24 Mar 2019

ஜெனீவாவில் தற்போது கொண்டுவரப்பட்ட 40.1 தீர்மானத்தை அரசாங்கம் சரியான முறையில் நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் - யோகேஸ்வரன் எம்.பி

SHARE
ஜெனீவாவில் தற்போது கொண்டுவரப்பட்ட 40.1 தீர்மானத்தை அரசாங்கம் சரியான முறையில் நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் வலியுத்தியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்களும், காணி உறுதிப்பத்திரங்களும் வழங்கும் நிகழ்வும் வெபர் விளையாட்டு மைதானத்தில்  சனிக்கிழமை (23) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு மேலும் தெரிவித்த அவர்,

வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாக முன்னைய அரசு கூறியதைப் போன்று இந்த அரசாங்கமும் படைவீரர்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம் என கூறினால், அது தமிழ் மக்களுக்கு செய்யும் பாரிய துரோகமாகவே அமைவதோடு உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி  மாண்புமிகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் சேர்ந்து பாரிய சதி முயற்சியில் ஈடுபட்டார்கள். தமிழ்தேசிய கூட்டமைப்பின் பெரும் ஆதரவோடு மீண்டும் ரணில் விக்கிரமசிங்க பிரதமரானார்.

நாட்டிலே ஜனநாயகத்தை நிலைநிறுத்த வேண்டும். நாட்டின் ஜனநாயகத்தை மதிக்கின்றவர்களுக்கு தமிழ்தேசிய கூட்டமைப்புடன் ஆதரவுடன் மீண்டும் ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் தெரியாதவர்களுக்கு இதுதான் அரசியல் யாப்புச்சட்டம் என்று சாட்டையடி கொடுத்து நிரூபித்துக் காட்டியுள்ளோம்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தன்வசம் பல அமைச்சர்களை வைத்திருக்கின்றார். பிரதமர் வடக்கை அபிவிருத்தியில் கட்டியெழுப்புவதில் துரித கவனம் செலுத்துகின்றார் என்று கிழக்கு மாகாண மக்கள் வேதனையுடன் இருக்கின்றார்கள். வடக்குக்கு வெளிநாட்டுத் தூதுவர்கள், பிரதிநிதிகள் சென்று பார்வையிட்டு யுத்தத்தினால் அழிவைச் சந்தித்த வடக்கு கட்டியெழுப்பப் படுகின்றது. கௌரவ பிரதமரே இது கிழக்கு மாகாணமாக வைத்திருக்கின்றீர்களா? அல்லது கிழக்கிஸ்தானாக வைத்திருக்க விரும்பியுள்ளீர்களா? நான் உங்களிடம் கேள்வி கேட்க விரும்புகின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சை குளத்திலிருந்து ஏறாவூர், ஓட்டமாவடி, காத்தான்குடி போன்ற பிரதேசங்களுக்கு குடிநீர் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் உன்னிச்சையை அண்மித்த 14 தொடக்கம் 20 வரையிலான கிராமங்கள் குடிநீரால் தொடர்ச்சியாக பாதிக்கப்படுகின்றார்கள். வவுணதீவு பொதுமக்களும் குடிநீரால் பாதிக்கப்படுகின்றார்கள். குடிநீருக்கு பல போராட்டங்களை மக்கள் முன்னெடுக்கின்றார்கள். அதுமட்டுமல்ல குடிநீர் பிரச்சனை சம்பந்தமாக பொதுமக்கள் எங்களுக்கும் கைநீட்டுகின்றார்கள்.

ஆகவே பிரதமர் அமைச்சரை தெரிவு செய்த நாங்கள்; எங்கள் மக்களின் பிரச்சனைகள், தேவைகளை நிறைவேற்றித்தரவும். எதிர்வரும் ஏப்ரல் மாதம் முடிவடைதற்குள் குடிநீருக்காக ஏங்கும் எம்மக்களுக்கு 7000 மில்லியன்களை ஒதுக்கு குடிநீருக்கு முற்றுப்புள்ளி வைக்கவும்.

கிழக்கு மாகாணத்தின் தேவைகள், அபிவிருத்திகள் அதிகமாக இருக்கின்றது. வீடில்லாப் பிரச்சனை பாரிய பிரச்சனையாகவுள்ளது. யுத்தத்தினால் அழிவடைந்த மக்களுக்கு 28,000 வீடுகள் வைத்திருக்கின்றது. இதில் 7,000 வீடுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. மீதியாகவுள்ள 21,000 வீடுகளுடன் 28,000 வீடுகளையும் கிழக்குக்கு வழங்குவதற்கு பிரதமர் கரிசனை செலுத்த வேண்டும்.

அதேபோன்று யுத்தத்தினால் அழிவடைந்துள்ள கிழக்கு மாகாணத்தின் தொழிற்சாலைகளை மீள்புனரமைப்பு செய்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பொருளாதாரம் கட்டியெழுப்ப வேண்டும். குறிப்பாக வாழைச்சேனை கடதாசிசாலையின் தவிசாளரை நியமிக்கும்போது எங்களிடம் கேட்டுத்தான் தவிசாளர் நியமிக்க வேண்டுமென பிரதமரை கேட்டுக்கொள்கின்றேன். அவ்வாறு இல்லாவிடில் தொடர்ச்சியாக தமிழ்தேசிய கூட்டமைப்பு போராடவேண்டி வரும்.

தமிழ் மக்கள் எதிர்பார்த்திருக்கும் நீடித்து நிலைத்திருக்ககூடிய அரசியல் தீர்வுக்கும், அபிவிருத்திக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கரிசனை செலுத்தி தமிழ்மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றித்தர வேண்டும்.இந்த எதிர்பார்ப்பிலே இந்த அரசாங்கத்திற்கு தாங்கள் ஆதரவு வழங்கியுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: