3 Nov 2018

கிழக்குத் தமிழர்களின் இருப்புக்கும், அரசியல் ரீதியான அபிலாஷையுடன் கூடிய எண்ணத்துடன் தமிழ்மக்களை பாதுகாப்பதற்கும்தான் நான் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றுள்ளேன் - அமல்

SHARE
கிழக்குத் தமிழர்களின் இருப்புக்கும், அரசியல் ரீதியான அபிலாஷையுடன் கூடிய எண்ணத்துடன் தமிழ்மக்களை பாதுகாப்பதற்கும்தான் நான் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றுள்ளேன் என தமிழ் தேசியக் கூட்டமை;பபின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கிழக்கு பிராந்திய அபிவிருத்தி பிரதியமைச்சருமான எஸ்.வியாழேந்திரன்(அமல்) தெரிவித்தார்.
கிழக்குப் பிராந்திய அபிவிருத்தி பிரதி அமைச்சராக பதவியை பொறுப்பேற்றபோது அவரை சனிக்கிழமை (3) தொடர்பு கொண்டு கேட்டபோதே இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

நான் கிழக்குத் தமிழர்களின் நிலைப்பாட்டையும், கிழக்குத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கும், தமிழர்களுக்கு தார்மீக நோக்கத்துடன் நல்லது செய்ய வேண்டும். தமிழ் மக்கள்மீது வைத்துள்ள தூரநோக்குடைய சிந்தனையின் அடிப்படையில்தான் நான் நாடாளுமன்ற பதவியை வைத்துக்கொண்டு அமைச்சுப்பதவியை ஏற்றுள்ளேன். மாறாக கதிரையை சூடாக்கி வைப்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லை. தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை இனியும் வேடிக்கை பார்த்து இருக்க முடியாது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தில் தெளிவான சூழ்நிலையில் தமிழர்களை பல்வேறுபட்ட விடயங்களில் தீர்வு பெற்றுக் கொடுப்பதற்கும், அமைச்சுப் பதவியை பாரமெடுத்துள்ளேன். பல பேர் துரோகம் என்கிறார்களே நான் எப்படி துரோகம் தமிழ் மக்களுக்கு துரோகம் செய்துள்ளேன். தமிழரின் காணிகள் ஏனைய சமூகத்தால் வலுக்கட்டாயமாக பிடிக்கப்படும் போது தன்னம்தனியாக குரல் கொடுத்தேன். அப்போது இருந்த ஏனைய தமிழ் தேசிய கூட்டமைப்பின்  உறுப்பினர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள். இன்று வரை மட்டக்களப்பில் காணி பிடிபட்டே கொண்டிருக்கிறது. தமிழர்களின் காணிகளை யார் தடுப்பார்? காரணம் தமிழர்கள் மத்தியில் சாணாக்கியமுள்ள அரசியல் பலமில்லை.

முறாவோடை காணிகள், பாடசாலை மைதான காணிகள், வாலமன்கேணி,
தளவாய், மஞ்சந்தொடுவாய், உள்ளிட்ட காணிகள் துணிச்சலுடன் பிடிக்கப்படுகின்றது. இவற்றை தடுப்பதென்றால் வாய்ப்பேச்சில் இல்லை.

புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை வலுக்கட்டாயமாக அரசியல் பலத்தின்மூலம் அமைத்த போது தனியாக நின்று நானே எதிர்த்தேன். அப்போது ஏனையவர்கள் எங்கே போனார்கள்?

கிழக்கில் இருந்தவர்கள் ஏன் இவ்விடயத்தில் மௌனமானர்கள்?
எதிர்கட்சி தலைவருக்கு இல்லாத அதிகாரமா? ஏன் மௌனம் காத்தார்கள்? ஒரு சத்தமிட்டாலே நாடாளுமன்றம் கேட்கும் என்றால் ஏன் கேட்கவில்லை? மட்டக்களப்பு மாவட்ட தமிழ்மக்களின் நன்மைக்காககவும், இருப்புக்காகவும்
ஜனாதிபதியிடம் தனியாகவும், எதிராகவும், நான்தான் மகஜர் கொடுத்தேன். இது தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு புலப்படாது. எனவே கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ்மக்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் சிந்தித்து செயற்படவேண்டும். நிதானமாக சிந்தித்து செயற்பட வேண்டும்.

வரும் அரசை எதிர்ப்பார்கள். ஆனால் வரவு செலவு திட்டம், நம்பிக்கை இல்லா பிரேரனைக்கு ஆதரவு கொடுப்பார்கள். இது துரோகமில்லையா தமிழ் மக்களே.

நான் அமைச்சு பதவி எடுத்தது எனது குடும்பத்துக்கல்ல. கிழக்கில் உள்ள ஒட்டு மொத்த தமிழ்மக்களுக்கும் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.தேர்தல் காலங்களில் படை பட்டாளங்களுடன் தமிழ்மக்களின் வீடுகளுக்கு சென்று வாக்கு கேட்கப் போகின்றோம். தமிழ்மக்கள் வாக்களிக்கின்றார்கள்.அவர்கள் நம்பிக்கை, எதிர்பார்ப்புடன் தான் வாக்களிக்கின்றார்கள். தேர்தல்கள் முடிந்தால் வாக்களித்தவர்களின் வாசல் படியை தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் எட்டிப்பார்ப்பதில்லை. இவ்வாறு இருந்தால் தமிழ்மக்களின் எண்ணம் எப்படியிருக்கும்.மாற்றுக்கட்சிக்குத்தான் வாக்களிப்பார்கள். தமிழ்மக்களை இனியும் ஏமாற்ற முடியாது.

தமிழ்மக்கள் மத்தியில் அபிவிருத்தி என்பதே இல்லை. நமது நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஒதுக்கப்பட்ட நிதிகளில் ஒரு கிராமத்திற்கு ஒரு இலட்சம் , ஐம்பதினாயிரம் மட்டும்தான் தமிழ் கிராமத்திற்கு ஒதுக்கமுடியும்.
ஏனைய சமூகத்திற்கு கோடி கணக்கில் அபிவிருத்திக்கு ஒதுக்கின்றார்கள்.
இதற்காக நான் பல அமைச்சுக்களிடம் கை ஏந்தி அபிவிருத்திகள் செய்தேன். காரணம் தமிழ் மக்களின் தேவைப்பாடு இவ்வாறு காணப்படுகின்றது.

மாகாணசபை, நகர சபைகள், பிரதேச சபைகள் என்பன  தாரை வார்க்கப்பட்டுள்ளது .இது தமிழின துரோகமில்லையா?
இதற்காக நான் மட்டும்தான் எதிராக குரல் எழுப்பினேன்.
படித்த தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு வேலையில்லை. வேலை கொடுப்பதற்கு அரசியல் பலமில்லை. மாற்று சமூகத்தில் உள்ளவர்களிடம்தான் பணத்தை கொடுத்து வேலையை பெறவேண்டிய துர்ப்பாக்கியநிலையில் தமிழர்கள் இருக்கின்றார்கள்.

கல்வித்தராதரம் உள்ள தமிழ் உத்தியோகத்தர்கள் அரசியல் பலமின்மையால் தட்டிக் கழிக்கப்படுகின்றார்கள். திணைக்களங்களில் நிர்வாக பிரச்சனைகள் காணப்படுகின்றது. இதனைதட்டி கேட்கவும், நியமிக்கவும் பலமில்லை.
இதற்குத்தான் அமைச்சுப் பதவி தேவையாகவுள்ளது.
ஒட்டு மொத்தத்தில் எதிர்கட்சி பதவியில் இருப்பதை விட அமைச்சு பதவி எடுத்து வேலைதிட்டங்கள் செய்வது சிறப்பானதாகும். நான் அமைச்சுப்பதவியை பொறுப்பேற்றதில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்மக்கள் எதுவித குழப்பமும், அச்சமும் கொள்ளத்தேவையில்லை. நான் உங்களுக்கு நல்லதை செய்யவுள்ளேன். வடக்கு மாகாணத்தில் இரண்டு அமைச்சுப் பதவி கிடைத்துள்ளது. வடக்கு மாகாணத்தின் அரசியல்தலைமைகள் முன்னுதாரணமாக செயற்படுகின்றார்கள். அதேபோன்று கிழக்கின் தமிழ் அரசியல்தலைமைகள் முனைப்புடன் செயற்படும் நம்பிக்கை உள்ளது எனத்தெரிவித்தார். 



SHARE

Author: verified_user

0 Comments: