வாறு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் அமைச்சர்களான  றிசாட் பதியூதின், மனோ கணேசன், தயாக கமகே, முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஜித போகல்லாகம, ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தமிழர் பிரதேசத்திற்கான அமைப்பாளர் ரி.கங்காதரன், ஆரையம்பதி பிரதேச தவிசாளர் எஸ்.மகேந்திரலிங்கம், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.

இங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்....

இக்கூட்டத்தை ஒழுங்குபடுத்திய முன்னாள் பிரதியமைச்சரும், ஐக்கிய தேசியகட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளருமான கணேசமூர்த்தியை பிரதிநிதித்துவப்படுத்தி அவருக்கு இப்பகுதி தமிழ்மக்களின்  அபிவிருத்தியை சிறப்பாக முன்னெடுத்து அபிவிருத்தியை உச்சக்கட்டத்திற்கு கொண்டு வருவேன். எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு பின்னர் என்னால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தியை பட்டிருப்பு தொகுதிவாழ் மக்களுக்கு பட்டிருப்பு தொகுதிக்கு முன்னுரிமை கொடுத்து  மண்டூர்-குருமண்வெளி பாலத்தை நான் கட்டித் தருவேன். அதனை நிச்சயமாக நான் செய்து காட்டுவேன். இதனை இப்பிரதேச மக்களுக்கு விஷேடமாக செய்து காட்டி தமிழ்மக்களின் பொருளாதார போக்குவரத்தை விருத்தி செய்து பட்டிருப்பை பொருளாதார கேந்திர நிலையமாக மாற்றியமைப்பேன்.

பட்டிருப்பை மையப்படுத்தி போரதீவுப்பற்றில் மாபெரும் ஆதார வைத்தியசாலை ஒன்றை என்னுடைய ஆட்சிக்காலத்தில் கட்டித் தருவேன் என்பதை உறுதிமொழியாக தெரிவிக்கின்றேன். இதனோடு கிராமிய, ஆயுள்வேத வைத்தியசாலைகளை மேம்படுத்தி பட்டிருப்பு தொகுதி மக்களின் சுகாதார நலனோம்பு வசதி வாய்ப்புக்களை இம்மக்களுக்கு ஏற்படுத்தி கொடுப்பேன்.

2025 ஆவது  ஆண்டாகும் போது அனைவருக்கும் நிழல் திட்டத்தினால்  மட்டக்களப்புக்கும், நாடு முழுவதிலும் மக்களுக்கும் வீட்டுத்திட்டத்தை வழங்கி அனைத்தின மக்களினது வீட்டுத்தேவைகளை நிறைவு செய்து வைப்பேன். தும்பங்கேணி விவசாய நீர்ப்பாசன குளத்தை புனரமைப்பு செய்து அதிகமான விவசாயிகளை இணைத்து விவசாயச்செய்கையை விரைவுபடுத்தி இம்மக்களை விவசாயத்தில் முன்னேற்றம் காணவைப்பேன்.

இதுவரையும் இப்பிரதேச மக்களை அரசியலுக்குக்காக மட்டும் ஆயுதமாக பயன்படுத்திய சந்தர்ப்பவாத செயற்பாடுகளை கச்சிதமாக துடைத்தெறிந்து மக்களின் அடிப்படைப்பிரச்சனைகளை இனம், மதம், மொழி, ஜாதிக்கு அப்பால் அனைவரும் இந்தநாட்டு பிரஜைபோல் முழுமனதுடன் அடிப்படைப்பிரச்சனைகளைக்கு நான் ஜனாதிபதியாக வந்ததும் செய்து காட்டுவேன்.  வட கிழக்கிற்கு வேறு வேறாக பிரித்து பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளையும், பொருளாதாரங்களையும் கருத்திற்கொண்டு  சர்வதேச அபிவிருத்தி மாநாடுகளை நடாத்துவேன். இதனால் வடகிழக்கு பொருளாதாரம் மேன்மையடைச் செய்வேன்.

வறுமைப்பட்ட மக்களின் எண்ணத்துக்கு நான் மதிப்பளித்து சமுர்த்தித்திட்டத்தை வழங்கி வறுமைப்பட்ட மக்களின் ஏழ்மையை நீக்குவேன்.எனது தந்தையார் ரணசிங்க பிரேமதாச அவர்கள்  வறுமையான மக்களுக்கு ஜனசவிய, சமுர்த்தி ஆகிய இரண்டையும் ஒருமித்து மக்களுக்கு செய்து ஏழ்மையை நீக்கியும்,அன்று நாட்டிலே சிறந்த சமுதாயக்கட்டமைப்பை உருவாக்கியும் செய்தார்.மறைந்த எனது தந்தையாரின் நல்லெண்ணங்களை நாட்டுமக்களுக்கு மீண்டும் செய்து காட்டுவேன்.

இலங்கையில் உள்ள பாடசாலைகளில் 44 இலட்சம் மாணவர்கள் தற்போது கல்வி வருகின்றார்கள்.தற்போது மாணவர்களுக்கு இலவசமாக ஒரேயொரு சீருடை துணிதான் வழங்கப்படுகின்றது.நான் ஜனாதிபதியாக வந்த பிற்பாடு இரண்டு சீருடைத்துணிகளும், பாதணி ஒன்றும், இலவச மதிய உணவும் வழங்குவேன்.

விவசாயத்துறையில் நெல்,தேயிலை,இறப்பர்,தென்னை,ஏலம்,கறுவா உட்பட அனைத்து பயிர்ச்செய்கையிலும் ஈடுபடுகின்ற விவசாயிகளின் நன்மைகருதி  இலவசமாக உரமானியம் வழங்கி விவசாயிகளை கௌரவப்படுத்தி,அவர்களை ஊக்குவித்து பொருளாதரத்தில் தன்னிறைவு காண்பிப்பேன்.

இன்று மாவட்டத்தில் வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு அவர்களின் திறன்விருத்திக்கு ஏற்றாற்போல் பட்டிருப்பில் 3தொழிற்சாலைகளுடன் மாவட்டத்தில் 14 கைத்தொழில் பேட்டைகளை உருவாக்குவேன்.அதேபோன்று நாடுபூராகவும் உள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒவ்வொரு கைத்தொழில்பேட்டையை உருவாக்குவேன்.

பட்டிருப்புத் தொகுதியை மையப்படுத்தி நானோ தொழிநுட்ப, தகவல் தொழிநுட்ப, ஆங்கிலத்தொழிநுட்பம்,வணிகத்தொழிநுட்பத்தை இளைஞர் யுவதிகளுக்கு ஊக்குவித்து சவால்மிக்க தொழிநுட்ப உலகதிற்கு நான் தயார்படுத்துவேன்.இவ்வேலைத்திட்டம் நாடுபூராகவும் உள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் செய்துகாட்டுவேன்.

நாடுபூராகவும் 190,000 பாலர் பாடசாலைகள் இருக்கின்றது.இங்கு ஆசிரியர்களாக,உதவி ஆசிரியர்களாக கடமையாற்றுவர்களை நியமனம் வழங்கி ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவேன்.பாலர் பாடசாலைகளை மையப்படுத்தி பொதீக,உட்கட்டுமானம் வேலைகளை செய்துகாட்டுவேன்.சிறிய,நடுத்தர தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்து நாட்டிலே பொருளாதாரத்தை மேம்படுத்துவேன்.போக்குவரத்துச்சேவைகளை பொதுமக்களுக்கு ஆற்றிக்கொள்ளும் முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கு உச்சக்கட்டமாக மூன்று இலட்சம் வட்டியில்லாமல் கடன்வழங்குவேன்.

இந்தநாட்டை இனவாதம்,மதவாதம் இல்லாமல் சிறந்த சமுதாயகட்டமைப்பாக நான் மாற்றியமைப்பேன்.நாட்டிலே மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்க மாட்டேன்.கொலை,கொள்ளை,கடத்தல்கள் முற்றாக ஒழிக்கப்பட்டும் மற்றும் போதைப்பொருள் கடத்தல்கள்,சிறுவர் துஸ்பிரயோகங்கள் நாட்டிலே தலைதூக்கி ஆடுவதை நிறுத்தியும்,ஒழித்தும் நாட்டை சுபீட்சமிக்க,ஊழற்ற,ஜனநாயகத்துடன் அனைவரும் சமத்துவமாக வாழும் உரிமையை வழங்குவேன்.நாட்டிலே இனவாதம்,மதவாதம் இல்லாத சிறந்த சமூககட்டமைப்புடன் அனைவரும் இந்த நாட்டுப்பிரஜை என்னும் தூரநோக்குடைய தூயதொரு கலை,கலாச்சார,பண்பாடுமிக்க நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு தாருங்கள்.இந்த ஒத்துழைப்பை எதிர்வரும் 16ஆம் திகதி வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று உங்களின் எண்ணமான அன்னப்பறவைக்கு அருகில் புள்ளடியிட்டு ஜனாதிபதி ஆக்கிக்காட்டுங்கள்.நான் உங்கள் காலடிக்கு வந்து உங்களின் தேவையை நிறைவேற்றித்தருவேன் எனத்தெரிவித்தார்.











SHARE

Author: verified_user

0 Comments: