மண்முனை வடக்கு பிரதேச செயலகம் நடத்திய மாபெரும் மகளிர் தின நிகழ்வு.
“எதிர்காலத்தை கட்டியெழுப்ப வலிமையான பெண் தான் வழிகாட்டி” என்ற தொனிப் பொருளின் கீழ் தேசிய வைபவமாக மகளிர் தின நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திலும் மகளிர் தின நிகழ்வு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம் தலைமையில் வெள்ளிக்கிழமை(07.03.2025) கோட்டமுனை மெதடிஸ்த தேவாலய முன்றில் நடைபெற்றது. மும்மத இறைவணக்கத்துடன் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி சுபா சதாகரன் அவர்களின் வரவேற்பு உரையுடன் ஆரம்பமானது.
இந்த மகளிர் தின நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் இயங்கிவரும் விஸ்வ பரத கலாலயா நாட்டிய பள்ளி மற்றும் நிருத்திய கலாலய மாணவர்களின் நடனங்கள் இடம்பெற்றதுடன் கலாசார மத்திய நிலைய கலைஞர்களின் நாடகமும் இடம்பெற்றன. இதன்போது மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இதன்போது பெண் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சியும், விற்பனை நிகழ்வும் இடம் பெற்றன.
மேலும் கலந்துகொண்ட உத்தியோகத்தர்களையும், மகளிர் சங்க மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களையும் களிப்பூட்டும் வகையில் வினோத விளையாட்டுக்களும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment