கருணா அம்மான் அவர் செய்த அநியாயங்களிலிருந்து தப்பிக்கவே முடியாது. அவர் நீதியின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படுவார்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் காட்டம்
நீதி, தருமம், நியாயம் எப்போதாகிலும் பதில் சொல்லித்தான் ஆகும். அதிலிருந்து கருணா அம்மான் தப்பிக்கவே முடியாது. அவர் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார். நீதியின் முன் நிறுத்தப்படுவார். அவருக்குத் தக்க தண்டனை கிடைக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் காட்டமாகக் கருத்து வெளியிட்டார்.
கருணா அம்மான் எனப்படும் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் சமீப சில நாட்களுக்குள்ளாக வெளியிட்டு வரும் கருத்துக்கு எதிர்வினையாற்றிய யோகேஸ்வரன் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்த யோகேஸ்வரன்,
வங்குறோத்து அரசில் நடத்துகின்றவர்கள் எங்களை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக போலிப் பிரமரையும் போலி அமைச்சரவையையும் இந்த நாட்டிலே ஏற்படுத்தி சில நாட்கள் துள்ளிக் குதித்தவர்கள் மீண்டும் துள்ளிப் பாய வந்திருக்கிறார்கள்.
இந்த வங்குறோத்துத் துள்ளலை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
அவர்களது அரசியல் முற்றிலும் வங்குறோத்து அரசியலேயாகும்.
எங்களது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்கின்றவரிடம் நீ கடத்திய பிள்ளைகளை உடனடியாக விடுதலை செய் என்று கோரி உனக்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்வோம் என்று நான் கூறிக் கொள்கின்றேன். அதை நீ கவனத்தில் கொள்ள வேண்டும்.
எங்களது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கெதிராகவோ, உறுப்பினர்களுக்கு எதிராகவோ ஆர்ப்பாட்டம் செய்வதற்கு உனக்கு அருகதையில்லை.
நீ பல கொலைகளைச் செய்தவன். கொள்ளையடித்தவன், கடத்தலில் ஈடுபட்டவன், அதே நேரம் மஹிந்த ராஜபக்ஷவைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருப்பதனால் இன்றுவரை பாதுகாப்பாக இருந்து கொண்டிருக்கின்றாய்.
ஆனால், நீதி, தருமம், நியாயம் எப்போதாகிலும் பதில் சொல்லித்தான் ஆகும்.
அதிலிருந்து கருணா அம்மான் தப்பிக்க முடியாது. அவர் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார். நீதியின் முன் நிறுத்தப்படுவார். அவருக்கும் தண்டனை கிடைக்கும்.
ஆகவே, மக்கள் ஒன்றை உணர்ந்துகொள்ள வேண்டும் என்ன பிரச்சினை என்றாலும் நீங்கள் எங்களை எந்நேரமும் தொடர்பு கொண்டு கலந்துரையாடலாம்.
நாங்கள் எந்தப் பிரச்சினையையும்பற்றிக் கதைப்பதற்காகவே இந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவைக் கொடுத்துள்ளோம்.
அதுவல்லாமல் வெறுமனே எங்களது நலனுக்காக ஆதரவைக் கொடுக்கவில்லை. எமது மக்களின் அடிப்படைத் தேவை தொடக்கம் அத்தனை பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதற்கு உதவ வேண்டும் என்றுதான் ஆதரவைக் கொடுத்திருக்கிறொம்.
ஆகவே, கடிவாளம் எங்கள் கையில் இருக்கிறது. நாங்கள் ஒருபோதும் கவலைப்படத் தேவையில்லை.
எடுத்ததெற்கெல்லாம் ஆர்ப்பாட்டம் செய்வதைவிட நாங்கள் பேசக் கூடியதைப் பேசித் தீர்க்க வேண்டும்.
அது முஸ்லிமாக, சிங்களமாக, தமிழாக இருக்கலாம் நாங்கள் முதலிலே பேசுவோம்.
நியாயமான தீர்வு கிடைக்கவில்லையாயின் வீதிக்கு இறங்குவோம் ஆகவே மக்கள் கவலைப்படத் தேவையில்லை. மக்களது பிரச்சினைகளை இனங்கண்டு நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். நாம் முகங்கொடுக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் நியாயமான தீர்வு நிச்சயம் கிடைக்கும்.” என்றார்.
0 Comments:
Post a Comment